Last Updated : 03 Dec, 2016 12:02 PM

 

Published : 03 Dec 2016 12:02 PM
Last Updated : 03 Dec 2016 12:02 PM

மாற்றுத்திறனாளிகளல்ல- விதியை மாற்றும் திறனாளிகள்!

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

அமெரிக்கா முதல் அமைந்தகரை வரை…

சமீபத்தில் காதில் விழுந்த இரு வேறு முக்கியமான அரசியல்வாதிகளின் பேச்சும் அவர்களது நடவடிக்கையும்தான் இக்கட்டுரை எழுதுவதற்கு முக்கிய காரணம். அந்த இருவரில் ஒருவர் அமெரிக்கர். இன்னொருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

முதலாமவர் யார் தெரியுமா? அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்! தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபரைபோல் அவர் மேடையில் நடித்துக் காட்டியது அமெரிக்க ஊடகங்களில் பெரிய சர்ச்சையானது.

ஏன் ஒரு மேடைப்பேச்சு சர்ச்சையாக மாறியது?

இந்த சர்ச்சைக்கான காரணம், இப்பத்திரிகையின் செய்தியாளர் செர்ஜ் கோவலெஸ்கி மாற்றுத்திறனாளி என்பதாலும் அவரின் அங்க அசைவுகளைப் போல் மேடையிருந்தவாறே ட்ரம்ப் கிண்டலடித்ததும்தான். இதுபோன்ற நிகழ்வுகள், கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயகத்தை தூக்கிப் பிடித்து பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கக்கூடிய அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் முக்கிய அரசியல் தலைவர்கள் செயல்பாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வை எப்படி இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுக்கள்தாம்.

இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் பல தருணங்களிலும் இப்படி ஊனத்தையும், மாற்றுத் திறனாளிகளையும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஊனம் என்பது குறைபாடு அல்ல, மாறாக அதுவும் இயற்கையே என்பதை இச்சமூகம் ஏற்க மறுத்து வருகிறது.

ஊனம் என்பது இயற்கையின் பலவிதமான கூறுகளில் ஒன்றுதான் என்கின்ற பார்வை, நம் சமூகத்தில் மட்டுமல்ல, பல முன்னேறிய நாடுகளில்கூட உருவாகவில்லை என்பதுதான் உண்மை. அமெரிக்காவில் நிகழ்ந்தது போல, நம் நாட்டு அரசியல்வாதிகளும் மாற்றுத்திறனாளிகளை கேலி கிண்டலுக்கு உள்ளாக்குவது தொடர்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய சமூகத்தில் அரசியல் மேடைகளில், தொலைக்காட்சி விவாதங்களில் ஏறத்தாழ தொடர் நிகழ்வுகளாகவே மாறி போயிருக்கிறது என்பது தான் வேதனையின் உச்சகட்டம்.

சுயமரியாதையையும் முற்போக்கு சிந்தனையையும் அடிநாதமாகக் கொண்ட தமிழக அரசியல் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் போட்டி சட்டமன்றம் நடத்திய பொழுது, 'அணையில்லாத ஊருக்கு அணைக்கரை என்று பெயர் வைத்துவிட்டார்' என்ற கூற்றுக்கு மறுமொழி கூறும் பொழுது, 'நொண்டிக்கு நடராசன் என்றும், குருடனுக்கு கமலக்கண்ணன் என்றும் பெயர் வைப்பதில்லையா, அதுபோன்றுதான் இதுவும்' (சட்டமன்ற உறுப்பினரின் வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளன) என்று சொல்ல, அங்கு கூடியிருந்த அனைத்து உறுப்பினர்களும் வாய்விட்டு சிரித்தனர். அவர்களுக்கு இது சிரிப்பாக இருக்கலாம். அதனைத் தொலைக்காட்சியில் பார்த்த எங்களைப்போன்றவர்களுக்கு எவ்வளவு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஒருநிமிடம் இவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படம் ஒன்றில் வளர்ச்சிக் குறைபாடு உள்ள கதாபாத்திரத்தின் தாய் கதாபாத்திரம் 'உங்கள் மகள் என் மகனைப் போன்ற ஊனமுற்றவரையா காதலித்திருக்கிறாள்?' என்று சொல்ல, அதனைக் கேட்ட மாற்றுத்திறனாளி மகன், 'தன் அம்மாவே இப்படி கூறிவிட்டாரே' என்று மிகவும் மனம் வருந்தி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

பழைய தமிழ் சொலவடைகளை வைத்து ஊனத்தையும், மாற்றுத் திறனாளியையும் காட்டி, உவமையாக சித்தரித்து, எள்ளி நகையாடிய அரசியல் தலைவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டால், 'நான் ஊனமுற்றவர்களை கேவலப்படுத்துவதற்காக சொல்லவில்லை அது தவறான புரிந்து கொள்ளப்பட்டது' என்ற வழக்கமான பதில்தான் வரும்.

நான் மேலே குறிப்பிட்ட திரைப்படத்தின் தாய் கதாபாத்திரத்தின் அமைப்பு அவர் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தை அறியாமல் கூறுவதுபோன்று, திரைப்படத்தின் இயக்குநர் அமைந்திருப்பார். அதுவே, அத்தனை தூரம் மாற்றுத்தினாளிகளுக்கு மன வருத்தத்தையும், மன உளைச்சலுக்கும் உட்படுத்தி, தற்கொலைக்கு தூண்டும்வண்ணம் அமைந்திருக்கிறதென்றால், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற குத்துப் பேச்சுகளும், கேலி கிண்டல்களும், தொலைக்காட்சி விவாதம் மற்றும் அரசியல் மேடை அவமானங்களும் மாற்றுத் திறனாளிகளின் உள்ளங்களை எத்தனை தூரம் காயப்படுத்துகின்றன என்பதை அவரவர் மனசாட்சியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இது ஏதோ, ஒரு கட்சியை சார்ந்தவர் மாத்திரம் இப்படி கூறியதாக வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டியதில்லை.

2014ல் இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் ஒருவர், பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது எதிர்கட்சி வேட்பாளர்களைப் பார்த்து ஹிந்தியில் 'நொண்டி', 'குருடன்' என்று பொருள்படும்படி பேசியிருக்கிறார். அதுவும் அத்தனை ஊடகங்களினுடைய பார்வையும் தன் பேச்சின் மீது இருக்கின்றது என்று தெரிந்தும்.

இவர்களின் மனோபாவம், கவிஞர் வைரமுத்துவின் முரண்பாடு என்று தலைப்பிட்ட கவிதையை நினைவூட்டுகிறது. அதில் , 'ஜனநாயகம் முக்கியம், மக்களை கொன்றுவிடு' என்ற வரிகள்தாம் என் மனதில் நிழலாடுகின்றன.

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி, எளிய மனிதர்களின் விஷயத்தில் இப்படியா நடந்துகொள்ள வேண்டும்? பண்டைய இதிகாசமான ராமாயணத்தில் சரிநிகர் ஆசனம் மறுக்கப்பட்டதை அடுத்து, தன் வாலால் தனக்கு ஆசனம் அமைத்துக் கொண்டார் அனுமன். அதனைக்கண்டு வெகுண்ட ராவணன், அவரது வாலுக்குத் தீயிட்டதாகவும், அத்தீயைக் கொண்டு அதிர் நிகழ்வாக, இலங்கை பட்டினத்தையும் எரித்து, தம் வாலும் எரிந்த நிலையில் கிஷ்கிந்தைக்கு திரும்பிய அனுமனைக் கண்ட மற்ற வானரங்கள், வாலறுந்த அனுமனைப் பார்த்து எள்ளி நகையாடி அவரை ஒதுக்கி வைத்தனவாம்.

இன்று மாற்றுத் திறனாளிகளை எள்ளி நகையாடுவோரின் மனோபாவத்துக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக நான் கருதவில்லை. அரசியல் தளங்களில் மட்டுமல்லாமல், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களிலும் மாற்றுத்திறனாளிகளை இழிவு செய்வது தொடர்கிறது. இவற்றைத் தடுப்பதற்கான அரசு எந்திரங்களின் சுவிட்ச்களை எங்களைப்போன்றவர்கள் தேடிக்கொண்டே இருக்கிறோம்.

நமது இந்திய நாட்டில் மாற்றுத்திறனாளியை எப்படி அழைக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலும் இல்லை, எப்படி அழைக்கக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதலும் இல்லை. இழிவான வார்த்தைகளோ அல்லது பல வார்த்தை பிரயோகங்களோ, மாற்றுத்திறனாளியைக் கிண்டல் செய்யும் வசனங்கள், அவர்களை உடல் ரீதியில் துன்புறுத்தும் செயல்கள், ட்ரம்ப் செய்ததுபோன்ற அங்க அசைவுகள் போன்றவற்றைக் குற்றமாக நம் சட்டம் இன்றளவும் அறிவிக்கத் தயாராக இல்லை.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கெதிரான இழி சொற்களை பயன்படுத்துதல் தண்டனைக்கான குற்றம் என்று வரையறுத்தும்கூட இன்றளவும் அக்குற்றங்கள் அரங்கேறுகின்றன. அவற்றுக்கெதிரான குற்ற வழக்குகள் பதியப்படாததும் நடக்கிறது.

ஆக, சட்டப்பாதுகாப்பு உள்ள ஒரு விஷயத்திலேயே இவ்வளவு மீறல்கள் நடக்கின்றபோது, சட்டப்பாதுகாப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினருக்கெதிரான கேலி,கிண்டல்களும், இழிவுபடுத்துவது தொடர்வதில் ஆச்சர்யமில்லை. உலகம் அறியாத ஒரு எளிய மனிதன் இவற்றைச் செய்வதை விடுங்கள், சட்டமியற்றும் அதிகாரம் பலமுறை வாய்க்கப்பெற்ற, இனியும் வாய்ப்புகள் உள்ள அரசியல்வாதிகள் மாற்றுத்திறனாளிகளை எள்ளி நகையாடுவது 'வேலியே பயிரை மேய்வ'தல்லாமல் வேறென்ன?

திரைப்படங்களையும் தமிழர் வாழ்வையும் பிரித்துப்பார்க்க முடியாது. அதேபோல தமிழக அரசியலையும் தமிழ் சினிமாவிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பிரபலங்கள் இடம்பெயர்வது வெகு இயல்பானது. எனவே, திரைப்படத்தின் மூலமாக செல்லும் செய்தி, மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனால் திரைப்படங்களில் மாற்றுத்திறனாளிகளைப்பற்றிய சித்தரிப்பு எந்த 'அழகில்' இருக்கிறது என்பதை நீங்களும் நானும் அறிவோம்.

திரைப்படங்களுக்கான கட்டுப்பாடுகளை விதிக்கின்ற சினிமாட்டோகிராஃபி சட்டம், பல இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான, வார்த்தை பிரயோகத்திற்கோ அல்லது காட்சி அமைப்பிற்கோ கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை.

மேலும், தொலைக்காட்சி தொடர்களை நெறிப்படுத்துவதற்கான சட்டமும் தற்போது அரசால் கொண்டுவர முடியாத, செயலற்ற அரசாகவே, மத்திய மாநில அரசுகள் இருக்கின்றன. திரைப்படத் தணிக்கை குழுவில் மாற்றுத் திறனாளி (அ) ஊனமுற்ற பிரநிதிகளுக்கு உறுப்பினர் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற எங்களின் குரல் மாற்றுத் திறனாளிகளுக்கான மத்திய ஆணையர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்பு கூட அமல்படுத்தாமல் இருப்பது 'ஏழை சொல் அம்பலம் ஏறாது' என்ற கூற்றைத்தான் நிரூபித்திருக்கிறது.

மற்றவர்களுக்கு இணையாக மாற்றுத் திறனாளிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற, எங்களின் தொடர் கோரிக்கைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே இடமில்லை என்பது தான் உச்சகட்ட வேதனையாக உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாகுபாட்டிற்கெதிரான சரத்தில் இனம், மொழி, பாலினம் மற்றும் இதர விடயங்களுக்காக பாகுபாடு பின்பற்றக்கூடாது என்ற கூறியிருக்கும் அரசியல் சாசனம் ஊனம் காட்டி, பாகுபாடு இருக்கக்கூடாது என்று சொல்ல தவறியிருக்கிறது. இதன் விளைவாக, சமத்துவம் என்ற ஒவ்வொரு குடிமகனின் / குடிமகளின் அடிப்படை உரிமை மாற்றுத்திறனாளியைப் பொறுத்தவரையில், ஊனம் என்ற பார்வையின் வழியாக கொடுக்கப்படவில்லை என்பது தான் எங்களுக்கு இருக்கும் சட்ட சிக்கல்.

அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பொழுதும் சரி, இன்றளவும் சரி, பங்கேற்பு என்ற கோட்பாடு பின்பற்றப்படாததனால், அன்றைக்கு சமத்துவத்தை இழந்தோம். இன்று சாதாரண மனிதனுக்கான சுயமரியாதையும் இழந்திருக்கிறோம்.

2 ஆண்டுகளுக்கு முன் மாற்றுத்திறனாளியான பேராசிரியர் ஜி.ஜா. கோஸ் என்பவரை, அவர் ஊனத்தைச் சுட்டிக்காட்டி, விமானத்தை இயக்க மறுத்து கீழிறக்கிவிட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறன் அல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகளை புரிந்துகொள்ள தொடர்ச்சியாக மறத்துள்ளார்கள் என்ற கண்டனத்தை தெரிவித்து, அவ்விமான நிறுவனத்துக்கெதிரான ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.

இதுபோன்ற பல உயர் நீதிமன்ற மற்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்பும் கூட, நிர்வாகத் துறையினரும், ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளின் போக்கில் எவ்வித மாற்றத்தையும் காணமுடியவில்லை என்பது சமூகத்தின் அடிப்படையில் கோளாறு இருப்பதைத்தான் காட்டுகிறது. சமூகம் தானாக மாறும் என்று காத்திருப்பது நாளை இலவு காத்த கிளி போல் எங்கள் சமூகம் மாறிவிடுமோ என்ற அச்சத்தை எங்களுக்குள் விதைக்கிறது. ஆட்சி அதிகாரம் என்ற அம்பலத்திற்குள் எங்கள் சொல் ஏறினால் தான் அரசியல் அழுத்தம் உருவாகி இந்நிலையில் மாற்றம் எற்படும் என்ற கட்டத்திற்கு எங்களைத் தள்ளியிருக்கிறது. இச்சமூகம் ஊனம் எங்களுக்கா, சமூகத்திற்கா என்று பார்த்தால், சமூகம் தான் ஊனமுற்றிருக்கிறது என்பதை நாங்கள் தெள்ளத் தெளிவாக அறிகிறோம்.

எங்கள் சொல் அம்பலம் ஏற்வதற்கு, அரசியல் பங்கேற்பு என்பது ஒரு முக்கியமான யுக்தியாக அமையும் என்றால், ஏன் நாங்கள் அதை நோக்கிய பயணத்தை நாங்கள் தொடங்கக்கூடாது? இந்தியாவின் அரசியல் சாசனத்தில் தேர்தலுக்கு வராமல், மக்களைச் சந்திக்காமல் மக்கள் தொண்டு என்பதை அறவே செய்யாமல், எத்தனை பேர் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் நியமன உறுப்பினர்களாக மாறும் நிலையில், மண்ணின் மைந்தர்கள், மாற்றுத்திறனாளிகள் நாங்கள், மண்ணின் மானத்தைக் காக்கும் மாரியப்பனாகவும் நாங்கள் எங்கள் பிரச்சினைகளைத் தாண்டி, சர்வதேச அரங்கில் சாதிக்க முடிந்த எங்களுக்கு, சட்ட மன்றத்தில் இடம் அளிக்காமலா போகும் காலம்?

வெகுஜனம் மட்டுமல்ல, அறிவுசார் சமூகமும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்:

''மாற்றுத்திறனாளிகளல்ல நாங்கள்- விதியை மாற்றும் திறனாளிகள்''...

- தீபக்,டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர்.

தொடர்புக்கு: deepaknathan@gmail.com.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x