Published : 17 Nov 2020 08:32 PM
Last Updated : 17 Nov 2020 08:32 PM

குறி சொல்லி ராணியை காப்பாற்றிய கோடாங்கிக்கு சிலை வைத்து சிறப்பு செய்த சேதுபதி மன்னர்: ஆவணப்படுத்திய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்

இடிந்த நிலையில் எருமைப்பட்டியில் உள்ள கோவிந்தன் கோயில்

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிசொல்லி ராணியைக் காப்பாற்றிய கோடாங்கிக்கு சேதுபதி மன்னர் சிலை வைத்தது தொடர்பான செய்தியை தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஆவணப்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சி அருகில் தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ள எருமைப்பட்டியைச் சேர்ந்த ஒரு கோடாங்கி சொன்ன குறியால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர், அவருக்கு சிலை அமைத்து சிறப்பு செய்துள்ளார்.

பேச்சில்லா கிராமம்

மக்கள் வசிக்காத, ஆனால் நிலம் மட்டுமே இருக்கிற கிராமங்கள் பேச்சில்லா கிராமம் என்று அழைக்கப்படுகிறது. வறட்சி வெள்ளம், கொள்ளை நோயால் மக்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்திருக்கலாம். மக்கள் வசிக்காத நிலையில் நிலப்பரப்பு இருப்பதால் வருவாய்த்துறை ஆவணங்களில் மட்டுமே இக்கிராமங்கள் வாழ்கின்றன.

அத்தகைய கிராமங்களில் ஒன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சி அருகில் தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ள எருமைப்பட்டி. இந்த கிராமத்தில் வாழ்ந்த கோடங்கி சொன்ன குறியால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர், அவருக்கு சிலை அமைத்து சிறப்பு செய்துள்ளார். இந்த வரலாற்றை தற்போது ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஆவணப்படுத்தி உள்ளது.

எருமைப்பட்டியின் அழியாத வரலாறு பற்றி அந்த கிராமத்திற்கு அருகிலுள்ள கருங்கலக்குறிச்சியைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் உ.சண்முகநாதன் கூறியதாவது,

மதுரை அழகர் கோவிலிலிருந்து ஒரு தம்பட்டம் மாட்டை (கோவில் மாடு) ஓட்டிக்கொண்டு ஊர் ஊராகப் பயணம் செய்து வந்த ஒரு முதியவர், ஒவ்வொரு வீட்டின் முன்பும் அழகர்மலை கோவிந்தனின் பெருமையைச் சொல்லி அருள்வாக்கும் கூறி வந்தார். பல ஊர்கள் பயணம் செய்த அவர் ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள எருமைப்பட்டிக்கு வந்து அருள்வாக்கு கூறினார்.

ஒரு பிரம்பை தரையில் ஊன்றி அதில் மாட்டின் கயிற்றை கட்டியிருந்தார். இரவு அவ்வூரில் தங்கியிருந்தவர் காலையில் வேறு ஊருக்குப் புறப்படும் நோக்கில், தரையில் ஊன்றிய பிரம்பை பிடுங்க முயல, முடியவில்லை. இறைவனை வேண்டி அருள் வந்து ஆடினார். இவ்வூர் மக்களைக் காக்க கோவிந்தன் வந்து இருப்பதாகக் கூறிய அவர் திடீரென காணாமல் போனார். இதை நேரில் பார்த்த அவ்வூர் மாயழகன் கோவிந்தனின் அருளால் குறி சொல்லும் கோடாங்கியானார்.

கோவிந்தன் கோயில் வளாகத்தில் உள்ள கோடாங்கி மாயழகனின் கற்சிற்பம்

எருமைப்பட்டியில் உள்ள கோவிந்தன் கோயிலில் உள்ள 300 ஆண்டுகள் பழைமையான மரத்திலான கோவிந்தன் சிற்பம்

ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சேதுநாட்டின் கோடாங்கிகள் பலரை அழைத்துப் பரிகாரம் கேட்டபோது, யாருக்கும் சரியாக கணிக்கத் தெரியவில்லை. அரண்மனை மருத்துவனின் கோரிக்கை படி எருமைப்பட்டியைச் சேர்ந்த கோடாங்கி மாயழகனை மன்னர் ராமநாதபுரம் அரண்மனைக்கு அழைத்திருந்தார்.

அங்கு தரையில் அமர்ந்து இரண்டு, மூன்று முறை உருட்டிய சோவிகள் அவருக்கு சேதி சொன்னது. ராணிக்கு வந்த நோயைச் சொல்லி, நோய்க்கு மருந்தும் சொல்லி, குறியும் சொல்லி முடித்து திருநீறை அள்ளிக் கொடுத்து ராணிக்குப் பூசச் சொன்னார் கோடாங்கி.

கோடாங்கியின் மருத்துவத்தினால் ராணி குணமடைந்ததினால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர் உடனே எருமைப்பட்டிக்கு வந்து ஒரு சிறிய கோயிலை எழுப்பி, மரத்தாலான கோவிந்தன் சிலையை அமைத்து வழிபட்டார். கோடாங்கி மாயழகன் காலத்துக்குப் பின் அவருக்கு அங்கு கருங்கல்லால் சிலை வைத்து தன் நன்றிக்கடனை செலுத்தினார் சேதுபதி மன்னர், இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ’நம்ம ஊரு வரலாறு’ என்ற தலைப்பில் வாய்மொழித் தகவல்கள், களஆய்வு, நேர்காணல், ஊர் பெயராய்வு, கல்வெட்டு, அரசு ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வரலாற்றினை தொகுத்து ஆவணப்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில் எருமைப்பட்டியில் உள் கோவிந்தன் கோவிலை ஆய்வு செய்தோம்.

தேக்கு மரத்தாலான கோவிந்தன் சிற்பம் 2 அடி உயரமும், ¾ அடி அகலமும் உள்ளது. காலைத் தூக்கிய நிலையில் உள்ள குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் கோவிந்தன் சிற்பம் இருபுறமும் நம்மைப் பார்ப்பது போல செதுக்கப்பட்டுள்ளது.

கோடாங்கி மாயழகனின் கற்சிற்பம் கொண்டையிட்ட தலையுடனும் கும்பிட்ட கைகளுடனும் காணப்படுகிறது.இவ்வரலாற்றுக்குச் சான்றாக உள்ள கோயிலும், கோவிந்தன், கோடாங்கி ஆகியோர் சிற்பங்களும் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.

இதேபோன்ற கோவிந்தன் கோயில் திருப்புல்லாணி அருகில் பள்ளபச்சேரியில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இடிந்துவிட்ட கோயிலும், அழியாத மரச்சிற்பமும், கைகூப்பி நிற்கும் கோடாங்கி மாயழகனின் கற்சிற்பமும், சேதுபதி மன்னர் வரலாற்று நிகழ்வையும் நினைவு படுத்தும் ஆதாரமாக இன்றும் விளங்குகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x