Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

தினம் ஒரு யோகா 11: பவன முக்தாசனம்

எஸ்.ரவிகுமார்

கால் நீட்டி விரிப்பின் மீது படுத்துக் கொள்ளவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். சுவாசம் சீராக இருக்கட்டும். முட்டி மடங்காமல் இடது காலை தரையில் இருந்து சற்று உயர்த்தவும். 1-3 எண்ணவும். காலை மடித்து, தொடைப் பகுதியைமார்போடு சேர்த்து வைத்து, கைகளால் காலை நன்கு கட்டியணைக்கவும். தலையை உயர்த்தி, தாடையால் இடது கால் முட்டியை தொட முயற்சிக்கவும். 1-5 எண்ணவும். தலை, கைகள், காலை விடுவித்து ரிலாக்ஸ் செய்யவும்.இதேபோல, அடுத்து வலது காலை பயன்படுத்தி செய்யவும்.

அடுத்து, இரு கால்களையும் சேர்த்து செய்வோம். முட்டி மடங்காமல் கால்களை தரையில் இருந்து சற்று உயர்த்தவும். 1-3 எண்ணவும். கால்களை மடித்து, தொடைகளை மார்போடு சேர்த்து வைத்து, கைகளால் கால்களை இறுக்கமாக கட்டியணைக்கவும். தலையை உயர்த்தி, தாடையால் கால் முட்டிகளை தொடுவதற்கு முயற்சிக்கவும். முடியாவிட்டால், மூக்கு, நெற்றியால் தொட முயற்சியுங்கள். இந்த நிலையில் 1-5 எண்ணவும். கை, கால்களை விடுவிக்காமல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல, முன்னும் பின்னுமாக ஓரிரு முறையும், இடது, வலதாக ஓரிரு முறையும் உருளவும். சமநிலைக்கு வந்து தலை, கைகள், கால்களை விடுவித்து ரிலாக்ஸ் செய்யவும்.

தேவையற்ற வாயுக்களை நீக்குகிறது. செரிமானம் சீராகிறது. மலச்சிக்கல் சரியாகிறது. வயிறு, இடுப்பு சதைகள் குறைகின்றன. கழுத்து வலி, முதுகு டிஸ்க் பிரச்சினை, குடலிறக்கம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

நாளை - பழிக்கு பழி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x