Published : 02 Dec 2015 01:06 PM
Last Updated : 02 Dec 2015 01:06 PM

ட்விட்டரில் டிரெண்டான மத்திய கைலாஷ்

மழையால் அடையாறு அருகே, மத்திய கைலாஷ் குறுக்கு சந்திப்புச் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையால் கடந்த சில வாரங்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையின் ஏராளமான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. அத்தோடு சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை, சென்னை சர்தார் பட்டேல் சாலைக்கும், ராஜீவ் காந்தி சாலைக்கும் இடையில் உள்ள மத்தியக் கைலாஷ் குறுக்குச் சந்திப்புச் சாலையில், சாலை உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் ஆறு அடி ஆழத்துக்கு ஏற்பட்ட பள்ளத்தைக் கண்ட மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். சிலர் பள்ளத்தைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், பள்ளம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றிலும் மரக்கட்டைகளால் ஆன தடுப்புப் பலகைகளை வைத்து, போக்குவரத்தைச் சரிசெய்தனர்.

அதேநேரம் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் வெள்ளமெனப் பரவிய புகைப்படம், நெட்டிசன்களால் பரவலாகப் பகிரப்பட்டது. மத்தியக் கைலாஷ் வழியாகப் பயணிக்க வேண்டாம் என்றும், மாற்று வழிகள் வழியாகச் செல்ல அறிவுறுத்தியும், பள்ளத்தை விரைந்து சரிசெய்யக் கோரியும் அவர்கள் தொடர்ந்து நிலைத் தகவல்களைப் பகிர்ந்த வண்ணம் இருந்தனர். இதனால் அப்பகுதி, இந்திய அளவில் >Madhya Kailash என்ற பெயரில் டிரெண்டானது. அவற்றில் சில சில ட்வீட்களின் தொகுப்பு.

வசந்த்: மத்திய கைலாஷ் பள்ளம், மத்தியக் கைலாஷ் குன்றாகிவிடும் போல இருக்கிறது #மழை

சாய்கிருஷ்ணா: இது ஒரு பள்ளம். இல்லை இல்லை இது ஒரு குழி. அதுவும் இல்லை இது மத்திய கைலாஷ்

கருணாகரன்: ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்? இது மானசரோவரின் நுழைவுவாயில்.

சுதர்சன் வரதன்: பிரேக்கிங் (வெடிப்பு) செய்தி; உள்ளபடியே!

ராமன்: மத்திய கைலாஷ், இப்போது சென்னையின் புதிய செல்ஃபி இடமாகி உள்ளது.

பிரதீப் ரகுநாதன்: நிச்சயம் இது போன்ற நிலையில் உள்ள சாலைகள் சீக்கிரத்தில் சரி செய்யப்பட வேண்டும்.

ஷாந்தா சக்குபாய்: கைலாசத்துக்குச் செல்ல நேரடிப் பாதை!

அஸ்வின் குமார்: பூமாதேவி வாயப் பொளந்துட்டா!

மஞ்சு கே குரு: அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது. நாம் சாலை வரி கட்டுகிறோம்தானே?!

கெளசிக் ஜெயன்: இதென்ன மோசமான சாலையா அல்லது புதைகுழியா?

புலி அரசன்: தமிழகத்தில் புதிய அம்மா திட்டம், இப்போது முதல் முறையாக "அம்மா சுரங்கப்பாதை".

வினோத்: ஊழல் மலிந்த மற்றும் திறனற்ற அதிகாரிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இது.

தன்யா ராஜேந்திரன்: சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அதிகாரிகளே, அந்தப் பள்ளத்தில் சென்று மறைந்து கொள்ளுங்களேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x