Last Updated : 27 Apr, 2016 09:27 AM

 

Published : 27 Apr 2016 09:27 AM
Last Updated : 27 Apr 2016 09:27 AM

நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ.. ஆனா, வெத.. நான் போட்டது!

உங்கள் அபிமான ‘கற்பனை’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வைத்தி மகன்’ படத்தின் அனல் தெறிக்கும், உருக்கமான வசனங்களில் இருந்து ஒரு பகுதி..

வைத்தி: கோபால்.. கோபால்.. இங்கிட்டு வா..!

(வைத்தியின் முன்பு வந்து நிற்கிறார் கோபால்)

வைத்தி: சிலைக்கு மாலை போடப் போனீகளா?

கோபால்: ஆமாய்யா.

வைத்தி: ஆட்சி அமைக்கிறதுக்கு இதோ நாங்க இருக்கோம்னு வீறாப்பா பேசுனீகளே, இப்போ இந்த ஊரோட நெலமை புரிஞ்சுதா?

கோபால்: நல்லாவே புரியுதுய்யா. நான் செஞ்ச தப்பும் புரியுதுய்யா. அதுக்கு தண்டனையா இந்த தேர்தல்ல நிக்காம போயிரலாம்னு இருக்கேன்யா.

(அதிர்ச்சியுடன் எழுகிறார் வைத்தி)

வைத்தி: தேர்தல்ல.. நிக்கலியா..? ஹ.. நடந்ததுக்கு பரிகாரம் தேடாம.. தேர்தல்ல நிக்கலேன்னு சொல்லுறது கோழைத்தனம் இல்ல?

கோபால்: அதுக்காக...?

வைத்தி: அதுக்காக…???

கோபால்: அதுக்காக.. நடக்கற காட்டுமிராண்டித்தனத்த வீரம்னு நெனைச்சுட்டு இருக்கறது முட்டாத்தனம்.

வைத்தி: இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தன்தான்றத மறந்துறாத.

கோபால்: அப்படிப் பாத்தா நானும்தான்யா ஒருத்தன். ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. இருநூறு வருஷம் பின்தங்கியிருக்கற இந்த கிராமத்துல என்னோட அரசியல் வாழ்க்கைய வேஸ்ட் ஆக்க விரும்பலய்யா.

வைத்தி: இருநூறு வருஷம் பின்தங்கித்தான் போயிட்டோம் ஒத்துக்கறேன். அதுக்காக எலெக்சன்ல நிக்காம முதலமைச்சரா ஆகணும்னு ஆசைப்பட்டா எப்பிடி..? நீ படிச்சவனாச்சே. நம்ம பயலுகள உன் கட்சிக்கு கூட்டிகிட்டு வா. ஆனா அந்தப்பய மெதுவாதான் வருவான்.. மெதுவாதான் வருவான்.

கோபால்: மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள எலெக்சனே முடிஞ்சிரும் போல இருக்கே!

வைத்தி: முடியட்டும். நான் தடுக்க முடியுமா? எல்லா எலெக்சனும் ஒருநாள் முடிய வேண்டியதுதான். எலெக்சன் முக்கியம்தான். இல்லைன்னு சொல்லல. ஆனா அதுல டெபாசிட்டாவது வாங்குறதுதான் பெருமை. வேட்புமனு தாக்கல் செஞ்சதுமே முதலமைச்சர் ஆகிட்டதா நினைக்கக் கூடாது. வெத வெதைச்சவுடனே பழம் சாப்பிடணும்னு நெனைக்க முடியுமோ? இன்னைக்கு நான் வெதைக்கறேன். நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ.. அப்புறம் உன் பையன் சாப்பிடுவான்.. அதுக்கப்புறம் அவன் பையன் சாப்பிடுவான்... அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்கமாட்டேன். ஆனா வெத.. நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை. ஒவ்வொருத்தரோட கடமை.

கோபால்: ஆனா, இந்த மண்ணுல தண்ணிக்கு பதிலா ரத்தத்தை ஊத்துற வரைக்கும் எத வெதச்சாலும் வெளங்காதுய்யா. என்ன விட்டுருங்கய்யா. நான் போறேன்.

(வைத்தி ஆவேசமாகி கோபாலின் சட்டையை பிடிக்கிறார். பின்பு கசங்கிய சட்டையை சரிசெய்கிறார்.)

வைத்தி: தோள்ல துண்ட போட்டுக்கிட்டு, நெஞ்ச நிமிர்த்தி அய்யாவை பேசற வயசுல்ல.

கோபால்: இல்ல. அப்படி இல்லய்யா.

வைத்தி: வேற எப்படி? வேற எப்படின்னு கேக்குறேன். போன எலெக்சன்லயும் நிக்காம ஓடிப்போயிட்ட. இப்பவும் ஓடிறப்போறேன்னு சொல்றீகளே. எலெக்சன்ல ஜெயிச்சி முதலமைச்சரா ஆகி மக்களுக்கு நல்லது செய்யி, போ.

வைத்தி: முதலமைச்சரா இருந்துதான் நல்லது செய்யணும்னு இல்லய்யா.. அவங்களுக்கு ஜால்ரா அடிச்சும் நல்லது செய்யலாம். நான் போறேன்யா.

வைத்தி: (தழுதழுத்த குரலில்) அடுத்த எலெக்சன்ல கண்டிப்பா போட்டியிடுவேன்னு சொல்லிட்டாவது போயேன். அந்த நம்பிக்கைதான கட்சியில உள்ளவங்களுக்கு முக்கியம்.

(கோபால் எதுவுமே சொல்லாமல் சென்றுவிடுகிறார்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x