Published : 21 Nov 2015 10:44 AM
Last Updated : 21 Nov 2015 10:44 AM

ஐசக் பாஷவிஸ் சிங்கர் 10

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ‘இட்டிஷ்’ மொழி எழுத்தாளர் ஐசக் பாஷவிஸ் சிங்கர் (Isaac Bashevis Singer) பிறந்த தினம் இன்று (நவம்பர் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l போலந்து நாட்டின் லியான்சின் கிராமத்தில் யூத குடும்பத்தில் (1901) பிறந்தார். இவரது தந்தை நீதிபதி, தலைமை மத போதகராக இருந்தவர். 1907-ல் குடும்பம் ராட்ஸிமின் நகருக்கு இடம்பெயர்ந்தது. அது ஹீப்ரூ ஜெர்மானிய கலப்பு மொழியான ‘இட்டிஷ்’ மொழி பேசும் ஏழை யூதர்கள் நிரம்பிய பகுதி.

l சிறு வயது முதலே புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். வார்சாவில் அண்ணன் ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையில் சேர்ந்தார். அண்டை நாடான ஜெர்மனி எல்லையில் நாஜிக்களின் ஆதிக்கமும், அவர்களது யூத எதிர்ப்பும் அதிகரித்ததால் 1935-ல் போலந்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறி, அங்கேயே குடியுரிமையும் பெற்றார்.

l நியூயார்க்கில் ‘தி பார்வர்டு’ என்ற இட்டிஷ் மொழி பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தார். தனிமை உட்பட பல்வேறு காரணங்களால் மனச் சோர்வுக்கு ஆளானார். அப்போதுதான் ‘லாஸ்ட் இன் அமெரிக்கா’ என்ற நாவலுக்கான கரு உதயமானது.

l திருமணத்துக்கு பிறகு, முழுமூச்சாக எழுத்துப் பணியில் இறங்கினார். இவரது முதல் கதை ‘லிட்டராஷே பிளட்டர்’ என்ற பத்திரிகை நடத்திய இலக்கியப் போட்டியில் பரிசு பெற்றது. முதல் நாவலான ‘சாட்டான் கோரே’, குளோபஸ் இலக்கிய இதழில் தொடராக வெளிவந்தது.

l ‘தி ஸ்லேவ்’ நாவல் 1962-ல் வெளிவந்தது. மறைந்த அண்ணனின் நினைவாக எழுதிய ‘தி ஃபேமிலி மாஸ்கட்’ என்ற நாவல் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. தனித்துவமான எழுதும் பாணி, காட்சிகளை விவரிக்கும் எதார்த்த நடை, கதாபாத்திர சித்தரிப்பு ஆகியவற்றுக்காக பெரிதும் போற்றப்பட்டார்.

l குழந்தைகளுக்காக இவர் எழுதிய நூல்கள் மிகவும் பிரசித்தம். 18 நாவல்கள், குழந்தைகளுக்கான 14 புத்தகங்கள், ஏராளமான நினைவுச் சித்திரங்கள், கட்டுரைகள், சுயசரிதைகள் எழுதியுள்ளார். ஆனாலும் சிறந்த சிறுகதை எழுத்தாளராகவே அதிகம் அறியப்பட்டார்.

l முதல் ஆங்கில சிறுகதைத் தொகுப்பான ‘கிம்பல் தி ஃபூல்’ 1957-ல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது கதைகள் ப்ளேபாய், எஸ்கொயர் போன்ற இதழ்களில் அடிக்கடி வெளிவந்தன.

l இட்டிஷ் இலக்கிய இயக்கத்தின் முக்கிய நபராகத் திகழ்ந்தார். அந்த மொழியில்தான் நூல்களை எழுதியும், வெளியிட்டும் வந்தார். 1978-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். அமெரிக்க தேசிய புத்தக விருதையும் வென்றார்.

l சைவ உணவுப் பழக்கம் கொண்டவர். ‘உங்கள் உடல்நலம் கருதி சைவம் சாப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டதற்கு ‘கோழிகளின் நலம் கருதி’ என்று நகைச்சுவையாக கூறினாராம். ‘எனிமீஸ்’, ‘எ லவ் ஸ்டோரி’ ஆகிய கதைகள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட பிறகு உலகம் முழுவதும் பிரபலமானார்.

l சொந்த வாழ்வில் துயரங்கள், விரக்தி, வறுமையோடு போராடினாலும் படைப்புத் திறனால் உலகப்புகழ் பெற்று வெற்றிகரமான எழுத்தாளராக உயர்ந்த ஐசக் பாஷவிஸ் சிங்கர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு 1991-ம் ஆண்டு மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x