Published : 05 Nov 2015 10:18 AM
Last Updated : 05 Nov 2015 10:18 AM

பனாரசி தாஸ் குப்தா 10

சமூக சீர்திருத்தவாதி

சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக சீர்திருத்தவாதியுமான பனாரசி தாஸ் குப்தா (Banarsi Das Gupta) பிறந்த தினம் இன்று (நவம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஹரியாணாவின் (தற்போதைய பஞ்சாப்) ஜீந்த் மாவட்டத்தில் பிவானி என்ற இடத்தில் பிறந்தார் (1917). பிலானியில் பிட்லா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் மகாத்மா காந்தி, பண்டிட் ஜவகர்லால் நேரு ஆகியோரின் உத்வேகமூட்டும் உரையை கேட்டார். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சுதந்திரப் போராட்டக் களத்தில் குதித்தார்.

l ஜீந்த் சமஸ்தானத்தின் அடக்குமுறையை எதிர்த்து பிரஜா மண்டலி என்ற போராட்டக் குழுவைத் தொடங்கினார். இவரது நடவடிக்கைகளைக் கண்ட அரசு இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட இவர் பல முறை சிறை சென்றுள்ளார்.

l வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டதால் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஜீந்த் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய இவர், சர்தார் பட்டேலுடன் இணைந்து அதை சாதித்தார்.

l வினோபா பாவேயின் பூதான இயக்கத்தின்போது இவரும் பாதயாத்திரை சென்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை தானம் பெற்று நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகித்தார். வரதட்சணை, தீண்டாமை, குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சமூக சீர்கேடுகளைக் கடுமையாக எதிர்த்துப் போராடினார். விதவை மறுமணத்துக்கு ஆதரவாக நின்றார்.

l மஹாராஜா அகர்சன் மெடிகல் எஜுகேஷன் & சயின்டிஃபிக் ரிசர்ச் சொசைடி, ஹரியாணா டிரஸ்டி ஆஃப் வாய்ஸ் மஹாவித்யாலயா உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். பிவானி சட்டமன்றத் தொகுதியில் 1968-ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றிபெற்றார்.

l 1972-ல் மீண்டும் வென்று சட்டமன்றத் தலைவரானார். மின்சாரம், பாசனம், விவசாயம், சுகாதாரம் ஆகிய பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார். 1975-ல் ஹரியாணா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஆட்சி காலத்தில் ஹரியாணா மாநிலம் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது. 1996-ல் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

l மக்களின் நலத் திட்டங்களுக்காக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்காக நாடாளுமன்றத்தில் பாராட்டப்பட்டார். யோகா மற்றும் இயற்கை மீது இவர் கொண்டிருந்த நேசத்தால், பிவானியில் இயற்கை மருத்துவமனை நிறுவப்பட்டது.

l பல இதழ்களில் தனது கட்டுரைகள் மூலம் அரசியல் மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார். பல ஆண்டுகள் அப்னா தேஷ் மற்றும் ஹரியாணா கேஸரி வார இதழ்களின் ஆசிரியராகப் பணி புரிந்தார். ‘பஞ்சாயதி ராஜ் க்யோ அவுர் கைசே’ என்ற இவரது நூல் மிகவும் பிரசித்தம்.

l இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த இவரது தலைமையில் ஹரியாணா மாநில இலக்கிய சமிதி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டது. தொழிலாளர் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதுணையாக செயல்பட்டார்.

l பாபுஜி என்று அன்போடு அழைக்கப்பட்டார். நாட்டு முன்னேற்றத் தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டே செயல் பட்டவர். சமூக மேம்பாடு, கல்வி, இலக்கியம், பத்திரிகைத் துறை ஆகிய பல களங்களில் முனைப்புடன் பாடுபட்ட பனாரசிதாஸ் குப்தா, 2007-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி, 89-ம் வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x