Published : 19 Dec 2016 10:18 AM
Last Updated : 19 Dec 2016 10:18 AM

ஆல்பர்ட் மைக்கேல்சன் 10

ஆல்பர்ட் மைக்கேல்சன் - நோபல் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி

அறிவியல் களத்தில் நோபல் பரிசை வென்ற முதல் அமெரிக்க விஞ்ஞானியான ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் (Albert Abraham Michelson) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* போலந்து நாட்டின் ஸ்டெரல்னோ என்ற ஊரில் யூதக் குடும்பத்தில் (1852) பிறந்தவர். இவர் பிறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. தந்தையின் வர்த்தகம் காரணமாக, நியூயார்க், வர்ஜீனியா, நெவாடா, சான்பிரான்சிஸ்கோ என பல இடங்களில் வசித்தனர்.

* சான்பிரான்சிஸ்கோவில் அத்தை வீட்டில் தங்கி, பள்ளிப் படிப்பை முடித்தார். இவரது அறிவாற்றல், அறிவியல் ஆர்வத்தை உணர்ந்த பள்ளி ஆசிரியர், சோதனைக் கூடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுமதித்தார். பின்னர், அவரது ஆலோசனைப்படி அமெரிக்க கடற்படை அகாடமி சிறப்புப் பிரிவில் 4 ஆண்டுகள் பயின்றார்.

* அங்கு ஒளியியல், வெப்பவியல், பருவகாலவியல், ஓவியக் கலை பயின்றார். 1873-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2 ஆண்டுகள் இயற்பியல், வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1883-ல் கிளீவ்லேண்டில் கேஸ் ஸ்கூல் ஆஃப் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

* பெர்லின், பாரீஸில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். 1889-ல் கிளார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1892-ல் தொடங்கப்பட்ட சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு தொடங்கப்பட்ட இயற்பியல் துறையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஓய்வு பெறும்வரை பணியாற்றினார்.

* அமெரிக்க குடியுரிமை பெற்றார். இயற்பியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டார். ஒளியின் வேகத்தைக் கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபடத் தொடங்கினார். 'குறுக்கீட்டுமானி' (Interferometer) என்ற எளிய கருவியை வடிவமைத்து, ஒளியின் வேகத்தை துல்லியமாகக் கணக்கிட்டார்.

* ஒளியின் வேகம் அடிப்படை மாறிலி என்பதை ஆய்வு மூலம் நிறுவினார். குறுக்கீட்டுமானியைக் கொண்டு, 'ஆல்பா ஆரியன்ஸ்' என்ற விண்மீன் விட்டத்தை அளந்து கூறினார். பல்வேறு அறிவியல் இதழ்களில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

* பிரபஞ்சம் முழுவதும் திரவ, வாயு நிலைக்கு இடைப்பட்ட 'ஈதர்' என்ற ஊடகம் பரவியுள்ளதாகவும், அதன் வழியாகவே ஒளி ஊடுருவிச் செல்வதாகவும் அதுவரை அறிவியலாளர்கள் கருதியது தவறு என்பதை மார்லி என்ற விஞ்ஞானியோடு இணைந்து நிரூபித்தார். இது 'மைக்கேல்சன் - மார்லி ஆய்வு' என்று புகழ்பெற்றது.

* அமெரிக்க இயற்பியல் கழகத் தலைவராக 1900-ல் நியமிக்கப்பட் டார். ஒளியியல், நிறமாலையியல், வானிலை குறித்த இவரது ஆய்வுகளுக்காக 1907-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதன்மூலம் அறிவியல் களத்தில் நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை பெற்றார்.

* மேத்யூகி பதக்கம், காப்ளே பதக்கம், பிராங்க்ளின் நிறுவனத்தின் எலியட் கிரைசன் பதக்கம், தேசிய அறிவியல் கழகத்தின் ட்ரேப்பர் பதக்கம், ராயல் வானியல் கழகத்தின் தங்கப்பதக்கம் உட்பட பல்வேறு பரிசுகளைப் பெற்றார். பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.

* மவுன்ட் வில்சன் வானியல் ஆய்வு மையத்தில் இணைந்து பணியாற்றினார். இறுதிவரை ஆய்வுகளில் ஈடுபட்டு அறிவியல் களத்தில் மகத்தான பங்களிப்புகளை வழங்கிய ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கேல்சன் 79-வது வயதில் (1931) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x