Published : 24 Nov 2016 10:43 AM
Last Updated : 24 Nov 2016 10:43 AM

எந்தக் கண்ணன் அழைத்தானோ?

எட்டு வயதில் விஜயவாடாவில் தமது முதல் கச்சேரியை நிகழ்த்திய சிறுவன் முரளி கிருஷ்ணாவின் அசாத்திய இசை நுட்பத்தில் திளைத்த ஹரிகதா பாகவதர் எம்.சூரியநாராயண மூர்த்தி, அவரை ‘பாலமுரளி கிருஷ்ணா’ ஆக்கினார். அதன் பிறகு தொடர்ந்து தமது திறமையை வளர்த்தெடுத்து வந்த அற்புத இசை மேதை டாக்டர் எம்.பால முரளி கிருஷ்ணாவின் மறைவு, கர்னாடக இசை உலக வரலாற்றில் முக்கிய சகாப்தத்தின் நிறைவைக் குறிப்பதாகும்.

முதுமையிலும்கூட ஒரு குழந்தை யின் புன்னகை வற்றாதிருக்கும் முகம். குரலோ, மிகவும் தனித் துவமிக்க நாண்களிலிருந்து புறப் பட்டு வந்தது போன்ற சிறப் பொலியைப் பெற்றிருக்கும். உடல் மொழியில் தமது திறமையின் ஒளிக்கமாட்டாத கம்பீரமும், இசை ஞானத்தின் ஒளியழகும், கற்பனையின் சாரலும், சவாலுக்கு அழைக்கும் பார்வைப் பொறிகளும் மின்னும் எப்போதும்!

வாய்ப்பாட்டு மட்டுமின்றி இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொண்ட அவரது தேடல் சில புதிய ராகங்கள், தாள லயங் களையும் உருவாக்கிப் பெருமை சூட வைத்தது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளையும் எழுப்பியது. வீணை எஸ்.பாலசந்தர், எஸ்.ராம னாதன் போன்ற கலைஞர்கள் ‘புதிதாக எதையும் உருவாக்க வில்லை. அவை ஏற்கெனவே இருந்த ராகங்களே’ என்று வாதிட் டனர். பாலசந்தருக்கும், பால முரளிக்கும் இடையிலான மோதலை ஒரு தொடராகவே மாற்றி வெளியிட்டு வந்தது ஒரு வார இதழ். ஆயினும், சமகால இசை விற்பன்னர்கள் நடுவே அவரது இடம் முக்கியமானதாக இருந்தது. கச்சேரிக்கு நடுவே சிறிய இடைவேளை விடுவதென்ற அவரது செயல்பாடு அக்காலத்தில் புரட்சிகரமாகக் கருதப்பட்டதாம்.

தியாகய்யரின் பஞ்சரத்ன கீர்த்த னைகளாகட்டும், என்றும் வாடாத புகழ்மிக்க ‘நகுமோமு’ ஆகட்டும், பாலமுரளி அவர்களது குரல் இனிமை கொடி கட்டிப் பறக்கும்.

திரை இசை ரசிக உலகத்திலும் பாலமுரளிக்கு என்றும் அழியாத ஓர் இடமுண்டு. பாலையா வேறு, பாலமுரளி வேறு என்று பிரித்துவிட இயலாதபடிக்கு திருவிளையாடலின் சிறப்பு அம்சங்களாகத் திகழும் ‘ஒருநாள் போதுமா’ பாடலுக்கு நிகர் எது! கண்ணதாசனின் அருமையான அந்தப் பாடலை கே.வி.மகாதேவன் ஓர் இசைச் சிற்பமாகவே செதுக்கி இருந்தார். போதையூறி மெல்லப் பரவும் ஆலாபனையிலிருந்து, அதன் பல்லவியில் கூடிக்கொண்டே செல்லும் ஒவ்வொரு சொல்லும் கிளர்ச்சியுற வைக்கும். சரணங் களில் பாடகரைத் தொட நீளும் ரசிகரின் கையைப் பிடித்து உடனி ருத்தி ரசிகரையும் குழைந்து, அதிர்ந்து, மிதந்து, முழங்கி நிமிரவைக்கும் குரல் அது. எந்தெந்த ராகங்களின் பெயர் இடம்பெறுகிறதோ அந்த இடங்கள் அதே ராகத்திலேயே அமைக்கப் பட்ட இசையில், ‘கா..னடா’ என்று பாலமுரளி உருக்கி உருக்கி வார்க்கும் வீச்சு அநாயாசமாக வெளிப்படும். ‘என் பாட்டு தேனடா’ என்று அனுபவித்து நகரும் அடுத்த வரியின் எல்லையில், ‘இசைத் தெய்வம் நானடா!’ என்ற அசத்தல் இடத்தில் அந்தப் பாட்டுத் தேர் நிலைக்கு வந்து நிற்பது கண்ணீர் சொரியவைப்பது.

பி.சுசீலாவுடன் அவர் பாடிய ‘தங்க ரதம் வந்தது’ பாடல், சிருங்கார ரசனையில் தொடுக்கப்பட்டிருந்த மதுவின் கோப்பை. கவிக்குயில் படத்துக்கான அவரது, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, காற்று டன் அவர் நடந்த வேக நடையின் உரையாடல் பரிமாற்றம். அதில் சரணத்தில், ‘கண்கள் சொல்கின்ற கவிதை இளவயதில் எத்தனை கோடி’ என்ற இடம் கொண்டாட்டக் களம். அதே பாடலைத் தாமும் தனியே பாடியிருந்த எஸ்.ஜானகி, ‘பாலமுரளி பாடியிருந் தது தெரிந்திருந்தால் நான் பாடி இருக்கவே மாட்டேன்’ என்று சொன்னாராம். இளையராஜாவின் மறக்க முடியாத வரிசையில் முக்கிய இடமொன்றில் இருப்பது இந்தப் பாடல்.

‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் குழுவில் இருக்கும் கரிமெல்லா சுப்பிரமணியன், பாலமுரளி கிருஷ்ணாவின் மாண வர்களில் ஒருவர். பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி இதழுக்காக கரிமெல்லா அவரை நேர்காணல் செய்தபோது, தமது குருநாதரைப் பற்றிய பெருமை அந்தப் பார்வையற்ற வரின் விழிகளில் சுடர்ந்ததை விவரிக்க முடியாது. சொந்த சாகித்யங்கள் பல இயற்றிய பாலமுரளி கிருஷ்ணா ஒருமுறை சோவியத் ரஷ்யாவுக்குப் பயணம் சென்றுவிட்டு வந்ததும், ‘கன்னுல பண்டுல ரஷ்யா’ என்று தொடங்கும் தெலுங்குப் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். ‘விசால பாவாலு, சுவிசால பவந்துலு’ என்று செல்லும் அந்தப் பாடல், விசாலப் பார்வையால் மக்களை ஆட்கொண்டு முன்னெ ழுந்த சோவியத் உலகின் உன்னத நாகரிகத்தை வியந்து எழுதப்பட்டிருந்தது என்றார் கரிமெல்லா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளிலும் திரை இசையில் பாடிய பாலமுரளி, தாமே இசையமைக்கவும் செய்தவர். ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘நவரத்தினம்’ படத்தில், எம்ஜிஆருக்கும் குரல் கொடுத்தவர் (‘குருவிக்காரன் பொஞ்சாதி மட்டுமல்ல’ என்கிற ஆங்கில இசைப்பாடல் ஒன்றைப் பாடி அதற்கு ஏற்ற கீர்த்தனை ஒன்றையும் பாடி இருப்பார் ஒரு காட்சிக்காக).

‘ஒருநாள் போதுமா’ பாடல் காட்சியில் நடிக்கும் முன்பு, நடிகர் பாலையா அந்தப் பாடல் ஒலிப் பதிவையும், பொதுவாக பாலமுரளி கிருஷ்ணா பாடும் விதத்தையும் கவனித்துவிட்டு வந்ததாகச் சொல்வார்கள். திரை நிரம்பிய ஒரு பேரவை. இரண்டு பக்கங்களிலும் வண்ண வண்ண உடைகள் அணிந்தபடி விதவிதமான வாத்தி யக்காரர்கள். பின்னே விசிறிக் கொண்டிருந்தபடி முக அசைவில் அசத்திக் கொண்டிருக்கும் உசிலைமணி முதலானவர்களுக்கு நடுவே நாயகமாகக் கம்பீர வடிவில் மீசையை அடிக்கடி நீவிவிட்டுக்கொண்டே ‘ஒருநாள் போதுமா’ என்று பாடுவதாக நடித்தது பாலையாதான் என்றாலும், ‘இசைத் தெய்வம் நானடா’என்ற இடத்தில் சாட்சாத் பாலமுரளி கிருஷ்ணா அங்கே தோன்றிவிடுவதாகப் படும்!

அந்தத் தன்னுணர்வும், துணிவு மிக்க ஞானச் செருக்கும் பெருகி வெளிப்படும் ஒரு காந்தாரக் குரலை ஒரு குழந்தையின் புன்னகை நழுவியோட இசைத்துக்கொண்டே இருந்த மகத்தான மனிதரே இப்போது மறைந்துவிட்டிருக்கிறார், தமது இசை மேதைமைக்கு சாகா வரம் அளித்துவிட்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x