Published : 24 Nov 2016 10:28 AM
Last Updated : 24 Nov 2016 10:28 AM

சுட்டது நெட்டளவு: வங்கித் திருவிளையாடல்

கஸ்டமர் : இந்த ஆள் கொண்டுவந்த செக்குக்கு பணம் இல்லையென்று சொன்னவன் எவன்?

மேனேஜர் : அவன் இவனென்ற ஏகவசனம் வேண்டாம். அவையடக்கத்துடன் கேட்டால் அதற்குத் தக்க பதில் கூறுவார்கள்.

கஸ்டமர் : அப்படியானால் மேனேஜரை விட மற்றவருக்குத்தான் இங்கு அதிகாரமோ?

மேனேஜர் : இது ஸ்பெஷல் வர்கிங் டே. இன்று எல்லாருக்கும் சம உரிமை உண்டு.

கஸ்டமர் : அதனால்தான் இவன் கொண்டு வந்த செக்குக்கு பணம் தரமாட்டோம் என்றீர்களோ?

கேஷியர் : பழுதுள்ள செக் என்பதால் பணம் தர மறுத்தது நான்தான்.

கஸ்டமர் : யார் இந்தப் பரட்டை?

மேனேஜர் : இந்தக் கிளையின் தலைமை கேஷியர் மிஸ்டர் பரட்டையார்.

கஸ்டமர் : ஆ! பரட்டை! கிளையின் காசாளர் என்ற ஆணவத்திலேதான் செக்கிலே குறை கண்டீரோ? என்ன குற்றம் கண்டீர்?

கேஷியர் : முதற்கண் செக்கில் கையெழுத்திட்டது யார்? அதற்கு பதில் தேவை.

கஸ்டமர் : யாம்! யாம் கையெழுத்திட்டோம்.

கேஷியர் : கையெழுத்திட்ட நீர் வராமல் அதை இன்னொருவரிடம் கொடுத்து அனுப்பியதற்கு காரணம்?

கஸ்டமர் : அது நடந்து முடிந்த கதை. தொடங்கிய பிரச்சினைக்கு வாரும்.

கேஷியர் : கஸ்டமருக்கு முதலில் பொய்யுரை தேவையில்லை. அதை புரிந்துகொள்ளுங்கள்.

கஸ்டமர் : புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது அனைத்தும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அட்வைஸ் நாட் நெஸஸரி. ஐ நோ எவ்ரிதிங்.

கேஷியர் : எல்லாம் தெரிந்துவிட்டால் செக்கில் பிழை இருக்காதென்று அர்த்தமா?

கஸ்டமர் : பரட்டை! என் செக்கில் குற்றம் கூறுகிறாராம்! கூறும்... கூறும்... கூறிப் பாரும்.

மேனேஜர் : சார்! சாந்தமாக பேசுங்கள். செக் பற்றிய டிஸ்கஷன் தேவைதான். ஆனால் அது சண்டையாக மாறிவிடக்கூடாது.

கஸ்டமர் : சண்டையும் சச்சரவும் பேங்கர் கஸ்டமர்களின் பரம்பரைச் சொத்து. அதை மாற்ற யாராலும் இயலாது. சற்று பொறுத்திருந்து பாரும்! பரட்டையாரே எமது செக்கில் எங்கு குறை கண்டீர்? கையெழுத்திலா? இல்லை அமவுண்ட் இன் வர்ட்ஸிலா?

கேஷியர் : கையெழுத்தில் குற்றமில்லை. இருந்தாலும் மேனேஜ் பண்ணிக்கொள்ளலாம். அமவுண்டில்தான் குற்றம் உள்ளது. நீர் எழுதிய அமவுண்டை இன்னொரு முறை கூறும்.

கஸ்டமர் : ஹா! இரண்டு நான்கு ஸைபர் ஸைபர் ஸைபர்... இருபத்து நான்காயிரம்.

கேஷியர் : இதனால் நீர் சொல்ல வந்தது?

கஸ்டமர் : இதுகூடத் தெரியவில்லையா தலைமை கேஷியருக்கு? இட் மீன்ஸ் ஐ நீட் ட்வென்டி போர் தௌசன்ட் ருப்பீஸ்.. எனக்கு 24 ஆயிரம் ரூபாய் தேவையென்று எழுதியிருக்கிறேன்.

கேஷியர் : ஆனால் உங்கள் அக்கவுண்டில் இருந்து நீங்கள் ஏற்கெனவே ஏடிஎம் மூலம் 2,500 எடுத்திருப்பதால் தற்போது 24,000 ரூபாய்கள் தரவியலாது. இதுதான் எமது தீர்ப்பு.

கஸ்டமர் : குழந்தையின் ஸ்கூலுக்கு பீஸ் கட்ட வேண்டும் என்று வருபவனுக்கும் இதே தீர்ப்புதானா?

கேஷியர் : ஆமாம் இதே தீர்ப்புதான்.

கஸ்டமர் : உங்கள் சொந்தக்காரர்கள் நண்பர்களுக்கும் இதே தீர்ப்புத்தானா?

கேஷியர் : ஆமாம்.

கஸ்டமர் : உங்கள் பிராஞ்ச் மேனேஜருக்கு?

கேஷியர் : அவரென்ன, எங்கள் சென்னை மண்டலத்தை நிர்வகிக்கும் ஜெனெரல் மேனேஜருக்கும் இதே பதில்தான்.

கஸ்டமர் : மிஸ்டர் பரட்டை நன்றாகப் பாரும்! இந்த ஐடி கார்டை பாரும்! இப்போதும் அதே பதில்தானா?

கேஷியர் : நீரே இந்த வங்கியின் புதிய சேர்மன் ஆகுக. ஐடியைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x