Last Updated : 24 Jan, 2022 06:40 AM

 

Published : 24 Jan 2022 06:40 AM
Last Updated : 24 Jan 2022 06:40 AM

தினம் தினம் யோகா 53: சர்வாங்காசனம்

தோள்பட்டை முதல் ஒட்டுமொத்த உடம்பும் இந்த ஆசனத்தில் உயர்த்தப்பட்டிருக்கும். ஆனால், அது மட்டுமே பெயர்க் காரணம் அல்ல.

சர்வாங்காசனம் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மூளை சுறுசுறுப்படைகிறது. மலச்சிக்கல் சரியாகிறது. செரிமானம் நன்கு நடைபெறுகிறது. முதுகுத்தண்டு வலுவடைவதால், முதுகு வலி நீங்குகிறது. தைராய்டு, பாரா தைராய்டு, இனப்பெருக்க சுரப்பிகளின் இயக்கம் சீராகிறது. உடல் எடை கட்டுக்குள் இருக்கிறது. இவ்வாறு உடம்பின் அனைத்து அங்கங்களுக்கும் பலன் தரக்கூடிய ஆசனம் என்பதாலேயே இதற்கு ‘சர்வாங்காசனம்’ என்ற பெயர். அதனாலேயே, இது ஆசனங்களின் ராணி (Queen of Asanas) எனப்படுகிறது.

இதற்கு முன்பு பார்த்த ஹலாசனத்தின் தொடர்ச்சி என்று இதை கூறலாம். இதை எவ்வாறு செய்வது என பார்க்கலாம். மேல்நோக்கி படுத்துக் கொள்ளுங்கள். கால்கள் சேர்ந்தும், கைகள் உடலை ஒட்டியும், உள்ளங்கைகள் தரையில் பதிந்தும் இருக்கட்டும். மெல்ல, மூச்சை இழுத்தபடி முட்டி மடங்காமல் இரு கால்களையும் உயர்த்தவும். தலை முதல் இடுப்பு வரை தரையில்பதிந்திருக்க, கால்கள் செங்குத்தாக இருக்கட்டும். கைகள் உதவியுடன் இடுப்பு, முதுகையும் மெல்லஉயர்த்தவும். இடுப்பு, முதுகு மேலே உயர உயர,தோள்பட்டையை நோக்கி கைகளை இறக்கிக்கொண்டே வரவும். இப்போது, தோள்பட்டை தவிர, மற்ற அனைத்து பாகங்களும் நன்கு மேல்நோக்கி இருக்கும். 1-10 வரை எண்ணி, மெல்ல கால்களை கீழே இறக்கி ரிலாக்ஸ் செய்துகொள்ளவும். சுவர் மீது கால்களை வைத்து பழகி, பேலன்ஸ் வந்த பிறகு இந்த ஆசனத்தை முயற்சிப்பது நல்லது.

நாளை – ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x