Last Updated : 19 Feb, 2021 03:17 PM

 

Published : 19 Feb 2021 03:17 PM
Last Updated : 19 Feb 2021 03:17 PM

யூடியூப் பகிர்வு: பயணங்களின் காதலன் ஆயுஷ் டிங்கரின் பாரம்பரிய இந்திய வில்வித்தை

தொழில்நுட்பமும் வித்தியாசமான ஆசைகளும் கைகுலுக்கும் இடங்களில் எதற்கும் உதவாத விஷயங்கள் கூட முக்கியமானவையாக மாறிவருகின்றன. அவ்வகையிலேயே நமது வாட்ஸ் அப்களிலேயே கூட சாப்பிடுவது, தூங்குவது போன்ற காட்சிளையெல்லாம் கூட யார்யாரோ பதிவேற்றும் எண்ணிலடங்கா வீடியோக்கள் நம் கைக்கு வந்து சேர்கின்றன.

நமது வாழ்க்கையை நாம் சரியாக வாழாதபோது அடுத்தவர்கள் வாழ்க்கையை ரசிக்கும் ஒருவித மனோபாவம் இது. இதையெல்லாமுமா பதிவேற்றுவார்கள் என்றும் பல நேரங்களில் நாம் சலித்துக்கொள்வது உண்டு. எனினும் பழக்கத்திற்கு அடிமையாகும் சுபாவம் கொண்ட மனிதப் பிறவிகளான நம்மில் பலருக்கும் சில நேரங்களில் அத்தகைய வீடியோக்களை மெனக்கெட்டு பார்க்கும் பழக்கமும் உருவாகி வருகிறது.

எனினும் இதற்கு இடையில்தான் மற்றவர்களுக்கு புதியதாக ஏதாவது சொல்ல வேண்டுமென முயற்சிக்கும் சில சுயாதீனப் படைப்புகளையும் காண முடிகிறது. அபூர்வமாக சில நேரங்களில் நமது கைகளுக்கும் அவை வந்து சேர்கின்றன. அவ்வகையிலான படைப்புகளை உருவாக்கித் தருபவர்களில் ஒருவர்தான் ஆயூஷ் டிங்கர் என்பவர். அவரது ஏதோ ஒரு வீடியோவைப் பார்க்கப் போக அவரது அனைத்து விவரங்களையும் தேடிச் செல்ல வேண்டியிருந்தது. ஆயூஷ் டிங்கர் உலகம் முழுவதும் பரவியுள்ள பயணங்களைப் பதிவிடும் vlog bloggers வகையைச் சேர்ந்தவர்.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற vlog bloggers நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள், ஆய்வுப்பயணம் மற்றும் சாகசப் பயணங்களுக்காக உலகின் எந்த மூலைக்கும் செல்பவர்கள். உலகின் புதிய இடங்களை பாரம்பரிய நிகழ்வுகளை தேடிச் சென்று காண விருப்பம் உள்ளவர்களுக்கு இவர்களை பின்பற்றிச் செல்லவும் பங்கேற்கவும் இத்தகைய வலைப்பதிவுகள் பயன்படுகின்றன. மேலும் இந்தப் பயணக் காதலர்களின் யூடியூப் பதிவுகள் மில்லியன் கணக்கில் பார்வையிடப்படுவதால் அவர்களுக்கு பணமும் புகழும் கிடைத்து வருகிறது.

பாரம்பரிய விழாக்களைப் பற்றி எடுத்துக்கூறுதல், அழகிய இடங்களை மதிப்பாய்வு செய்தல் போன்றவற்றை வீடியோ வலைப்பதிவு செய்தலை vlog blog அதாவது வீடியோ வலைப்பதிவு என்கிறார்கள். 2012ல் பொறியியல் படிப்பை நிறைவு செய்த ஆயூஷ் டிங்கர் 2015லிருந்து இத்துறையில் ஆர்வத்தோடு இயங்கி வருகிறார்.

தற்போது டெல்லியில் வசித்துவரும் ஆயுஷ் டிங்கர் என்ற திரைப்பட தயாரிப்பாளர் எதேரியல் Ethereal என்ற காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன்மூலம் யதார்த்தக் காட்சிகள், கலாச்சாரம், சமூகம், வரலாறு, பயணம், விஞ்ஞானம் போன்ற உள்ளடக்கங்களை ஒரு புதிய தனித்துவமான பாணியில் வழங்கிவருகிறார்..

Ethereal நிறுவனம் சார்பாக, மேகாலயாவின் மர்மமான நீர்வீழ்ச்சி... 1962ல் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்த திபெத் ஏரிப் பாதை, பூட்டானில் மலை மறைவில் மறைந்திருக்கும் சொர்க்கமான ஃபோப்ஜிகா பள்ளத்தாக்கின் அழகுகள், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் காலத்திலிருந்து நடைபெறும் பாரம்பரிய இன்ரூஸ் கிறிஸ்து விழா, மேற்கு வங்கத்தில் நோய்த்தொற்றின்போது கொண்டாடப்பட்ட துர்கா பூஜை..... போன்றவை அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில. இதுவரை அவருக்கு 5 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

கடந்த வாரம் கேரளா பக்கம் சென்ற ஆயுஷ் டிங்கர் அங்கிருந்து பழங்குடியினரின் வில்வித்தை தொடர்பான ஒரு அற்புதமான ஆவணப்படத்தைத் தந்துள்ளார்.

கேரளாவின் வயநாடு மலைகளில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் வேட்டையாடி வாழ்ந்த பழங்குடியின சமூகம் ஒன்றின் பாரம்பரிய கலையைப் பற்றி இதில் பேசியிருக்கிறார். அதில் வில்வித்தையில் தேர்ந்த கோவிந்தன் என்பவர் தனது வில்வித்தையின் பயிற்சி குறித்தும் வேட்டை குறித்தும் விவரிக்கிறார். ஒரு பாரம்பரிய கலை அழிந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தைத் தவிர உண்மையான வேட்டைக்காக தற்போது அக்கலையை பின்பற்றவிலலை என்கிறார் கோவிந்தன்.

மேலும் தனது முன்னோர்கள் பறவைகளை விலங்குகளை வேட்டையாடி கொன்றதற்கு பறவைகளுக்கும் விலங்குகளுக்கு உணவு அளித்து பிராயச்சித்தம் தேடிக்கொள்வதாகவும் அவர் தெரிவிக்கிறார். ஆனால் இன்றும்கூட நெடிதுயர்ந்த மரங்களில் உள்ள பழங்களை குறிவைத்து வீழ்த்த இந்த வில்வித்தை பயன்படுத்தப்படுகிறது.

வில்வித்தையின் உச்சபட்ச கலையின் ரகசியம் என்பது அம்பை எய்யாமல் இருப்பதுதான் என்பார்கள். அவ்வகையில், குறைந்தபட்சம் பறவைகளை விலங்குகளை கொல்லக்கூட தான் தயாரில்லை என்றுகூறும் கோவிந்தனின் கூற்று நமக்கு வியப்பளிக்கிறது.

எட்டரை நிமிட The Ancient Archer of India ஆவணப்படத்தைக் காண....

.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x