Last Updated : 28 Jul, 2014 10:00 AM

 

Published : 28 Jul 2014 10:00 AM
Last Updated : 28 Jul 2014 10:00 AM

பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உதவிகள்

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவிகள் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அ.கருப்பையா.

# கிராமப்புறங்களில் பள்ளிக்குச் சென்று படிக்க இயலாத அளவுக்கு வறுமையில் உள்ள பி.சி., எம்.பி.சி., சீர்மரபினருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

ஆம். எம்.பி.சி., சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்களில் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்புவரை பள்ளியில் சேர்ந்து பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவிகளுக்கு ரூ.500, ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. விதவைப் பெண்களின் மகள், கணவரால் கைவிடப்பட்டவரின் மகள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

# பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை நீங்கலாக மாணவ, மாணவிகளுக்கு வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா?

ஆம். விலையில்லா மிதிவண்டி வழங்கப்படுகிறது . கடந்த 2004-05ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பிளஸ்1 படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டே இத்திட்டம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில் மிதிவண்டி பெற, பெற்றோர் ஆண்டு வருமானம் உட்பட எவ்வித நிபந்தனைகளும், உச்சவரம்பும் கிடையாது.

அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மிதிவண்டி வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டத்தில் மிதிவண்டி வழங்கப்படுவதில்லை. எனினும், ஒரு சில இடங்களில் பள்ளியில் இருந்து விடுதி உள்ள தொலைவைக் கணக்கிட்டு மிதிவண்டி வழங்கப்படுகிறது.

# கல்வி உதவிகள் தவிர, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் வேறு என்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?

பி.சி., எம்.பி., சீ்ர்மரபினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. இலவச வீட்டுமனைப் பட்டா பெற சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு சொந்தவீடு இருக்கக் கூடாது. விவசாயி, விவசாய கூலித் தொழிலாளி போன்றோருக்கு வழங்கப்படுகிறது. குடியிருக்க அத்தாட்சியாக அரசால் வழங்கப்பட்ட சான்று (ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை) ஆகியவை வழங்க வேண்டும்.

# வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் உதவிகள் வழங்கப்படுகிறதா?

ஆம். விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி ஆகியவை வழங்கப்படுகின்றன. தையல் இயந்திரம் பெற தையல் பயிற்சி பெற்று அதற்கான சான்று வழங்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமமாக இருந்தால் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரத்துக்கு மிகாமலும், நகர்ப்புறமாக இருந்தால் ரூ.60 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது 20 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x