Last Updated : 02 Nov, 2016 03:24 PM

 

Published : 02 Nov 2016 03:24 PM
Last Updated : 02 Nov 2016 03:24 PM

யூடியூப் பகிர்வு: காதலே வாழ்க்கையா?- அந்த நொடி குறும்படம்

வாழ்வதற்கு எவ்வளவோ நல்ல காரணங்கள் தேவைப்படுகிறது. ஆனால் நினைத்தவுடனே சாவதற்கு மட்டும் ஒரு சொத்தைக் காரணம் கைவசம் இருக்கிறது நமக்கு? ஏன் இப்படி? வாழ்வைப் புரிந்துகொள்ளாத இன்றைய தற்கொலைகள் தேவைதானா எனக் கேட்கிறது 'அந்த நொடி' குறும்படம்.

பொதுவாக தற்கொலைகளைப் பற்றிய படங்களில் நீண்ட அறிவுரைகள் சொல்லப்படும், சில நேரங்களில் இந்த மாதிரி அறிவுரைகளைவிட அதற்கு பதிலாக சாவதே மேல் என்றுகூட நமக்குத் தோன்றிவிடும். 'அந்த நொடி' குறும்படம் அந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் எதையும் செய்யவில்லை. மாறாக இலக்கியத்தரம் மிக்க ஒரு சிறுகதையைப் படித்த திருப்தியைத் தந்துள்ளனர் ஆன்லைன் மீடியா பிரிண்டர் கியூ டிவி தமிழ் டாட் காம் மற்றும் ஹெச் 5 ஸ்டூடியோ இரு குழுவினரும் இணைந்து உருவாக்கியுள்ள இக்குறும்படத்தில்.

இளவயதிலிருந்து ஒரு நண்பனே இவனை கண்டுகொண்டு பலருக்கும் அடையாளப்படுத்துபவனாக இருக்கிறான். ஆனால் காலம் கரைந்தோட சமூக அந்தஸ்துக்காக இவனுக்கு நிறைய வேஷங்கள் வேண்டியிருந்தது. இதனால் அந்த முக்கிய நண்பனுக்கு ஆறுதல் கூறி அவன் சாவைத் தடுக்கக்கூட அவனால் முடியவில்லை.

காதல், வேலை, நட்பு, தாய் தந்தையர்கள், சமூகம் என்பதெல்லாம் நமது வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தின் வெவ்வேறு அங்கங்கள் என்பது புரிய நிறைய பட வேண்டியுள்ளது. அதை புரிந்துகொள்ளவிடாமல் சுயசிந்தனைக்குக்கூட தகுதியற்றவர்களாகவே இன்றைய உலகம் பலரையும் வடிவமைக்கிறது.

கோகுல் பிரசாத், வைஷூ ராகவ், லோகேஷ், கௌதம், அசோக், மணி, யோகேஷ் என அனைவரின் பங்களிப்பும் குழந்தை நட்சத்திரங்களான அஷ்வின் கிரண், உஷேர் போன்றவர்களின் பங்களிப்போடும் அலட்டலில்லாமல் வந்துள்ள இக்குறும்படம் 2015ல் நாம் இழந்த நண்பர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

காதல் மட்டுமே உலகம் என்று சினிமாவை நோக்கியே இன்றைய குறும்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் காதல் மட்டும் இல்லை அதற்கும் மேலும் பல விஷயங்கள் இருக்கின்றன என அழுத்தமாக சொன்னதோடு நம்பிக்கையையும் வாரி வழங்கியிருக்கும் இயக்குநர் மதுசூதனுக்கு ஒரு பலமான கைகுலுக்கல்.

குறும்படத்தைக் காண: