Last Updated : 02 Apr, 2016 10:21 AM

 

Published : 02 Apr 2016 10:21 AM
Last Updated : 02 Apr 2016 10:21 AM

தேசிய விருது பெற்ற ஆவணப்படம்: யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி

மைய அரசு அறித்திருக்கும் தேசிய விருதுகள் பட்டியலில் ஓர் ஆவணப் படமும் இடம் பெற்றிருக்கிறது. அம்ஷன் குமார் இயக்கத்தில் வெளியாகிவுள்ள லய ஞான குபேர பூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி எனும் ஆவணப்படம்தான் அது.

42 வயதே வாழ்ந்து 40 வருடங்களுக்குமுன் மறைந்துவிட்ட தவில் மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியைப் பற்றி அரிய பல தகவல்கள், இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பல வருடங்களுக்கு முன் கிருஷ்ணா கான சபாவில் நடந்த நாகஸ்வரக் கச்சேரிக்கு தெட்சணாமூர்த்தி தவில். முன் வரிசையில் உட்கார்ந்து முழுக் கச்சேரியையும் கேட்டு ரசித்த மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர், ‘‘உலகத்துல ஏழு அதிசயங்கள் இருப்பதாக சொல்லப்படுவது உண்டு. நீங்க எட்டாவது அதிசயம்’’ என்று தெட்சணாமூர்த்தியைப் பாராட்டியிருக்கிறார்.

ஈழநாட்டில், யாழ்ப்பாணத்தில் இணுவில் என்ற கிராமத்தில் தவில் வித்வான் விஸ்வலிங்கம் - ரத்தினம் தம்பதிக்கு மகனாக 26.8.1933-ல் பிறந்தவர் தெட்சணாமூர்த்தி. முதலில் இவருக்கு வைக்கப்பட்டப் பெயர் ஞானபண்டிதன். பின்னர் தெட்சணாமூர்த்தி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். 1957-ல் மனோன்மணி என்பவரை மணந்திருக்கிறார். இவருக்கு மகன்கள் மூவர். இரண்டு மகள்கள்.

சிறுவயது முதலே மகனை தவில் வாசிப்பில் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார் தந்தை. தினமும் சுமார் 14 மணி நேரத்துக்குப் பயிற்சி. நாட்கள் நகர்ந்தன. தெட்சணாமூர்த்தி இலங்கையில் மட்டுமே பயிற்சி எடுத்தால் போதாது என்று நினைத்தார் தந்தை. மகனை அழைத்துவந்து தமிழகத்தில் நாச்சியார்கோவில் ராகவப் பிள்ளையின் பொறுப்பில் சிறுவனை ஒப்படைத்துவிட்டு சென்றார்.

ஒன்றரை ஆண்டுகள்தான் குருகுலவாசம். ‘‘தம்பி, ஒரு அபிப்பிராயம் காதில் விழு வதற்குள்ளாகவே உன் கைவிரல்களில் அது ஒலித்து விடும்படியான கடவுள் ஆசி பெற்றுள்ள நீ, இனி ஊருக் குத் திரும்பலாம்” என்று ஆசீர் வதித்து தெட்சணாமூர்த்தியை இலங்கைக்கு திருப்பி அனுப் பினார் ராகவப் பிள்ளை.

சென்னையில் ஆண்டு தோறும் நடைபெறும் தமிழி சைச் சங்கத்தின் இசைவிழா வில், காருகுறிச்சி அருணா சலத்தின் நாகஸ்வரக் கச்சேரி யில் நீடாமங்கலம் சண்முக வடிவேலுவும், தெட்சணா மூர்த்தியும் தவில் வாசிப்பார் கள். வானொலி நிலையம் இரவு 12 மணி வரை அதனை ஒலிபரப்பும்.

திருமணத்துக்குப் பின்னர் இலங்கையில் அளவெட்டிக்குக் குடியேறியிருக் கிறார் தெட்சணாமூர்த்தி. அங்கு ‘கலாபவனம்’ என்ற பெயரில் பங்களா எழுப்பி அமைதியாக வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால், சக கலைஞர்களுக்கு பொறாமை. இலங்கையைவிட்டே வெளியேறிவிடும் அளவு தெட்சணாமூர்த்தி மனதில் வெறுப்பை வளர்த்தார்கள். கடைசியில், குடும்பத்துடன் கிளம்பி தஞ்சைக்கே வந்துவிட்டார்.

ஒருமுறை புகழ்மிக்க பாடகர்கள் சிலர் தமது கச்சேரியில் தவில் வாசிக்க வேண்டும் என்று தெட்சணாமூர்த்தியிடம் கேட்டிருக்கிறார்கள். ‘‘தவில் என்பது நாகஸ்வரத்துக்குத் தொன்மைக் காலமாகவே இணைந்து வாசிக்கப்பட்ட வாத்தியம். இந்த மரபை பாழாக்க நான் விரும்பவில்லை’’ என்று மறுத்துவிட்டாராம் அவர்!

தனித் தவில் கச்சேரி செய்யும்படியும் பலர் இவரை வற்புறுத்தியிருக்கிறார்கள். ‘‘ஒரு நாகஸ்வரத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்.. அதனுடன் இணைந்தே நான் வாசிப்பேன்...” என்று கூறி தெட்சணாமூர்த்தி தனி ஆவர்த்தனம் செய்ய மறுத்த சம்பவங்கள் பல உண்டு!

தெட்சணா மூர்த்தியின் தவில் வாசிப்புக்கு மிகப் பெரிய விசிறி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இவருடைய மகளின் திருமணத்துக்கு தவில் வாசித்து சிறப்பித்திருக்கிறார் தெட்சணா மூர்த்தி.

தெட்சணாமூர்த்தியின் இசை உலகப் பங் களிப்பு பலவும் ஆவணப்படுத்தப்படாமலே இருந்தன. இந்தக் குறையை போக்குவிதமாக அமைந்திருக்கிறது தவில் மேதையைப் பற்றி அம்ஷன் குமார் எடுத்திருக்கும் இந்த ஆவணப்படம்.

‘‘தமிழகம் வந்திருந்த இ.பத்மநாப ஐயர், கே.கே.ராஜா ஆகியோரை கும்பகோணம் அழைத்துச் சென்று, கலை விமர்சகர் தேனுகாவை சந்திக்க வைத்தேன். தமிழ் நாட்டுக் கோயில் சிற்பங் களைப் பற்றி எங்களுடன் பேசிக் கெண்டிருந்த தேனுகா, என்னுடன் வந்திருந்த இரு இலங்கைக்காரர்களை மன தில் கொண்டு யாழ்ப் பாணம் தெட்சணாமூர்த்தியின் இசையைப் பற்றி மேலதிக மான தகவல்களைக் கூறினார்.

பத்மநாப ஐயர் பரவச மடைந்து, தெட்சணாமூர்த்தி யின் இசை ஆற்றலை வருங் கால தலைமுறையினர் போற் றும் வகையில் ஓர் ஆவணப் படம் எடுக்கவேண்டும் என்று அங்கேயே அவர் முடிவு செய்து, அப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்’’ என்கிறார் அம்ஷன் குமார்.

‘‘வட இந்திய இசையில் தான்ஸேனுக்கு இருந்த சிறப்பைத் தவில் இசையில் பெற்றவர் யாழ்ப் பாணம் தெட்சணாமூர்த்தி’’ என்று குறிப்பிடுகிறார் இசை ஆராய்ச்சியாளர் பி.எம்.சுந்தரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x