Last Updated : 05 Nov, 2016 11:31 AM

 

Published : 05 Nov 2016 11:31 AM
Last Updated : 05 Nov 2016 11:31 AM

ஒலிப்பேழையில் மெல்லிசை மன்னரின் வரலாறு

இந்தியாவில் இயல், இசை மற்றும் நாடகக் கலைகளின் வளர்ச்சிக்கு அகில இந்திய வானொலி நிலையம் ஆற்றிவரும் தொண்டு சிறப்புமிக்கதாகும். அவர்கள் பாதுகாத்து வைத்துள்ள இம்மூன்று துறையைச் சார்ந்த பதிவுகள் விலை மதிப்பில்லாதவை. அறிஞர்கள், இசைவாணர்களின் நேர்காணல்கள், இசை நிகழ்ச்சிகள் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்

சென்னை வானொலி நிலையத் தாரால் இப்படி பதிவு செய்யப் பட்ட அரிய பொக்கிஷங்களை அண்மையில் பிரசார் பாரதி வெளியிட்டது. அவற்றுள் ஒன்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் நேர்காணல். இந்த நேர்காணலை சுய வாழ்க்கைக் குறிப்பு என்றும் கூறலாம்.சுமார் ஐந்து மணி நேரம் கொண்ட இந்த நேர்காணலின் மற்றொரு சிறப்பு, மெல்லிசை மன்னரை பேட்டி எடுத்தவர் தான் அதிகம் பேசாமல் அவரை அதிகம் பேச வைத்திருப்பதுதான்.

ஒரு சிறுகுழந்தையின் உற் சாகத்துடன் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இதில் குறிப்பிடுகிறார் மெல்லிசை மன்னர். அவர் குறிப்பிடும் வெவ் வேறு நிகழ்வுகள் நம் கண் முன்னே காட்சியாக விரிந்து அந்த இடத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. மூன்று வயதில் தன் தந்தையையும்,சகோதரியையும் இழந்தது, வறுமையின் பிடியில் தவித்தது, தாயார் வேதனையில் மகனுடன் குளத்தில் விழுந்து தற்கொலை முயற்சியில் இறங்க, அதனைக் கேள்விப்பட்ட அவரு டைய தாத்தா, தக்க சமயத்தில் அவர்களைக் காப்பாற்றி தன் அரவணைப்பில் வைத்துக் கொள் வதுடன் அவரது வாழ்க்கைக் குறிப்பு ஆரம்பம் ஆகிறது.

அவர் பள்ளிக்குச் சென்றது வெகு சில காலமே. அதிலும் பள்ளியில் பாதியிலேயே வகுப் பறையை விட்டு வெளியேறி, நீலகண்ட பாகவதரின் வீட்டுத் திண்ணையில் அடைக்கலமாகி, அங்கு நடக்கும் இசை வகுப்பு களைக் கூர்ந்து கவனித்துத் தன் இசை ஞானத்தை வளர்த்துக் கொள்கிறார். குரு காணிக்கை செலுத்த வசதியில்லாததால், அவரிடமே எடுபிடியாக வேலைக்குச் சேர்கிறார். ஒரு விஜயதசமியன்று சிறுவன் விஸ்வநாதன் பாடியதைக் கண்டு வியந்து அவனை உச்சி மோர்ந்து தன் சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறார்.

பின்னர் நாடகத்தில் நடிக் கும் வாய்ப்பு அவருக்கு கிடைத் துள்ளது. நடிகர் டி.எஸ்.பாலை யாவின் நாடகக் குழுவில், கேரள மஹாராஜாவாக இராமாயண சுயம்வரத்தில் தவறாக சிவ தனுசை உடைக்க, ரசிகர்கள் இவருக்கே சீதையை மணமுடிக்க வேண்டும் என்று கோஷமிட, நாடகம் முடிந்த பின்னர் டி.எஸ்.பாலையாவிடம் பட்ட அடி சிறுவன் விஸ்வநாதனை நடிப்புக்கே முழுக்குப் போட வைத்துள்ளது.

அதன்பின் ஜூபிடர் பிலிம்ஸில் ஆபீஸ் பாயாக வேலை. இளை ஞரான விஸ்வநாதனின் இசைத் திறமையைக் கண்டு இசையமைப் பாளர் எஸ்.வி.வெங்கட்ராமய்யர் தன் குழுவில் சேர்த்துக் கொள்கிறார். மன்னரின் திரை இசைப் பயணமும் இனிதே தொடங்குகிறது. தனது இசைத் திறமையை அடையாளம் கண்டு, உற்சாகப்படுத்திய அனைவரின் பெயரையும் மறக்காமல் ஒலிப் பேழையில் மெல்லிசை மன்னர் நினைவுகூர்வது, அவரின் நன்றி மறவா குணத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

மெல்லிசை மன்னரின் இக்குணத்தை எடுத்துக் காட்டும் விதமாக இன்னொரு நிகழ்வு. தன் இசை அறிவுக்கு வித்திட்ட குருநாதருக்கு, தன் சம்பாத்தியத் தில் ஜரிகை வேஷ்டி,அங்க வஸ்திரம் ஆகியவற்றை கொடுத்து மரியாதை செய்யச் செல்லும்போது அவர் மறைந்த செய்திக் கேட்டு இடிந்து போய் விடுகிறார். ஒலிப் பேழையில் இதைக் கூறும்பொழுது அவரது நா தழுதழுக்கிறது.

மெல்லிசை மன்னர் தனது தாய் மீது அளவு கடந்த பாசமும் பக்தியும் கொண்டவர். அவரது சொல்லைத் தட்டாதவர். கே.வி.மகாதேவன், சாண்டோ சின்னப்ப தேவருடைய படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த சமயம், தேவர் மன்னரைத் தன் படத்தில் இசை அமைப்பதற்கு அழைக்க அவர் வீட்டுக்கு செல்கிறார். பணத்தையும் கொடுக்கிறார். மன்னரின் தாய் ‘விசு ஒரு நிமிடம் இங்கே வா’ என்று அழைத்து மன்னரின் கன்னத்தில் பளார் என்று அறைந்து, “ஏன்டா நீ அவரிடம் சிறுவனாக பணி செய்தபோது, ஊருக்கு வருவதற்கு காசில்லாமல் தவித்ததை அறிந்து உனக்கு பணமும், சட்டையும், பயணச் சீட்டும் வாங்கிக் கொடுத்த வள்ளல் மகாதேவன். அவரோடு போட்டி போடுகிறாயா” என்று கண்டிக்கிறார். அடுத்த நிமிடம் தேவரைக் காணவில்லை. எம்.எஸ்.வி. இறுதிவரை தாய் சொல்லை தட்டாமல் வாழ்ந்தவர்.

கவியரசரின் நட்பு

கவியரசரோடு மன்னருக்கு ஏற்பட்ட நெருங்கிய நட்பு பற்றியும், அவருடனான அனுபவங்களைப் பற்றியும் இந்த ஒலிப்பேழையில் பகிர்ந்துகொள்கிறார் மெல்லிசை மன்னர். கவியரசரோடு நெருக்க மாக இருக்கும்போதே வாலியை திரைப்பாடல் எழுத சிபாரிசு செய்கிறார் மன்னர். மற்ற பல கவிஞர்களையும் நினைவுகூர் கிறார். இன்னும் பல ஆச்சரிய மான, நாம் இதுவரைக் கேட்டிராத பல விஷயங்களை இந்த ஒலிப்பேழையில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

என்ன ரசிகர்களே! ஒலிப் பேழையை வாங்க ஆர்வமாக உள்ளீர்களா? சென்னை மற்றும் ஏனைய தமிழக வானொலி நிலையங்களில் ரூ.195 செலுத்தி இதைப் பெற்றுக் கொள்ளலாம். தயவுசெய்து நண்பர்களுக்கு மறுபதிவு செய்து கொடுக் காமல் பிரசார் பாரதியின் அசல் வெளியீட்டை வாங்கத் தூண்டுங்கள்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x