Published : 03 Mar 2016 08:58 AM
Last Updated : 03 Mar 2016 08:58 AM

மன்னா.. என்னா?- அப்புறம்தான் சம்பவமே ஆரம்பித்தது

முகம், கை, கால்களில் பேண்டேஜ் போட்ட நிலையில் அரசவைக்கு வந்தது ஒரு உருவம். அட, மன்னர்தான்! பார்க்க கொஞ்சம் காமெடியாக இருந்தாலும், பரிதாபமாகவும் இருந்தது. முந்தைய நாள் நள்ளிரவில் நடந்த சம்பவம் பற்றி கூறத் தொடங்கினார் மன்னர்..

‘‘அசந்து தூங்கிக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராத வகையில், முகமூடி அணிந்த நாலைந்து பேர் திடீரென நிலாமுற்றத்தின் வழியாக உள்ளே குதித்தார்கள். என் கழுத்திலே கத்தியை வைத்து, ‘உன்னுடைய பணத்தை எல்லாம் எடு’ என்றார்கள். என்னிடம் அவ்வளவு இல்லை. நான் மிகவும் ஏழை என்றேன். அலங்கார தூண்கள் கொண்ட மாளிகை, தோரண விளக்குகள், பட்டு மெத்தையுடன் கூடிய மஞ்சம்.. இதையெல்லாம் பார்த்தால் ஏழைபோல தெரியவில்லையே என்றார்கள். எல்லாம் ‘இஎம்ஐ’ என்றேன். ஓரளவு நம்பிவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் என்னை விடுவதாக இல்லை.’’

மன்னர் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் புகுந்தார் ஒரு மந்திரி. ‘‘நான் இந்த நாட்டின் மன்னன் என்று சொல்ல வேண்டியதுதானே மன்னா’’ என்றார்.

டென்சன் ஆன மன்னர், ‘‘இதைத்தான் பக்கத்து ரூமில் படுத்திருந்த மட மகாமந்திரியும் சொன்னான். ஒருவேளை, நான் கெஞ்சிக் கூத்தாடியிருந்தால்கூட, பிழைத்துப் போகிறாய் என்று அந்த கொள்ளையர்கள் விட்டுவிட்டுப் போயிருப்பார்கள். அந்த மட மந்திரி சொன்னதைக் கேட்டு நானும் தெனாவட்டாக ‘நான் யார் தெரியுமா? இந்த நாட்டின் மன்னன்’ என்றேன். அப்புறம்தான் சம்பவமே ஆரம்பித்தது. ‘‘நீதான் இந்த நாட்டின் மன்னனா? அப்படியென்றால், எங்களுடைய பணத்தையெல்லாம் எடு’’ என்று மிரட்டி, அரண்மனையில் இருந்த டபரா, டம்ளரைக்கூட விடாமல் மொத்தத்தையும் வழித்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்’’

முகத்தை மிகவும் சீரியஸாக வைத்துக்கொண்டு மன்னரின் கதையை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்தனர் அரசவையினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x