Published : 19 Sep 2020 09:14 AM
Last Updated : 19 Sep 2020 09:14 AM

மூன்று வேளாண் சட்டங்கள்: ஏன் போராட்டம்?- பிரச்சினை என்ன?- யோகேந்திர யாதவ் என்ன கூறுகிறார்?

மண்டி முறையில் ஏலம்.

நாடாளுமன்றத்தில் 3 வேளாண்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன, தேஜகூவில் உள்ள சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத்கவுர் பாதல் ராஜினாமா செய்தார்.

மேலும் கடும் எதிர்ப்புகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரங்களுக்கு இரையாக வேண்டாம் என்று கூறுகிறார் .

பொதுவாக இது விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்களுக்கு, தனியார்களுக்கு சாதகமானது, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப்பாதுகாப்பை அழிப்பது என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த 3 சட்டங்கள் எதை நோக்கியது? என்று பார்ப்போம்:

1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.

2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்

3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.

அதாவது மண்டி முறையை ஒழித்துக் கட்டுவதாக இந்த 3வது அம்சத்தைத்தான் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. விவசாயிகளின் போராட்டமும் இது குறித்து பெரும்பாலும் கவனக்குவிப்பு பெற்றுள்ளது.

ஏற்கெனவே உள்ல ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் மண்டி முறை சிக்கலுக்குள்ளானால் தனியார்கள், வாணிபர்கள், கமிஷன் ஏஜெண்ட்கள் ஆகியோரே விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பார்கள்.

விவசாயிகளும் விவசாயத் தலைவர்களும் கவலைப்படுவது என்னவெனில் மண்டிகள் என்ற ஏபிஎம்சிக்கு வெளியே தனியார்களை கொண்டு வருவதன் மூலம் ஏபிஎம்சியில் விவசாயப் பொருட்களை வாங்குபவர்கள் எண்ணிக்கை சரியும். இது ஏன் எனில் இந்தப் புதிய வேளாண் சட்டத்தில் இந்த புதிய ‘வர்த்தகப் பகுதிகள்’ அல்லது புதிய சந்தைகளில் பொருட்களை விற்க வரும்போது சந்தைக் கட்டணம், செஸ், அல்லது கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பழைய மண்டி முறையில் இந்தக் கட்டணங்கள் கூடுதலாகச் சேர்க்கப்படும். பஞ்சாபில் இது 8.5% வரையில் உள்ளது.

தனியார் சந்தைகளை உள்ளே கொண்டு வந்து அவர்களுக்குச் சாதகமாக இந்த சலுகைகளை அளிக்கும் போது இது சரிசமமான ஒரு போட்டிச் சந்தையை உருவாக்காது.

சமூக விஞ்ஞானி மற்றும் அரசியல் தலைவரான விவசாய இயக்கங்களின் தலைவருமான யோகேந்திர யாதவ் இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் கமிட்டிகளுக்கு வெளியே இருக்கும் தனியார்களுக்கு கூடுதல் கட்டணம், வரி இல்லை என்றால் ஏபிஎம்சி பக்கம் யாரும் வர மாட்டார்கள். வர்த்தகர்கள் எளிதாக வெளியேயிருந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். அவர்கள் தங்கள் லாபத்தில் ஒருவிகிதத்தை தருவதாகக் கூறி விவசாயிகளை ஆசை காட்டி இழுக்க முடியும். இப்படி செய்தால் ஏபிஎம்சி முறை முற்றிலும் சரிவடைந்து விடும்” என்கிறார். எனவேதான் யோகேந்திர யாதவ், “ஏபிஎம்சி முறையை மேம்படுத்துவதற்குப் பதிலாக இவர்கள் தனியார்களுக்கு தாரை வார்த்து மண்டி முறையையே ஒழிக்கப் பார்க்கின்றனர்” என்கிறார்.

இது நடந்து விட்டால் திறந்த சந்தை என்ற பெயரில் சந்தை வியாபாரிகள் சிலரின் தன்னிச்சையான செயல்பாங்குக்கு வந்து விடும், விவசாயப் பொருட்களுக்கு இவர்கள் வைப்பதுதான் விலை. எந்த வியாபாரியும் நிர்ணையிக்கப்பட்டதற்குக் கூடுதலாக விலை கொடுக்க மாட்டார்கள். ஆனால் கூறப்படுவதென்னவெனில் எல்லா சந்தைப் பொருளாதார ஆதரவு வாதிகளும் கூறி இன்று பொய்த்துப்போன விளக்கமான ‘போட்டி சமநிலை எய்தும், சுதந்திர வாணிபத்தில் சந்தை துல்லிய போட்டியை எய்தும், இதனால் விவசாயிக்கு அவரது விளைபொருட்களுக்கான நியாய விலை கிட்டும்’ என்று கூறப்படும். ஆனால் இந்தச் சந்தை பொருளாதாரக் கோட்பாடு எப்போதோ காணாமல் போய் சமச்சீரான போட்டி என்பது காணாமல் போய்விட்டது என்பது வேறு கதை. கார்ட்டெல் என்ற முதலாளிகள், கார்ப்பரேட்கள் தங்களுக்குள் ஒப்பந்தித்துக் கொண்டு இந்த பொருளுக்கு இன்னவிலைதான் கொடுக்கப் போகிறோம் என்று நிர்ணயித்துக் கொள்வார்கள், இதில் எங்கு சந்தைப் போட்டி உள்ளது?

வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர், “இந்த மசோதாக்கள் போட்டியை அதிகரித்து தனியார் முதலீட்டை இந்த துறையில் ஈர்க்கும் இதனையடுத்து வேளாண் உள்கட்டமைப்பு வளர்ச்சியடைய உதவும். வேலை வாய்ப்பு உருவாகும்” என்கிறார்.

பிஹாரில் ஏற்கெனவே ஏபிஎம்சி முறை ஒழிக்கப்பட்டு 2006-ல் மாற்று முறை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து குறைந்தபட்ச ஆதார விலை அளிக்க வேண்டிய விவசாய விளைபொருட்களை அரசு வாங்குவது கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டதுதான் நடந்தது.

கோட்பாட்டளவில் ஏபிஎம்சி முறையில் விவசாயப் பொருட்களை வர்த்தகர்கள் மண்டியில் ஏலம் எடுப்பார்கள், அதிகவிலை கொடுக்க முன்வருபவர்களுக்கு விற்கப்படும். ஆனால் தனியார் மண்டிகளில் இந்த முறை கிடையாது. பிஹார் தனியார் மண்டிகளில் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு மிகக்குறைந்த விலையே கொடுக்கப்பட்டது, அதுவும் சீசனுக்கு சீசன் கடுமையாக மாறும். உதாரணமாக பிஹாரில் சோளத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,200 கடந்த ஆண்டு இருந்த விலை நடப்பு ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.1300 ஆகச் சரிந்தது.

பிஹார் மாநிலத்தின் தனியார் மண்டி குறித்து தி இந்து பிசினஸ் லைன் பத்திரிகையில் வேளாண் உணவுப்பொருள் கொள்கை நிபுணர் தேவிந்தர் ஷர்மா எழுதிய போது, “தனியார் முதலீடுகளை ஈர்ப்பது என்பதுதான் இதன் சொல்லப்படும் காரணம். மார்க்கெட்டிங் உள்கட்டமைப்புகளில் தனியார் முதலீடுகளை ஈர்த்து போட்டித்திறன் மிகு சந்தை மூலம் சிறந்த விலை கிடைக்கும் என்பதுதான் கோட்பாடு, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று எழுதினார்.

விவசாயிகளின் இன்னொரு பயம் என்னவெனில் வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற பிரிவில் அரசுக் கொள்முதல் அளவு பெருமளவு குறைந்து விடும் என்பது. குறைந்தப்பட்ச ஆதார விலை குறித்து இந்த 3 சட்டங்களிலும் எதுவும் நேரடியாகவோ மறைமுகமாகவே குறிப்பிடவில்லை என்றாலும், இந்த நடைமுறை பழக்கத்துக்கு வந்து போகப்போக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தபட்ச ஆதாரவிலையில் அரசுக் கொள்முதலையே இல்லாமல் செய்வதற்கான முன்னோடி என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அரசு 2014ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் விதத்தைப் பற்றி யோகேந்திர யாதவ் ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கூடுதலாக போனஸ் தொகை அளிப்பதை இந்த அரசு எப்படி மாநிலங்களைத் தடுத்த வழிமுறைகளைப் பார்த்தால் புரியும். சாந்தகுமார் கமிட்டி என்ன கூறியது, உணவு மானியச் செலவு குறைக்கப்பட வேண்டும். அரசுக்கொள்முதல் குறைக்கப்பட வேண்டும் என்று கூறியது. மேலும் கோதுமை, அரிசி ஆகிய அத்தியாவசிய உணவுபொருட்களை அரசுக் கொள்முதல் செய்வது நீடித்து செயல்பட முடியாது என்று அரசு கூறியது. இவையெல்லாம் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற விவசாய நலத்திட்டத்திலிருந்து முற்றிலும் அரசு விலகுவதற்கான சுவடுகளே” என்றார்.

ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் முறை இருக்கும், உறுதி அளிக்கிறோம், என்கிறார் வேளாண் அமைச்சர் தோமர்.

இதற்கு என்னதான் வழி என்பதற்கு யோகேந்திர யாதவ் பதில் கூறுகிறார், அதாவது, “இந்த மசோதாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்ட உரிமையாக்கப்பட வேண்டி ஒரு பிரிவைச் சேர்க்க வேண்டும்” என்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x