கோபபந்து தாஸ் 10

கோபபந்து தாஸ் 10
Updated on
2 min read

தேசபக்தர், சமூக சேவகர், படைப்பாளி, பத்திரிகையாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டவரும், ‘ஒடிசாவின் மாணிக்கம்’ (உத்கல மணி) என்று போற்றப்படுபவருமான கோபபந்து தாஸ் (Gopabandhu Das) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஒடிசா மாநிலம் பூரி அருகே உள்ள சுவாண்டோ கிராமத்தில் (1877) பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கினார். 12 வயதிலேயே திரு மணம் செய்துவைக்கப்பட்டது. அதன் பிறகும், படிப்பைத் தொடர்ந்தார்.

l அப்பகுதியில் காலரா நோய் பரவியபோது அரசின் நிவாரணப் பணிகள் மந்த கதியில் நடப்பதைப் பார்த்து வேதனை அடைந்தார். ‘பூரி சேவா சமிதி’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி சேவையாற்றினார். இது பின்னாளில் காலரா நோய்க்கான சிறப்பு மருத்துவமனையாக மாறியது.

l பட்டப்படிப்பு முடித்த பிறகு, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார். வழக்கறிஞர் தொழில் செய்தபடியே, அரசியலிலும் ஈடுபட்டார். சுதேசி இயக்கத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டார். 1917-ல் பிஹார் மற்றும் ஒடிசா சட்டசபை கவுன்சில் உறுப்பினரானார். காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழை யாமை இயக்கத்தில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார்.

l ‘நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த சாதனமாக அமையும். தேசத்தின் இளைஞர்கள் சுய சார்புடன், சுய சிந்தனை மிக்கவர் களாக, தியாகம் செய்ய முன்வருபவர்களாக, தேசத்தின் பிரச்சி னைகள் குறித்த விழிப்புணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்’ என்பார். இளைஞர்களிடம் தேசியத்தையும், தேசபக்தியையும் வளர்த்தார்.

l மக்களின் அறிவை வளர்க்க ‘சமாஜ்’ என்ற நாளிதழைத் தொடங்கினார். ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை கடமையாகக் கருதி செயலாற்றினார். சமூக வளர்ச்சியைத் தடுக்கும் ஜாதி வேற்றுமை, தீண்டாமை, சோம்பலை நீக்கப் பாடுபட்டார்.

l அதிக புலமை, கல்வி அறிவு, தொழில் திறமை கொண்டவர் என்றபோதிலும், இவர் ஒருபோதும் பணத்தைத் தேடி ஓடியதில்லை. புயல், வெள்ளம், பஞ்சம் ஆகிய இயற்கைச் சீற்றங்கள், கல்வியறிவு இன்மை, வறுமை, நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அயராமல் பாடுபட்டார்.

l லாலா லஜ்பத்ராய் தொடங்கிய லோக சேவா சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டவர், தன் சொத்துகள் அனைத்தையும் இந்த சங்கத்துக்கே வழங்கினார்.

l சிறந்த எழுத்தாளர், கவிஞராகவும் விளங்கியவர். ஒரிய இலக்கியத் துக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. ‘பந்தீர் ஆத்மகதா’, ‘அவகாஷ் சிந்தா’, ‘காரா கவிதா’, ‘நசிகேத் உபாக்யான்’ ஆகிய படைப்புகள் புகழ்பெற்றவை.

l ‘குமாஸ்தாக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்வியால் பயனில்லை. நாடு முன்னேற தொழிற்கல்வியே முக்கியம்’ என்று வலியுறுத்தினார். பூரிக்கு அருகே இயற்கை எழில் மிகுந்த இடத்தில் ‘சத்தியவதி வன வித்யாலயா’ என்ற கல்வி நிறுவனத்தை 1909-ல் தொடங்கினார். தாகூரின் சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை முன்னோடியாகக் கொண்டு இது தொடங்கப்பட்டது. இங்கு பாடம் கற்பிக்கும் முறையில் பல புதிய அம்சங்கள் உருவாக்கப்பட்டன.

l மனித குலத்தின் நல்வாழ்வுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித் தவர். உத்கலமணி (ஒடிசாவின் மாணிக்கம்), கர்மயோகி, இந்தியக் கலாச்சாரத்தின் சின்னம் என்றெல்லாம் போற்றப்படும் கோபபந்து தாஸ் 51-வது வயதில் (1928) மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in