Published : 22 Sep 2020 01:23 PM
Last Updated : 22 Sep 2020 01:23 PM

தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்; தேவை மாதம் ரூ.18000: கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு?

முனைவர் ப. பாலமுருகன்

குறைந்தபட்ச ஊதியம் - வரையறை

அனைத்துத் தொழிலாளர்களையும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பதற்காகக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து, அவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகக் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம் என்பதைச் சட்டம் வரையறை செய்யவில்லை. ஏனெனில், அது மாநிலத்துக்கு மாநிலம், பகுதிக்குப் பகுதி, தொழிலுக்குத் தொழில் வேறுபடக் கூடியது என்பதால் குறிப்பிட்டு வரையறை செய்ய முடியாது.

ஆனால் ஊதியம் என்பதை, “தொழிலாளர்களுக்கு அவர் செய்த வேலைக்கு மறுபயனாக, அவரது முதலாளியால் வழங்கப்படும் சம்பளம் அல்லது பணத்தால் அளவிடக்கூடிய வெகுமதி ஊதியம்” என வரையறை செய்துள்ளது. வீட்டு வாடகைப்படி, விடுமுறைச் சம்பளம், மின்சாரம், தண்ணீர், மருத்துவ வசதிகளின் பணமதிப்பு மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்களுக்குச் செலுத்த வேண்டியத் தொகை போன்றவை ஊதியத்தில் அடங்கும்.

ஊதியத்தை, வழங்கப்படும் முறை, தன்மை மற்றும் நிர்ணயிக்கும் அளவுகோல் அடிப்படையில் வாழ்க்கை ஊதியம் (Living Wage), நியாயமான ஊதியம் (Fair Wage) மற்றும் குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) என மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். வாழ்க்கை ஊதியம் என்பது ஒரு மனிதன் கண்ணியமாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்குத் தேவையான அளவு வழங்கப்படும் ஊதியமாகும். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுடன், ஒருவரது குடும்பத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் அவரது தொழிற்திறனை வளர்த்துக்கொள்ள ஆகும் செலவை ஈடுகட்டும் வகையில் இருப்பது வாழ்க்கை ஊதியமாகும்.

நியாயமான ஊதியம் என்பது வாழ்க்கை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட ஊதியம். நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களை அரசு கட்டாயப்படுத்த முடியாது. தொழிலாளியின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கண்ணியமான வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியமாகும். நியாயமான ஊதியத்தின் மிகக் குறைவான அளவிலிருந்து தொடங்குவது குறைந்தபட்ச ஊதியமாகும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை; தனது சக்திக்கு மீறியது என வழங்காமல் இருக்க முடியாது; மேலும் ஒரு தொழிலுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்போது நிறுவனத்தின் நிதி நிலைமை, ஊதியம் வழங்கும் சக்தி, அரசாங்கத்தின் கொள்கை போன்றவற்றைக் கணக்கில் கொள்ளக் கூடாது. ஒரு உரிமையாளர் லாபம் அடைந்தாலும், நஷ்டம் அடைந்தாலும் நிர்ணயிக்கப்பட்டக் குறைந்தபட்ச ஊதியத்தைத் தொழிலாளர்களுக்குக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் கணக்கீடு செய்யும் முறை

1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் கருத்தரங்கம் (Indian Labour Conference – ILC), அமர்வு 15 – ல், குறைந்தபட்ச ஊதியம் என்பது தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. மேலும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கீடு செய்யும் பொழுது, கீழ்க்கண்ட ஐந்து முக்கியக் காரணிகளைக் கருத்தில் கொள்ளப் பரிந்துரைத்தது.

1. ஒரு தொழிலாளிக்கு 3 நுகர்வு அலகுகள் (consumption unit - 1+1+0.5+0.5) - தொழிலாளர் தவிர்த்து, ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் எனக் கணக்கில் கொள்ள வேண்டும்; குடும்பத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வருவாய் கணக்கில் கொள்ளப்படாது.

2. ஒரு நபருக்கு, 2700 கலோரி சக்தியைப் பெறும் அளவு உணவுத் தேவைகள் கணக்கிடப்பட வேண்டும்.

3. ஒரு தனிநபருக்கு, 18- யார்டு அளவுத் துணி, ஆடைத் தேவைக்காகக் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு வருடத்திற்கு, நான்கு நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 72 யார்டுத் துணி தேவைப்படும்.

4. அரசாங்கத்தின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச வாடகையை, ஊதியத்தை நிர்ணயிப்பதில் கருத்தில் கொள்ள வேண்டும்.

5. எரிபொருள், மின்சாரம் மற்றும் இதர பொருட்களின் செலவிற்குக் குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் கணக்கிட வேண்டும்.

1988 ஆம் ஆண்டு முதல், குறைந்தபட்ச ஊதியம் என்பது தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (Consumer Price Index – Industrial Workers) இணைக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் ராப்டகோஸ் (Raptakos Brett) தொழிலாளர்கள் வழக்கில் மேற்சொன்ன காரணிகள் தற்போதுள்ள சூழலுக்குப் போதாது என்றும், குழந்தைகளின் கல்வி, மருத்துவம், குறைந்தபட்ச பொழுதுபோக்கு, பண்டிகை – திருவிழாக்கள், வயதானவர்கள் மற்றும் திருமணங்கள் போன்றவற்றிற்குக் குறைந்தபட்ச ஊதியத்தில் 25 சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் (National Floor Level Minimum Wage – NFLMW)

1996 ஆம் ஆண்டு, முதன்முதலாக தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம் (National Floor Level Minimum Wage – NFLMW) ரூபாய் 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 1998 -ல் ரூபாய் 40; 1-12 -1999 ஆம் தேதி முதல் ரூ.45; 1-9-2002 ஆம் தேதி முதல் ரூ.50; 01-02-2004 ஆம் தேதி முதல் ரூ.66; 01-09-2007 ஆம் தேதி முதல் ரூ.80; 1-11-2010 ஆம் தேதி முதல் ரூ.100; 1-04-2011 ஆம் தேதி முதல் ரூ.115; 1-07-2013 ஆம் தேதி முதல் ரூ.137; 1-7-2015 ஆம் தேதி முதல் ரூ.160; 1-7-2017 ஆம் தேதி முதல் ரூ.176; இறுதியாக 2019 ஆம் ஆண்டு ரூ.178 ஆக உயர்த்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டு 17 சதவீத உயர்வும் , 2017 - ல் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், 2019 ஆம் ஆண்டு வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 2016 முதல், மத்திய அரசுப் பணிகளில் புதிதாக நுழையும் ஒருவருக்கு ரூபாய் 18 ஆயிரம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுவால், உணவு மற்றும் 5.50 மீட்டர் ஆடைக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.9218; எரிபொருள், மின்சாரம், தண்ணீர் செலவினங்களுக்கு ரூ.2304 (25%); திருமணம், பொழுதுபோக்கு, திருவிழாக்களுக்கு ரூ.2,033.38 ( 22 %); ஆக மொத்தம் ரூ.13555. 88; இதில் திறன் வளர்ப்புக்கு ரூ. 3388.97 (25 சதவீதம்); வீட்டு வாடகை 524.07 உட்பட ரூ.18000 குறைந்தபட்ச ஊதியமாக 01.01.2016 முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: பக்கம் 65 - ஏழாவது ஊதியக்குழு அறிக்கை).

இந்தக் கணக்கீடுகள் பெரும்பாலும் 1992 ஆம் ஆண்டு இருந்த காரணிகள் அடிப்படையில் இருக்கின்றன. அதிலும்கூட, வீட்டு வாடகைக்கு ரூ.524 என்பது பொருத்தமற்றது. இந்த வாடகைக்கு இந்தியாவில் வீடுகள் கிடைக்காது என்பது அனைவரும் அறிந்த விஷயம். சிறு நகரங்களில் கூட, குறைந்தபட்சம் ரூ.3000க்கு மேல் வீட்டு வாடகை வசூலிக்கப்படுகிறது. டெல்லி, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் இன்னும் கூடுதலான வீட்டு வாடகை செலுத்த வேண்டி இருக்கிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், ஏழாவது ஊதியக்குழு, ILC மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, குறைந்தபட்சம் ரூ.26,000 வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

இதற்கிடையில், கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள அரசு தனது புதிய தொழிலாளர் கொள்கையில் கேரளாவில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.600 ஆக இருக்கும் வண்ணம், மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 2019 ஆம் ஆண்டு, டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலோடு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி உள்ளது. டெல்லி அரசின் அறிவிப்பின்படி, திறனற்ற பணிகளுக்கு (Unskilled) மாதம் ரூ.14,842; பகுதித் திறன் தேவைப்படும் பணிகளுக்கு (Semi Skilled) ரூ.16,341; திறன்மிகு பணிகளுக்கு (skilled) ரூ.17,991; பட்டப்படிப்பு படித்த திறன்மிக்க தொழிலாளர்களுக்கு ரூ.19, 572 என்று குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துள்ளது. இந்த உயர்வை எதிர்த்து முதலாளிகளின் அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். முதலாளிகளுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்ததால், டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. அப்போதைய விலைவாசி நிலையைக் கருத்தில் கொண்டு இந்த உயர்வுக்கு அக்டோபர் மாதம், 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. டெல்லி அரசின் குறைந்தபட்ச ஊதியம், தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் மூன்று மடங்குக்கு மேல் அதிகம்.

கடந்த ஜனவரி மாதம், 2019 ஆம் ஆண்டு, முனைவர் அனுப் சத்பதி தலைமையில் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதில் முக்கியப் பரிந்துரையாக, இந்தியாவை சமூகப் பொருளாதார மற்றும் தொழிலாளர் சந்தைச் சூழலின் அடிப்படையில் ஐந்து பகுதிகளாகப் பிரித்து தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது; தொழிலாளியின் குடும்பத்திற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட மூன்று நுகர்வு அலகுகளை 3.6 ஆக அதிகரித்தல்; ஜூலை 2018 நிலவரப்படி, ஒரு நாளைக்கு ரூ.375 அல்லது மாதத்துக்கு ரூ.9750-ஐ குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிப்பது போன்ற முக்கியப் பரிந்துரைகளைச் செய்தது. இந்த அறிக்கையின் படி தமிழகத்தில் (Region -3) ஒரு நாளைக்கு ரூ.414.40 நிர்ணயிக்கப்பட வேண்டும். (Source: Report of the Expert Committee on Determining the Methodology for Fixing the National Minimum Wage). ஆனால் மத்திய அரசு இந்த அறிக்கையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது குறித்து, வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருக்கின்றன. ஒருபுறம், இது தொழிலாளர்களின் கௌரவமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கும், வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்கும் உதவும்; தொழிலாளர்களிடம் அதிக பணப்புழக்கம் இருப்பதால் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக் காரணமாக இருக்கும்; கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்யப் பணம் இருப்பதால் திறமையானப் பணியாளர்களைப் பெற உதவும் என்ற கண்ணோட்டமும்; மறுபுறம் போதிய நிதி உதவிகள் இல்லாமல் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது தொழில்களுக்குப் பேரழிவைத் தரும்: வேலையின்மை உயரக்கூடும்; ஊதிய உயர்வை ஈடுகட்டப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையைத் தொழில் நிறுவனங்கள் உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்படுவதால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற மாறுபட்ட கண்ணோட்டமும் இருக்கிறது. இரண்டு வாதங்களையும் புறந்தள்ள முடியாது. அதனால் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும்பொழுது, இரண்டையும் - தொழிலாளர்கள் மற்றும் தொழில், பாதுகாக்க வேண்டியது அவசியம்.

கோவிட் 19-ன் தாக்கத்தால் பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) நடத்திய கணக்கெடுப்பில், ஏப்ரல் மாதத்தில் 12.2 கோடி பேர் வேலையிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள 5,000 பேரிடம் பிழைப்பாதாரம் பாதிப்பு குறித்து நடத்திய கணக்கெடுப்பில் (Sample Survey), 67% பேர் வேலை இழந்துள்ளதாக கண்டறிந்துள்ளது. வேலையிழப்பு இதுவரை இல்லாத அளவில் கூடுதலாக இருக்கிறது; வேலையில்லாச் சூழலில் முதலாளிகளிடம் ஊதியத்தைக் கேட்க முடியாத நிலை தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகிறது. மேலும் பல இடங்களில் ஏற்கெனவே வாங்கிவந்த ஊதியத்தில் 10 முதல் 40 சதவீதம் வரை குறைவாக கொடுக்கப்படுகின்றது. இதுபோல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் தொழிலாளர் வர்க்கத்திற்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒரு கனவாகவே இருக்கிறது.

தற்போதைய சூழலில், ILC மற்றும் 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் கணக்கீடு செய்தால் குறைந்தது மாதம் ரூ.26000-க்கு மேல் வரும். மேலும், 1992 ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால், வீடுகளுக்கு கேபிள் தொலைக்காட்சி வசதி, இருசக்கர வாகனம், அலைபேசி, இணையசேவை, கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, கணினி போன்றவை அத்தியாவசியத் தேவைகளாக மாறிவிட்டன. தமிழகத்தில், அரசே பல பொருட்களை இலவசமாக வழங்கியுள்ளது. அதனால் மின்சாரம், எரிபொருள், அலைபேசி கட்டணம் போன்ற செலவினங்கள் கூடியுள்ளன. இவற்றையெல்லாம் கணக்கிட்டால் 2016-இல் நிர்ணயிக்கப்பட்ட ரூ.18000 என்பது கண்டிப்பாக தேவைகளை முழுக்க பூர்த்திச் செய்யப் போதுமானதாக இருக்காது எனத் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஊதியம் என்பது தொழிலாளர்கள் உழைப்புச் சக்தியை மறு உற்பத்தி செய்யவும், மேம்படுத்தவும் அவர்களின் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யவும் போதுமானதாக இருக்க வேண்டும். 2017 - ல் ரூ.176 ஆக இருந்த தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம், 2019 ஆம் ஆண்டு ரூ.178 ஆக உயர்த்தப்பட்டது. இது, தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே மத்திய அரசு, மத்திய அரசுப் பணியில் இல்லாத தொழிலாளர்களுக்கும் கௌரவமாக வாழ உரிமை உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு மாதம் குறைந்தபட்சம் ரூ.18000 (ஒரு நாளைக்கு ரூ.692) என்பதைத் தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், தினசரி ரூ.692 என ஊதியத்தை நிர்ணயம் செய்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மத்திய அரசு திகழ வேண்டும்.

நீடித்த வளர்ச்சி இலக்கு 8.7-ஐ (Sustainable Development Goal 8:7), அடைய, குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது மிகவும் அவசியமானதாகும். கட்டாய வேலை, நவீன அடிமைத்தனம் கொத்தடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் முறை போன்ற பிரச்சினைகளை, 2025 ஆம் ஆண்டுக்குள் முடிவுக்குக் கொண்டுவர, குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும்.

முனைவர் ப. பாலமுருகன்,

மனித உரிமைச் செயற்பாட்டாளர்,

தொடர்புக்கு: balaviji2003@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x