

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கரோனா ஊரடங்கில் வீட்டின் சுவரில் ஓவியம் வரையும் தங்களது மகளின் ஆர்வத்தை பெற்றோர் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
கரோனா ஊரடங்கால் பலரும் வருமானமின்றி முடங்கினர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இச்சூழ்நிலையில் காரைக்குடி பொன்நகரைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் கணேசனின் மகள் ஸ்ரீராகவி சுவர் ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.
இவர் காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து பிளஸ் 1 செல்கிறார். இவரது தாயார் பவளஅரசி அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார்.
ஸ்ரீராகவி சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இருந்தபோதிலும் ஊரடங்கு சமயத்தில் அதிக ஓய்வு நேரம் கிடைத்ததால் வீட்டு சுவரில் ஓவியங்களை வரையத் தொடங்கினார். அது தத்ரூபமாக இருந்ததால் அவரது பெற்றோரும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.