

நாடகத் துறையில் சாதனை புரிந்தவர். இளம் வயதிலேயே மறைந்தாலும், தன் முத்திரையை ஆழப்பதித்துவிட்டுச் சென்றவர் எஸ்.ஜி. கிட்டப்பா. அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த செங்கோட்டையில், 1906 ஆகஸ்ட் 25-ல் பிறந்தார். இயற்பெயர் ராமகிருஷ்ணன்.
அவரது அண்ணன்கள் நாடகக் கலைஞர்கள். அவர்கள் வழியாக கிட்டப்பாவிடமும் நாடகக் கலை மீதான ஆர்வம் வளர்ந்தது. 8-வயதிலேயே மேடை ஏறினார். புகழ் வளர்ந்தது. அண்ணன்களுடன் இணைந்து இலங்கை சென்று நாடகங்களில் பங்கேற்றார். அப்போது கே.பி.சுந்தராம்பாள், மேடை நாடகங்களில் பிரபலம். இருவரும் சேர்ந்து பங்கேற்ற நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். விடுதலைப் போராட்டத்திலும் முனைப்புடன் பங்கேற்றார். தொடர்ந்து நாடக உலகில் இயங்கிக்கொண்டிருந்த கிட்டப்பாவை, காலம் 1933 டிசம்பர் 2-ல் அழைத்துக்கொண்டது. அப்போது அவருக்கு வயது 28தான்!