Published : 02 Nov 2015 12:24 PM
Last Updated : 02 Nov 2015 12:24 PM

மகேந்திரலால் சர்க்கார் 10

சிறந்த மருத்துவர், சமூக ஆர்வலர்

சிறந்த மருத்துவரும் சமூக ஆர்வலருமான மகேந்திரலால் சர்க்கார் (Mahendralal Sarkar) பிறந்த தினம் இன்று (நவம்பர் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கல்கத்தாவில் விவசாயக் குடும்பத்தில் (1833) பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர், தாய்மாமன் வீட்டில் வளர்ந்தார். கல்வி உதவித்தொகைகள் பெற்று படித்தார். அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார்.

* கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயின்றார். சக மாணவர்கள் மத்தியில் அறிவியல் உரை நிகழ்த்தும் அளவுக்கு சிறந்த மாணவராக விளங்கினார். பலரும் மதிக்கும் டாக்டராக உயர்ந்தார். ஆங்கில மருத்துவம் மீது ஆழமான பிடிப்பு கொண்டிருந்தார்.

* ஹோமியோபதி மருத்துவம் பற்றி வில்லியம் மார்கன் எழுதிய புத்தகத்துக்கு விமர்சனம் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஹோமியோபதிக்கு எதிராக தன் கருத்துகளை பதிவு செய்வதற்காகத்தான் முதலில் அந்த நூலைப் படித்தார். ஆனால், படித்து முடித்த பிறகு ஹோமியோபதியின் சிறப்பை உணர்ந்தார். உரிய பயிற்சி பெற்று ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார்.

* இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது என்பதை உணர்ந்தவர், ‘உண்மையைத் தேடுவதே அறிவியல்’ என்ற மனப்பான்மையை சமூகத்தில் விதைக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

* மருத்துவ உலகம் தனது கருத்துக்கு எதிராக இருப்பதால், எந்த மருத்துவ இதழும் தனது கட்டுரைகளை வெளியிடாது என்பதை உணர்ந்துகொண்டார். தனது கருத்துக்களைப் பதிவு செய்வதற்காக ‘கல்கத்தா ஜர்னல் ஆஃப் மெடிசின்’ இதழைத் தொடங்கினார்.

* தேசிய அறிவியல் நிறுவனம் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி 1869-ம் ஆண்டு ஆகஸ்ட் இதழில் கட்டுரை எழுதினார். ஆங்கிலேயரின் தலையீடு இன்றி இந்தியர்கள் சுதந்திரமாக சிந்தித்து, முடிவெடுக்கும் விதமாக அந்த நிறுவனம் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளியிட்டார்.

* பக்கிம் சந்திர சட்டர்ஜி, ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோர் இவரது கருத்துகளை ஆதரித்தனர். 7 ஆண்டு தீவிர முயற்சிக்குப் பிறகு, அவரது கனவு நனவானது. ‘இந்தியன் அசோசியேஷன் ஃபார் தி கல்டிவேஷன் ஆஃப் சயின்ஸ்’ என்ற அறிவியல் அமைப்பு 1876 ஜூலை 29-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்பாகவே இத்தகைய அறிவியல் நிறுவனம் உருவானதற்கு, இவரது இடையறாத முனைப்புகளே காரணம்.

* நாட்டில் அதன் பிறகு தொடங்கப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் முன்னோடியாக அமைந்தது. சர் சி.வி.ராமன் உள்ளிட்ட ஏராளமான அறிவியல் அறிஞர்கள் முக்கிய ஆராய்ச்சிகள் நடத்தி பல அறிவியல் சாதனைகளை நிகழ்த்துவதற்கு இந்த அமைப்பு ஒரு களமாகவும் அமைந்தது.

* சிறந்த சமூக ஆர்வலராகவும் செயல்பட்டார். பெண் கல்வியை ஆதரித்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஃபெலோவாகவும் கல்கத்தாவின் கவுரவ மாஜிஸ்திரேட் மற்றும் ஷெரீஃபாகவும் பணிபுரிந்துள்ளார். ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* தேசிய அறிவியல் நிறுவனங்களின் பிதாமகர் என்று போற்றப்படுபவரும் இந்தியர்களின் சுயமுயற்சியில் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தி வளர்த்தவருமான மகேந்திரலால் சர்க்கார் 71-வது வயதில் (1904) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x