Published : 09 Apr 2016 11:36 AM
Last Updated : 09 Apr 2016 11:36 AM

சரண் ராணி பாக்லீவால் 10

பிரபல சரோட் வாத்தியக் கலைஞர்

இந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத மேதையும், புகழ்பெற்ற சரோட் வாத்தியக் கலைஞருமான சரண் ராணி பாக்லீவால் (Sharan Rani Backliwal) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# டெல்லியில் புகழ்பெற்ற வியாபாரிகள், கல்வியாளர்களின் குடும்பத்தில் (1929) பிறந்தார். இசை பாரம்பரியம் இல்லாத குடும்பம் என்றாலும், தங்கள் மகள் அதில் சாதிக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்பினர். சிறு வயதிலேயே உஸ்தாத் அலாவுதீன் கான், அவரது மகன் உஸ்தாத் அலி அக்பர் கான் உள்ளிட்ட மேதைகளிடம் சரோட் கற்றார்.

# பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா மகளிர் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றார். கதக், மணிப்புரி நடனமும் பயின்றார். இசை, நடனம் இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்று குழம்பினார். இறுதியில் இசையே வென்றது. விடுதலைப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.

# மேடைக் கச்சேரிகளில் 1930 முதல் சரோட் வாசித்தார். ஆண்கள் மட்டுமே வாசித்த சரோட் இசையில் வல்லமை பெற்றார். 1950-களில் வெளிநாடுகளில் ஏராளமான கச்சேரிகள் வழங்கினார். உலகம் முழுவதும் உள்ள பிரபல இசையரங்குகளில் கச்சேரிகள் நடத்தியவர். இசைக் கலைஞர் என்ற வகையில் உலகம் முழுவதும் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் இவர்தான்.

# அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் இசை நிறுவனங்களுடன் இணைந்து யுனெஸ்கோ அமைப்புக்காக சரோட் இசை ரெக்கார்டிங் செய்தார். இவரது கச்சேரிகளை ஜனாதிபதிகள், பிரதமர்கள், மன்னர்கள், ராணிகள் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் ரசித்துள்ளனர்.

# குழந்தைகள், இளைஞர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்த எப்போதும் தயாராக இருப்பார். தொண்டு நிறுவனங்களுக்காக பல நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்தியுள்ளார். வளரும் கலைஞர்கள், வறிய நிலையில் உள்ள கலைஞர்களுக்கு விளம்பரமின்றி பல உதவிகளை செய்துள்ளார்.

# சரோட் இசையின் வரலாறு குறித்த நூலை எழுதினார். இசை பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இசை சம்பந்தமாக உலகின் பல முக்கிய நகரங்களில் ஏராளமான விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார்.

# குரு-சிஷ்ய பாரம்பரிய முறைப்படி இசை கற்றுக் கொடுத்தார். பல மாணவர்கள் இவரது வீட்டில் ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்து இசை பயின்றனர். ஆனால், ஒருவரிடம்கூட இவர் கட்டணம் வாங்கியதே இல்லை.

# இந்தியாவின் கலைப் பண்பாடு, பாரம்பரியப் பெருமை அடுத்தடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும் என்ற நோக்கில், பழமையான, அரிதான 15-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரையிலான ஏறக்குறைய 450 வாத்தியங்களை சேகரித்தார். இவற்றை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

# பத்மஸ்ரீ, பத்மபூஷண், தேசிய கலைஞர், சாகித்ய கலா பரிஷத் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளன. ‘இந்தியாவின் கலாச்சாரத் தூதர்’ என ஜவஹர்லால் நேருவால் புகழாரம் சூட்டப்பட்டவர்.

# சரோட் இசையை உலகம் முழுவதும் பரவச் செய்தவரும், ‘சரோட் ராணி’ என போற்றப்பட்டவருமான சரண் ராணி பாக்லீவால் 2008 ஏப்ரல் 8-ம் தேதி 79-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x