Published : 23 Jul 2020 05:58 PM
Last Updated : 23 Jul 2020 05:58 PM

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பட்டதாரி இளைஞர்கள்: இதுவும் கரோனா தந்த காலமாற்றம்தான்!

கரோனா ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளது. பலரது வேலைவாய்ப்பையும் பறித்திருக்கிறது. இப்படியான சூழல் நெருக்கடிகளுக்கு மத்தியில், கேரளத்தில் பட்டதாரி இளைஞர்களும், பொறியியல் கல்லூரி மாணவர்களும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்யுமளவுக்கு எதற்கும் தயாராகி விட்டார்கள்.

கோழிக்கோடு மாவட்டத்தின் மேப்பாயூர் கிராம இளைஞர்கள்தான் இந்த முயற்சிக்குச் சொந்தக்காரர்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரிகள், கல்லூரிகளில் படிப்போர் என 14 இளைஞர்கள் மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் தங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பணி செய்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் கிராமத்தில் சாலையோர புல், செடிகளை அகற்றுவது தொடங்கி நீராதாரங்களைச் சுத்தம் செய்வதுவரை கவனிக்கத்தக்க பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து அந்த இளைஞர்களில் ஒருவரான சுரேஷ் நம்மிடம் பேசுகையில், “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் வருடத்தில் நூறு நாள்களுக்குப் பணியினை உறுதிசெய்கிறது. சொந்தமாக ஒரு மண்வெட்டி இருந்தாலே போதும். 18 வயதைக் கடந்தவராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே இந்த வேலைக்கான தகுதி. நான் வணிகவியல் இறுதியாண்டு படிக்கிறேன். மண் வெட்டியும், கையுமாக வீட்டைவிட்டு இறங்கியதும் முதலில் எனது நண்பர்களே ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், அடுத்த நாளில் இருந்து அவர்களும் என்னுடன் வேலைக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள்.

பொதுவாகவே கேரளாவில் வீட்டுக்கு வீடு மரம், செடிகள் நிறையவே இருக்கும். அதனால எங்களுக்கு மண்வெட்டி பிடிச்சும் பழக்கம்தான். இங்கே இளைஞர்கள் நாங்கள் 14 பேர் வேலை செய்கிறோம். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உண்டு. என்னோடு இப்போது இருக்கும் அகில் கடந்த வருடம் பி.எஸ்சி., முடித்தார். கல்யாண வீடுகளில் பந்தி பரிமாறும் வேலைக்குப் போய்தான் அவர் கல்லூரிப் படிப்பையே முடித்தார். இப்போது கல்யாணங்கள் எளிமையாக நடப்பதால் அவரால் அந்த வேலைக்குப் போகமுடியவில்லை. அகிலோட அப்பாவுக்கும் கரோனாவால் வேலை போய்விட்டது.

இந்தச் சூழலில் இப்ப நூறு நாள் வேலைதான் அகிலோட குடும்பத்துக்கு கைகொடுக்கிறது. எங்க நண்பனோட அம்மா சொல்லித்தான் எங்களுக்கு இந்தத் திட்டம் பற்றித் தெரியும். எங்க 14 பேரில் இரண்டு பேர் பொறியியல் முடிச்சவங்க. அவங்களும் கரோனாவால் வேலையை இழந்தவர்கள்” என்றார். நூறு நாள் வேலைத் திட்டத்தின் சம்பளம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

கேரளத்தைப் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 271 ரூபாயாக இருந்த சம்பளம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 291 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கேரளத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் இதுபோல் பல படித்த இளைஞர்களும் சேர்ந்து வருகின்றனர். அதிலும் கரோனாவுக்குப் பின்பு நூறு நாள் வேலைக்குப் பதிவுசெய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x