Last Updated : 30 Apr, 2016 11:03 AM

 

Published : 30 Apr 2016 11:03 AM
Last Updated : 30 Apr 2016 11:03 AM

காத்தாடி / சாருகேசி 60:60

ஒவ்வொரு முறையும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நடத்தும் கோடை நாடக விழாவில் காத்தாடி ராமமூர்த்தி பங்கேற்கும் நாடகம் அரங்கேறும்போது பரபரப்புத் தொற்றிக்கொள்கிறது. காத்தாடி நாடக மேடையேறி 60 வருடங்கள் பறந்துவிட்டன. நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன் காணப்பட்ட அதே தோற்றம் அப்பாவி முகம், பாடி லாங்க்வேஜ், சர்வமும் அப்படியே இன்று வரை இருப்பது காத்தாடி ஸ்பெஷல்.

எஸ்.எல். நாணுவின் கதை, வசனம், இயக்கத்தில் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் கோடை நாடக விழாவில் அரங்கற்றிய ‘நீயா, நானா’ நாடகத்தில் காத்தாடிக்கு அப்பா ரோல். ஒவ்வொரு காட்சியிலும் காத்தாடி உயரே உயரே பறக்கி றார். சாதாரண ஜோக், காத்தாடி வாய்வழி வரும்போது ஸ்பெஷல் நகைச்சுவை அந்தஸ்து பெற்று விடுகிறது. காத்தாடிக்கு 78 வயது. இவரது ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் குழுவுக்கு பொன்விழா.

காத்தாடியின் பூர்வீகத்தை கூகுளில் தேடியபோது... கும்ப கோணம், பாணாதுரை பள்ளியில் படிப்பு. 1953-ல் சென்னைக்கு ரயிலேறுகிறார். விவேகானந்தா கல்லூரியில் படிக்கும்போது கல்லூரியில், தேவனின் ‘கோமதி யின் காதலன்’ மேடையேற்றப் படுகிறது. இதில் வில்லனின் கைத்தடி பக்கிரி வேடமேற்கிறார்.

60-களில் ‘இஃப் ஐ கெட் இட்’ என்று ஒரு நாடகம் போட்டார் ‘சோ’. அதில் ‘காத்தாடி’ என்கிற பாத்திரத்தில் நடித்தார் ராமமூர்த்தி. அந்த நாடகம் ராமமூர்த்திக்கு தந்த ஒட்டுதல்தான் ‘காத்தாடி’.

இதைத் தொடர்ந்து பகீரதனின் ‘தேன்மொழியாள்’ கதைக்கு கூத்தபிரான் நாடக வடிவம் தர, அதில் குடிகாரர் வேடம். 1965-ல் சொந்தக் குழு. அதன் பின் நாடகாசிரியர் கே.கே.ராமனின் அறிமுகத்தில் காத்தாடி ஜோராகப் பறக்கத் தொடங்குகிறது. 1970-ல் கிரேஸி மோகனின் ‘அய்யோ... அம்மா... அம்மம்மா’வை மேடையேற்றுகிறார்.

40 நாடகங்களை 7,000 தடவை மேடையேறிவிட்டார் காத்தாடி. பயணம் தொடர்கிறது!

60 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் 78 வயதுக்காரர் சாருகேசி..

தமிழ்ப் புத்தக நண்பர்கள் அமைப்பு, ஆர்.டி.சாரியின் Tag மையத்தில் சாருகேசிக்குப் பாராட்டு விழா நடத்தியது. விழாவில் இவரது இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. ‘மம்முட்டி முதல் மன்மோகன் சிங் வரை’ சாருகேசி தமிழில் எழுதிய கட்டுரை தொகுப்பு. ‘Jewels and other stories’ இவர் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டவை.

விஸ்வநாதன் சுப்ரமணியன் என்கிற இவரது இயற்பெயரை சாருகேசியாக்கியவர் வாதூலன். அப்போது இவருக்கு சாருகேசி என்று ஒரு ராகம் இருப்பதுகூட தெரியாதாம். பின்னாட்களில் நிறைய கச்சேரிகள் கேட்டு, புத்தகங்கள் படித்து தனது கர்னாடக இசை அறிவைப் பெருக்கிக் கொண்டார். இன்று, தமிழிலும் ஆங்கிலத்திலும் சங்கீத. நாட்டிய, நாடக விமர்சனங்கள் எழுதி வருகிறார்.

சாருகேசியின் முதல் கட்டுரை ‘கண்ணன்’ (1955) இதழில் வெளியானது. அதற்கு வழங்கப்பட்ட சன்மானம், ரூபாய் 5. முதல் சிறுகதை ‘கல்கி’யில் (1960) வெளியானது.

அகமதாபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கிறார் இவர். அந்த நிறுவனம் வெளியிட்ட பத்திரிகையில்தான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறார். சென்னை வந்ததும் ஹிந்து, வீக் எண்ட் எக்ஸ்பிரஸ், எகனாமிக் டைம்ஸ் போன்ற நாளேடுகள் இவருடைய ஆங்கிலக் கட்டுரைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தின.

டாக்டர் சுதா மூர்த்தியின் மூன்று ஆங்கில நூல்களை தமிழில் மொழிப்பெயர்த்து டிரான்ஸ்லேட்டர் அவதாரமும் எடுத்தார் சாருகேசி.

அன்று பாராட்டிப் பேசிய அனைவருமே சாருகேசியின் எளிமையை, அலட்டல் இல்லாத பண்பை, பணிவை, நகைச்சுவை எழுத்தாற்றலை சிலாகித்துப் பேசினார்கள்.

வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x