Published : 17 Nov 2015 10:28 AM
Last Updated : 17 Nov 2015 10:28 AM

சி.இலக்குவனார் 10

தமிழ் அறிஞர், இலக்கிய ஆராய்ச்சியாளர்

சிறந்த தமிழ் அறிஞருரும், படைப்பாளியுமான பேராசிரியர் சி.இலக்குவனார் (S.Ilakkuvanar) பிறந்த தினம் இன்று (நவம்பர் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வாய்மேடு கிராமத்தில் (1909) பிறந்தார். தந்தை குறுநிலக்கிழார். மளிகைக் கடையும் வைத்திருந்தார். 4-வது வயதில் தந்தையை இழந்தவர், உள்ளூர் திண்ணைப் பள்ளியிலும், பிறகு அரசு தொடக்கப் பள்ளியிலும் படித்தார்.

l படிப்பைத் தொடர முடியாததால் அண்ணனுக்கு உதவியாக வயல் வேலை செய்தார். மாடு மேய்த் தார். தாயின் விருப்பத்தால், ராஜாமடம் என்ற இடத்தில் இருந்த நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 8-ம் வகுப்பு படித்தபோது லட்சுமணன் என்ற இவரது பெயரை ‘இலக்குவன்’ என மாற்றினார் தமிழ் ஆசிரியர். அதுமுதல் தமிழ் மீதான ஆர்வம் அதிகமானது.

l தமிழில் பிறமொழிக் கலப்பைத் தவிர்த்தார். ஒரத்தநாட்டில் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றார். 1936-ல் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, அங்கேயே விரிவுரை யாளராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று பிஓஎல் பட்டம் பெற்றார். தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து எம்ஓஎல் பட்டமும் பெற்றார்.

l குலசேகரன்பட்டினத்தில் தொடங்கப்பட்ட தமிழ் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பின்னர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் தமிழ் துறைத் தலைவராகவும் பணிபுரிந் தார். அரசியல் காரணங்களால் அக்கல்லூரியில் இருந்து நீக்கப் பட்டார்.

l தமிழ் வளர்ச்சிக்காக 1962-ல் தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றியபோது 1963-ல் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தான் பணியாற்றிய இடங்களில் தமிழ் மன்றங்களை நிறுவினார்.

l இலக்கியம், திராவிடக் கூட்டரசு, குறள்நெறி, சங்க இலக்கியம் என்பது உள்ளிட்ட பல்வேறு இதழ்களை நடத்தினார். ஆங்கில இதழ்களையும் வெளியிட்டார். சங்கப் பாடல்களை சிறுகதை வடிவிலும், ஓரங்க நாடகங்களாகவும் அறிமுகம் செய்தார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

l ‘மாணவர் ஆற்றுப்படை’, ‘துரத்தப்பட்டேன்’, ‘தமிழிசைப் பாடல்கள்’, ‘என் வாழ்க்கைப் போர்’, ‘பழந்தமிழ்’, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’ போன்ற தமிழ் நூல்கள், ‘தமிழ் லாங்வேஜ்’, ‘மீனிங் ஆஃப் தமிழ் கிராமர்’ என்பது போன்ற ஆங்கில நூல்களை எழுதியுள்ளார்.

l தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர். இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.

l சிங்கப்பூர், மலேசியாவில் 1971-ல் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தமிழகம் முழுவதும் சொற்பொழிவாற்றி, தமிழை வளர்த்தார். முத்தமிழ் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல் என்பது போன்ற ஏராளமான பட்டங்கள் இவரைத் தேடி வந்தன.

l யாருக்கும் அடிபணியாத தன்மான உணர்வு, அஞ்சா நெஞ்சம், தமிழ் உணர்வு மிக்கவர். வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட இலக்குவனார் 64-வது வயதில் (1973) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x