Last Updated : 12 Nov, 2020 02:55 PM

 

Published : 12 Nov 2020 02:55 PM
Last Updated : 12 Nov 2020 02:55 PM

தீபாவளி லேகியம் செய்முறை இப்படித்தான்!  ஜீரண சக்தியைத் தரும் தீபாவளி மாமருந்து! 

பொதுவாக பண்டிகைகளின் போது, வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரம் கொண்ட தின்பண்டங்களை பலகாரம் என்கிறோம். இதை வெறும் உணவாக மட்டும் பார்க்க முடியாது. அன்பு, சுவை, திருப்தி, பக்தி, கொண்டாட்டம் என பலவகையான உணர்வுகளை உள்ளடக்கியவை. நண்பர்களுடன், உறவினர்களுடன், அக்கம் பக்கத்து வீட்டாருடன் இருக்கும் மனக்கசப்புகளை, இனிப்புகளைக் கொடுத்து சரிசெய்துவிடலாம். அப்படியானதொரு கொண்டாட்டம்தான் தீபாவளித் திருநாள்!

தீபாவளி அன்று வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய பலகார வகைகளை எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அன்றைய தினம் முழுவதும் வெளுத்து வாங்கி விடுவோம். அக்கம்பக்க நட்பு வட்டத்தில் இருந்து, விதம் விதமான, வெரைட்டி வெரைட்டியாக பலகாரங்கள் வரும். அனைத்தையும் ஒரு கை பார்த்துவிடுவோம்.
தீபாவளியில், வெளுத்துக் கட்டுவோம். மறுநாள் வயிற்றில் உப்புசம், அஜீரணக் கோளாறு, திடீர் எப்பங்கள் என்று அல்லாடுவோம். ஆனால், எப்பேர்ப்பட்ட பலகாரங்களையும் ஜீரணிக்க வைக்கக்கூடிய தீபாவளி மருந்தை சாப்பிட்டால், ஜீரணப் பிரச்சினையில் இருந்து நிவாரணம் பெற்றுவிடலாம்.

நம் தாத்தா பாட்டி காலத்தில் எண்ணெய்க் குளியலும், தீபாவளி மருந்தும் கொண்டதே முழுமையான தீபாவளி. நம் முன்னோர் கொடுத்திருக்கும் இந்த பாரம்பரியமான மருந்தை இன்றைக்கு அடியோடு மறந்தே போனோம்.

தீபாவளி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு அளவில்லாமல் பலகாரங்களை உண்பதால் தொண்டைப் பிரச்னை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இம்சை செய்யும். மேலும் பட்டாசுப் புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதனைத் தவிர்க்கத்தான் தீபாவளி மருந்து அல்லது லேகியம் தயாரிக்கப்படுகிறது. இந்த லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்வதால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்கிறார்கள்.

தீபாவளி மருந்து தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்:

* சுக்கு – 1 துண்டு
* சீரகம் – 2 1/2 அரை மேஜைக் கரண்டி
* மிளகு - 2 மேஜைக்கரண்டி
* தனியா(மல்லி) - 2 1/2 அரை மேஜைக்கரண்டி
* ஓமம் – ரு கப் (சுமார் 25 கிராம்)
* கிராம்பு - 2
* ஏலக்காய் – 2
சித்தரத்தை - 10 கிராம்
* நெய் – ஒரு கப்
* வெல்லம் – 100 கிராம் (அரைத்த விழுதின் அளவிற்கு சமமாக வெல்லத்தைப் போட்டால் நன்றாக இருக்கும்)

செய்முறை:

இந்தப் பொருட்களையெல்லாம் நன்றாக இடித்து நொறுக்கி பொடி செய்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறிய பின் அம்மியில் வைத்து, அந்தத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து, நைசாக மாவு போல் அரைத்து எடுத்துக் கொண்டு போதிய அளவு கப் தண்ணீர் சேர்த்து குழம்பு போல் கரைத்துக் கொண்டு, மண் சட்டியில் வைத்து, கரண்டியால் அடி பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

தண்ணீர் சுண்டி கெட்டியாக வந்தபின், வெல்லத்தூளை போட்டுக் கிளறி நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாகச் சுண்ட வேண்டும். சுண்டக்காய்ச்சிய பிறகு இறக்கவும்.

இனி தீபாவளி மருந்தோடு வயிறும், மனமும் திருப்தி அடையும் வரை தீபாவளி பலகாரங்களை தைரியமாகச் சாப்பிடலாம். முடிந்தால் உங்கள் பலகார வகைகளோடு சேர்த்து இந்த மருந்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x