Last Updated : 16 Dec, 2015 05:36 PM

 

Published : 16 Dec 2015 05:36 PM
Last Updated : 16 Dec 2015 05:36 PM

மழை முகங்கள்: நீண்ட தூரம் பயணித்து நிவாரணக் களம் வரும் மூவர் அணி

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

மாமல்லபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், திருவான்மியூரில் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங் நிறுவனம் ஒன்றில் சீனியர் பிராசசிங் எக்ஸிகியூட்டிவாக வேலை.

கார்த்திக்குடன் பணிபுரிபவர் ஹேமாமாலினி. மேனகா, ஹேமமாலினியின் நண்பி.இருவரும் சென்னை வாசிகள்.

''மழையன்னிக்கு ஆபீசுக்கு எப்படியோ போய் சேந்துட்டோம். ஆனா வெளியில வர முடியல. ஒர்க் முடிஞ்சி வீடுதிரும்ப முடியலை. ஆபீஸ் வெளியே தண்ணி சூழ்ந்ததால பைக் சேஃப் இல்லைன்னு சொன்னாங்க. அதனால யாரையும் அனுமதிக்கலை. எல்லாரும் பைக்கை விட்டுட்டுதான் வெளியே வந்தோம். மழை குறைஞ்சதும் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பினாங்க. எல்லாம் ராத்திரி போய் சேந்ததை கன்ஃபார்ம் செஞ்சிகிட்டாங்க.

மறுநாள் ஏரியா நண்பர்களை அழைச்சிகிட்டு போனேன். வேளச்சேரி டான்சி நகர் குடியிருப்புப் பகுதியில போய் சில உதவிகள் செஞ்சோம். தீயணைப்பு வீரர்களுடன் ஒரு நீள்வட்டமான ரப்பர் படகில போனோம். அப்போதைக்கு எங்களால ஒரு 75 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் கொடுக்க முடிஞ்சது.

அதே மாதிரி வேளச்சேரியில சில ஜெயின் குரூப்ஸ் உணவுப் பொட்டலங்களை வச்சிகிட்டு எப்படி கொடுக்கறதுன்னு முழிச்சிகிட்டிருந்தாங்க. அதை வாங்கிகிட்டோம். மறுபடியும் படகுல போய் குடியிருப்புப் பகுதிகள்ல போய் வீடுவீடாகப் போய் சேர்த்தோம்.

நாங்க இங்க வர்றத்துக்கு முக்கிய காரணம் நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம். தண்ணியில இருந்து ரெண்டு டெட்பாடி எடுத்ததா சொன்னாங்க. ஆஹா நிலைமை தலைக்குமீறி போயிடுச்சேன்னு ரொம்ப பதற்றமா ஆயிடுச்சி. தொடர்ந்து ஏதாவது செய்யணும்னு தோணிகிட்டே இருந்தது. சன்டேதான் பேப்பரைப் பாத்தோம். மன்டே விசாரிச்சிகிட்டு இங்கே வந்தோம்.

இங்கே வந்தப்புறம் பீல்டு போனோம். முடிச்சூர் தாண்டி நடுவீரப்பட்டுன்னு ஒரு ஊரு. வெளியூர் போற மாதிரி இருந்தது. தேங்கியிருந்த தண்ணீல எங்களோட வண்டி சேத்துல மாட்டிக்குமோன்னு பயமா இருந்தது. சில இடங்கள்ல பாதிக்கப்பட்ட மக்கள் வழியிலையே வண்டியை மடக்கிப் பிடிச்சதா கேள்விப்பட்டோம்.

அதனால இருட்டினப் பிறகுதான் போனோம்.முகாம்ல இருந்து 5.30க்குப் புறப்பட்டோம். இரவில் பொருள்களை விநியோகித்தோம். நடுவீரப்பட்டு, எருமையூர் ஆகிய இடங்கள்ல விநியோகிச்சோம். மக்கள் அமைதியா இருந்து வாங்கிகிட்டது எனக்குப் பிடிச்சிருந்தது.

அங்கிருந்து 11.45 மணிக்கு சேப்பாக்கம் முகாம் திரும்பினோம். அதுக்கப்புறம் மகாபலிபுரத்துல இருக்கற என்னோட வீட்டுக்கு ராத்திரி 1 மணிக்கு போய் சேர்ந்தேன். தினமும்கூட கிட்டத்தட்ட பத்தாயிடுது நம்ம மக்களுக்காக செய்யற இந்த வேலைக்காக நீண்டதூரம் பயணம்கூட சுகமாத்தான் இருக்கு.

இங்கே பலவிதமான வேலைகளை செய்யறோம். சீனிவாசன் சார் அப்ரூவ் செய்யும் லிஸ்ட், பாரதி சார் அப்ரூவ் செய்யும் லிஸ்ட், 250 பெட்ஷீட்ஸ், 250 மேட் கேன்டில் என லிஸ்ட் படி திங்ஸ் இன்சார்ஜ் பார்க்கற பிரியா மேம்கிட்ட கேட்டு லோடிங் செய்வோம். வர்ற பொருட்களை அன்லோடிங் செய்வோம்.

நாங்க வேலைசெய்யற ஆபீஸ்லையும் எங்களுக்கு லீவு சேங்ஷன் பண்ணிட்டாங்க. லீவுல வந்து இந்த முகாம்லே வந்து உதவிகள் செய்யறதை ரொம்ப மகிழ்ச்சியா ஃபீல் பண்றோம்.கிடைக்காத இடங்களுக்கு கொண்டுபோய் சேர்க்கற இங்க உள்ள சிஸ்டமேடிக் ரொம்ப பிடிச்சிருக்கு'' என்றுகூறிவிட்டு தனது தோழிகளைப் பார்த்தார்.

மாமல்லபுரம் கார்த்திக்குடன் வந்த இரு பெண்களும் ''மக்களுக்கு நாமும் உதவறமேன்னு ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு சார்'' என்று ஒருசேரக் கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x