Published : 20 Feb 2016 11:31 AM
Last Updated : 20 Feb 2016 11:31 AM

முத்துக் குளிக்க வாரீகளா 28: அமுதம் பரிமாறுபவர்கள்!

எல்லா மதங்களும் அன்பையே போதிக் கின்றன. ஆனால், மதவாதிகளோ பகைமையையே போதிக்கிறார்கள்.

ஒவ்வொரு மதமும் ஒரு விளக்கு. மதவாதி களோ விளக்கினால் வெளிச்சம் பெறுவதை விட்டுவிட்டுப் பிறருடைய வீடுகளை எரிப்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

இந்து மதம் ‘மனித குலம் ஒரே குடும்பம்’ (வஸுதைய்வ குடும்பகம்) என்கிறது.

‘‘படைப்பினங்கள் இறைவனின் குடும்பம். அவ னுடைய குடும்பத்தார்க்கு நலம் புரிபவனே இறை வன் முன்னிலையில் படைப்புகளிலேயே மிகவும் உயர்ந்தவனாவான்’’ என்கிறார் நபிகள் நாயகம்.

‘‘உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி நட்பும் கருணையும் உடையவனாய்… யார் என் பக்தனா கிறானோ அவன் எனக்குப் பிரியமானவன்’’ என்கிறார் கண்ணபெருமான் பகவத் கீதையில்.

பக்தன் என்றால் அவன் கையில் பூக்கள் இருக்க வேண்டும்; ஜெபமாலை இருக்க வேண்டும். ஆனால், பக்தர்களில் சிலர் பூக்கள் ஏந்த வேண்டிய கைகளில் கடப்பாரைகளை ஏந்துகிறார்கள். ஜெபமாலை இருக்க வேண்டிய கைகளில் வெடிகுண்டுகள் வைத்திருக்கிறார்கள்.

மதவாதிகளில் சிலர் நஞ்சைக் கக்கும் நாகப் பாம்புகளாக இருக்கிறார்கள். சிலர் மட்டும் அமுதம் பரிமாறும் அமரர்களாக இருக்கிறார்கள்.

அந்த அமரர்கள் சிலரைக் காணலாம்:

புகழ்பெற்ற அமர்நாத் பனி லிங்கத்தைக் கண்டு பிடித்தது பூட்டா மாலிக் என்ற ஆடு மேய்க்கும் முஸ்லிம் சிறுவன். அவன் அதை பார்த்து வியந்து ஊர்ப் பெரியவர்களிடம் வந்து கூறினான். அன்று முதல் பனி லிங்க வழிபாடு தொடங்கியது.

பக்தர்கள் பனி லிங்கத்துக்குக் காணிக்கை யாகும் பொருள்களில் ஒரு பங்கு இன்றைக் கும் பூட்டா மாலிக் குடும்பத்தினருக்கு அளிக்கப்படுகிறது.

இன்றைக்கும் பனி லிங்கத்தை தரிசிக்கச் செல்லும் பக்தர்களை குதிரைகளிலும், தூக்கியும் சென்று உதவுபவர்கள் முஸ்லிம்களே.

இந்துக்களைக் கொன்றார், இந்துக் கோயில் களை இடித்தார் என்று வரலாற்றுப் புரட்டர்களால் அநியாயமாகப் பழி சுமத்தப்படும் ஔரங்கசீப் வாரணாசி விசுவநாதர் ஆலயத்தை இடித்தார் என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஏன் இடித்தார் என்பது பற்றி எழுதவில்லை.

விசுவநாதர் ஆலயத்தின் தலைமைப் பூசாரி கட்ச், சமஸ்தான இந்து அரசனின் மனைவியைக் கடத்திச் சென்று கருவறைக்குக் கீழே இருந்த நிலவறையில் கெடுத்துவிட்டான்.

இதை அறிந்த இந்து அரசர்கள் கோயில் தீட்டாகிவிட்டது; எனவே அதை இடித்துவிட வேண்டும் என்று ஒளரங்கசீப்பிடம் முறையிட் டார்கள். அவர்கள் விருப்பப்படி கோயிலை இடித்த ஒளரங்கசீப், புதிதாக ஒரு கோயிலைக் கட்டித் தந்தார்.

அதுமட்டுமல்ல ஒளரங்கசீப் பல இந்துக் கோயில்களுக்கு மானியம் அளித்துள்ளார். அவற்றுள் வாரணாசி ஜங்கம்பதி சிவன் கோயில், உஜ்ஜயினி மகா கலேஷ்வர் கோயில், சித்திரகுத்தின் பாலாஜி ஆலயம், கவுகாத்தி உமான்ந்த் கோயில், சத்ருஞ்ச்சயின் ஜைனர் கோயில் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஒளரங்கசீப் மதுரை ஆதீன மடாதிபதி 237-ஆம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மித்தியேஸ்வர சுவாமிகள் காலத்தில், குருமகா சன்னிதானம் அணிந்துகொள்வதற்காக யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட ‘திருவடிக’ளையும் வெள்ளியால் செய்த ‘சோடச உபசார தீபாராதனை’ப் பொருட் களையும், நைவேத்யம் செய்ய வெள்ளிப் பாத்திரங்களை அளித்ததோடு, பயணத்தில் சவாரி செய்ய இரண்டு ராஜஸ்தான் குதிரைகளையும் அன்புப் பரிசாக அளித்து மகிழ்ந்தார் என்று மதுரை ஆதீன வரலாறு கூறுகிறது.

டெல்லியை முஸ்லிம்கள் ஆண்ட காலத்தில் நாணயங்களில் லட்சுமி, சீதை, ராமர் உருவங்களைப் பொறித்தார்கள்.

ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஷீகோ வேதம், உபநிடதங்களின் சிற்சில பகுதிகளை பாரஸீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்த நூல்களின் மூலமே ஐரோப்பியர் இந்து மதம் பற்றி அறிந்துகொண்டனர்.

அக்பரின் அரசவைக் கவிஞராக இருந்த ஷைகுஃபைஸி மஹாபாரதத்தைப் பாரஸீக மொழியில் மொழிபெயர்த்தார்.

இந்துக் கோயில்களையெல்லாம் இடித்தார் என்று பழிசுமத்தப்படும் மாலிக்காபூர் மதுரை ஆதீன 238-ஆம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலாயுத சுவாமிகள் காலத்தில் ஆதீனத்திற்கு வந்து கலந்துரையாடி மகிழ்ந்ததோடு, பூசைக்கு வேண்டிய வெள்ளிப் பாத்திரங்களை அளித்து மகிழ்ந்தார் என்று மதுரை ஆதீன வரலாறு கூறுகிறது.

சிருங்கேரி மடத்தின் மீது படையெடுத்த பரசுராம் பாவ் என்ற மராத்தியன் மடத்தைக் கொள்ளையடித்து நாசம் செய்ததோடு ஸ்ரீ சாரதா தேவியின் விக்கிரகத்தையும் அகற்றினான்.

மடாதிபதி திப்பு சுல்தானிடம் முறையிட்டார். அவர் மடத்திற்கு வேண்டிய பொருட்களை அனுப்பி வைத்ததோடு ஸ்ரீசாரதா தேவியின் சிலையையும் நிறுவ உதவினார்.

அதுமட்டுமின்றித் திப்புசுல்தான், ஸ்ரீ வெங்கட் ரமணா, ஸ்ரீநிவாஸ், ஸ்ரீரங்கநாதர் பெயர்களில் உள்ள கோயில்கள், கோவை குறிச்சி செல்லப்பாண்டி அம்மன் கோயில், சேலம் மின்னக் கல் கோபால கிருட்டிணன் கோயில், மேலும் பல இந்துக் கோயில்களுக்கு மானியங்களை வாரி வழங்கியுள்ளார். மதுரை ஆதீனத்துக்கும் பூசைக்குரிய வெள்ளிப் பாத்திரங்கள் அளித்த தோடு ஓர் ஆண் யானையையும் பரிசாக அளித்து மகிழ்ந்திருக்கிறார்.

கி.பி. 1688-ல் காஞ்சி வரதராஜப் பெருமாள், தாயார் திருமேனிகளைத் திருச்சி மாவட்ட உடை யார் பாளையக் காட்டில் கொண்டு போய் வைத் திருந்தார்கள். கோயில் நிர்வாகிகள் எவ்வளவோ கேட்டும் உடையார்பாளையம் ஜமீன்தார் திரு மேனிகளைக் கொடுக்க மறுத்துவிட்டார். ஆத்தான் திருவேங்கட இராமனுஜ ஜீயர் கர்நாடக நவாப் சாததுல்லாகானிடம் முறையிட்டார். நவாப் தளபதி தோடர்மாலிடம் படையோடு சென்று திருமேனி களை மீட்டு வருமாறு ஆணையிட்டார். தோடர் மாலும் அவ்வாறே சென்று திருமேனிகளை மீட்டு வந்தார். அதன் பின்னர் திருமேனிகள் கோயிலில் முறைப்படி பிரதிட்டை செய்யப்பட்டன.

திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு ஹைதர் அலி 8 கிலோ தங்கக் காசு மாலை அளித்தார். அது இன்றும் சுவாமி அலங்காரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நூறாண்டுகளுக்கு முன் திருப்பதி வெங்கடேஸ் வரருக்கு ஒரு முஸ்லிம் அளித்த பெரிய தங்கப் பதக்கமும் இன்றும் அலங்காரத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஹைதராபாத் முஸ்லிம் வியாபாரி எஸ்.மீரான் சாஹிப் 1.5 கிலோ எடையுள்ள 108 தங்க மலர்களைத் திருப்பதி கோயிலுக்கு அளித்தார். அவை இன்றும் செவ்வாய்தோறும் செய்யப்படும் அஷ்டதல பாத சேவையில் சுவாமியின் பாதத்தில் அர்ச்சிக்கப்படுகின்றன.

மீரான் சாஹிப் திருச்சானூர் பத்மாவதி தேவிக்கும் தங்கக் கோப்பை ஒன்றை அளித் திருக்கிறார். அது இன்றும் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டை திருவேட்டகம் கோயிலுக்கு ஆர்க்காடு நவாப் மானியம் அளித்திருக்கிறார். அன்று முதல் இன்றுவரை அந்த நவாப் கட்டளைப்படி ஒரு முஸ்லிம் வீட்டில் இருந்து கோயிலுக்கு பால், பழம், பூ அனுப்பப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சையது இஸ்மாயில் நிர்வாகியாக இருந்துள்ளார். இன்றும் அவர் சாமதி கோயில் வளாகத்திலேயே இருக்கிறது.

வடஆர்க்காடு சோழிங்கர் அருள்திரு பக்தவத்சலு சுவாமி கோயிலில் ஆண்டாள் திருமேனி இல்லாதிருப்பதை அறிந்து மொகலாய மன்னர் பரூக் சீயர் அதனை அக்கோயிலுக்குள் பிரதிட்டை செய்ய உதவினார்.

கிழக்கிந்தியக் கம்பெனி படையெடுப்பால் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் கோயில் கள் சேதப்படுத்தப்பட்டன. பூஜைகள் நடைபெற வில்லை. இதையறிந்த கர்நாடக நவாப் அமீகாத் சாயுபு 1793-இல் கோயில்களைப் புதுப்பிப்பதற் கும், பூஜைகள் நடைபெறவும் ஏற்பாடு செய்தார்.

18-ஆம் நூற்றாண்டில் குற்றாலநாதருக்கும், நெல்லை காந்திமதி அம்மனுக்கும் திருவிழாக் கொண்டாட முஸ்லிம்கள் நிதி திரட்டி உதவியுள்ளனர்.

திருப்போரூர் கந்தசாமி கோயில் அமைந்திருக் கும் நிலம் முழுதும் ஆர்க்காடு நவாப் கொடையாக அளித்தது. கோயிலுக்குள் ஆர்க்காடு நவாப் அவருடைய மனைவி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது மந்திராலயம் என்று வழங்கப்படும் இடம் முன்பு மாஞ்சோலை என்று அழைக்கப் பட்டது. இந்த இடத்தை மகான் ராகவேந்திரருக்கு வழங்கியவர் அதோனி நவாப்.

இந்துக்களும் இது போல் முஸ்லிம்களுக்கு செய்திருக்கின்றனர்.

ஐயப்பனை தரிசிக்கச் செல்வோர் முதலில் கம்பத்தில் இருக்கும் வாவேர் பள்ளிவாசலுக்குச் சென்று முதல் மரியாதை செலுத்திய பிறகே சபரி மலைக்குச் செல்கின்றனர்.

மதுரை காஸி முஹல்லாவில் உள்ள பள்ளி வாசலைக் கட்டித் தந்தவர் சுந்தர பாண்டியன்.

இராணி மங்கம்மாள் பல பள்ளிவாசல்களைப் பராமரிக்க நன்கொடை அளித்துள்ளார். திருச்சி தப்லே ஆலம் பாதுஷா தர்காவுக்கு ஏழு கிராமங்களை 7,000 ஏக்கர் பரப்பளவு மானியமாக அளித்ததைக் குறிப்பாகச் சொல்லலாம்.

மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்குக் கூன்பாண்டியன் 14 ஆயிரம் தங்கக் காசுகளை அளித்துள்ளார்.

இவை போன்று தர்காக்களுக்கும், பள்ளி வாசல்களுக்கும் மானியம் கொடுத்த இந்து அரசர் பலர்.

வரலாற்றின் இருட் பக்கங்களைக் காட்டி மக்களிடம் துவேஷத்தை வளர்ப்பதை விட, இத்தகைய ஒளிப் பக்கங்களைக் காட்டி மத நல்லிணக்க உணர்வை வளர்ப்பது நாட்டுக்கு நல்லது.

- நிறைந்தது.

எண்ணங்களை பகிர்ந்துகொள்ள: Kaviko2003@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x