முகம் காட்டத் தயாராகும் லண்டன் தமிழ் இசை மாந்தர்கள்

முகம் காட்டத் தயாராகும் லண்டன் தமிழ் இசை மாந்தர்கள்
Updated on
1 min read

இன்றைய தினம் இசையில் அனைவருக்கும் பரிச்சயமானது ராப் இசை. 21ஆம் நாற்றாண்டின் புதுமை இசைப் பாணிகளில் இதுவும் ஒன்று. மேற்கத்திய நாடுகளில் பிரபலமடைந்திருந்த ராப் இசை, இன்றைக்கு மொழிகள் கடந்தும் ஒலித்துவருகிறது. அதிலும் கண்டங்கள் கடந்து ஒலிக்கும் ராப் இசைக்குழு 'ஐசி9'.

2019ஆம் ஆண்டு லண்டனில் பேங்க் ரோல்ஸ் யங், குவாலோ, எஸ்கோஸ்ட் ஆகிய மூன்று சகோதரர்களால் தொடங்கப்பட்டது 'ஐசி9' குழு. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் தொடங்கப்பட்ட ராப் இசைக்குழு என்பதே இதன் தனித்தன்மை. காரணம் லண்டனின் பிரபலமான முன்னனி ராப் இசைக் கலைஞர்களுடன் பல பாடல்களில் இணைந்து லட்சக்கணக்கான பார்வையாளர்களை இந்தக் குழு கவர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் யூடியூபில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை இந்தக் குழு ஈர்த்துள்ளது.

இவர்களது குரல்களைக் கேட்ட ரசிகர்கள் யாரும் இவர்களுடைய முகங்களை இதுவரை பார்த்தது இல்லை. அனைத்துப் பாடல்களிலுமே முகமூடி அணிந்தே இவர்கள் தோன்றி வருகின்றனர். இதில் தனி உத்தி எதுவும் இல்லை என்று கூறும் 'ஐசி9' குழு, ரசிகர்கள் தங்களை அங்கீகரிப்பார்களா என்கிற தயக்கம் முதலில் இருந்ததே முகமூடி அணிந்ததற்குக் காரணம் என்கிறார்கள்.

ஆனால், இக்குழுவுக்கு மக்கள் ஆதரவையும் பலத்த வரவேற்பையும் அளித்துள்ளனர். அதனால் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் பாடலில் இருந்து ரசிகர்களுக்கு தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தி பாடல்களைப் பதிவிடப் போவதாக இந்தக் குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து உலகத் தரத்தில் பாடல்கள் அளிப்பதும் தம்மைப் போல் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் கலைஞர்களுக்கு சர்வதேச தளத்தில் கவனம் பெற்றுத்தருவதும் தங்களுடைய எதிர்கால லட்சியம் என்கிறது 'ஐசி9' இசைக் குழு. வாருங்கள், அசத்துங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in