Published : 06 Jan 2022 10:48 AM
Last Updated : 06 Jan 2022 10:48 AM

9 வயதில் பிரிவு; 33 வயதில் தாயுடன் சந்திப்பு: கணவரால் கைகூடிய பிணைப்பு

தாய் சைத்ராவுடன் மகள் அஞ்சலி

கேரளாவில் தனது தாயை 9 வயதில் பிரிந்தவர் தனது 33வது வயதில் மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். அதுவும் கணவரின் உதவியால் இந்த பாசப் பிணைப்பு அரங்கேறியுள்ளது.

அஞ்சலி தனது தாயைப் பிரிந்த கதை 22 ஆண்டுகள் பழமையானது. அப்போது அஞ்சலிக்கு 9 வயது. அவரது பெற்றோர் சைத்ரா, காளிமுத்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் கர்நாடகாவில் உள்ள முடிகிரி காப்பி தோட்டத்தில் கூலி வேலை செய்துவந்தனர். அவர்கள் தங்கியிருந்த எஸ்டேட் அருகே ஒரு யானைப் பாகனின் குடும்பமும் தங்கியிருந்தது. இரு குடும்பத்தின் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடித் திரிவர் அப்படி ஒருநாள் விளையாடச் சென்ற அஞ்சலி மாலை வீடு திரும்பவில்லை. அஞ்சலியின் பெற்றோர் சென்று பார்த்தபோது பாகனின் குடும்பமும் அங்கில்லை. இதனால் பாகன் குடும்பம் தான் மகளைக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று சைத்ரா முடிவுக்கு வந்தார். வறுமையின் காரணத்தால் மகள் தொலைந்தது பற்றி சைத்ரா போலீஸில்கூட புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில், அஞ்சலியை அந்தப் பாகனின் குடும்பம் கேரளாவுக்கு அழைத்துச் சென்றது. அங்கே சிறுமி வீட்டு வேலைகளைப் பார்த்து வளர்ந்தார். பின்னாளில் அவர் நெல்லமணி ஷாஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கணவரிடம் அவர், தனது தாயைப் பிரிந்த கதையைக் கூறினார். இதனையடுத்து ஷாஜி, மனைவியை அவருடைய தாயுடன் மீண்டும் சேர்த்துவைக்க விரும்பினார். கோழிக்கோட்டில் உள்ள தனது நண்பர்கள் மூலம் கர்நாடகாவின் முடிகிரி பகுதியில் சேவையாற்றும் சமூகசேவகர் மோனுவைத் தொடர்பு கொண்டார். மோனு தனக்குத் தெரிந்த எஸ்டேட் ஊழியர்கள் மூலம் சைத்ராவைக் கண்டுபிடித்தார். சைத்ராவிடம் அவரது மகள் பற்றி விசாரித்தார். அஞ்சலி சொன்ன கதையும், சைத்ரா சொன்ன கதையும் ஒத்துப்போகவே சைத்ராவின் புகைப்படம், வீடியோவை எடுத்து அஞ்சலிக்கு அனுப்பிவைத்தனர். அதனைப் பார்த்த அஞ்சலி, வீடியோவில் இருப்பவர் தனது தாய் என உறுதி செய்தார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான அஞ்சலி, கணவர் ஷாஜியுடன் முடிகிரிக்குச் சென்றார். அங்கே நடந்த காட்சிகள் அனைவரையும் நெகிழச் செய்தது. காப்பித் தோட்டத்தில் வயது மூப்பினால் பாதிக்கப்பட்டு நின்றிருந்த தாயை ஓடிச் சென்று ஆரத் தழுவினார் அஞ்சலி. அம்மாவைக் கட்டித் தழுவி ஆனந்தமடைந்த பின்னர் முதல் வேளையாக அஞ்சலி தனது கணவர் ஷாஜியை அறிமுகப்படுத்தி வைத்தார். ஷாஜி தான் இதற்குக் காரணம் என்று கூறி நெகிழ்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x