Published : 20 Jul 2020 12:21 PM
Last Updated : 20 Jul 2020 12:21 PM

மார்க்கெட் மூடப்பட்டதால் சமூகவலைதளம் மூலம் கொய்யா வியாபாரம் செய்யும் எம்.பி.ஏ., பட்டதாரி

ஊரடங்கு காரணமாக பழநியில் கொய்யா மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் சமூகவலைதளம் வழியாக தனது தோட்டத்தில் விளையும் பழங்களை விற்பனை செய்துவருகிறார், எம்.எம்.ஏ., பட்டதாரியான மகுடீஸ்வரன்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி இடும்பன்மலை அடிவாரம் பகுதியில் வசித்துவருபவர் மகுடீஸ்வரன். எம்.பி.ஏ., படித்துள்ள இவர், தன்னுடைய தோட்டத்தில் விளையும் பழங்களை தற்போது சமூகவலைதள உதவியுடன் விற்பனை செய்து லாபம் ஈட்டிவருகிறார்.

இதுகுறித்து மகுடீஸ்வரன் கூறியதாவது:

எம்.பி.ஏ., படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். எனது தந்தை அங்குச்சாமி நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் பராமரித்து வந்த தென்னை மரங்கள் காய்ந்துவிட்டதால், தொடர்ந்து விவசாயம் பார்க்கமுடியாத நிலை ஏற்பட்டது.

விவசாயத்தை கைவிடக்கூடாது என்பதற்காக, நான் எனது வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்க்கலாம் என முடிவு செய்தேன். தென்னைமரங்களை முற்றிலும் அழித்துவிட்டு கொய்யா, மாதுளை, எலுமிச்சை ஆகியவற்றை பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்தேன். நல்ல பலன்கிடைத்தது.

ஆயக்குடி கொய்யா மார்க்கெட்டில் விளையும் பழங்களை விற்பனை செய்துவந்தேன். தற்போது கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கொய்யா மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.

இதனால் விளையும் பழங்களை வாங்கிச்செல்ல வெளியூர் வியாபாரிகள் வராததால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில், எனது தோட்டத்தில் விளையும் பழங்கள் குறித்து பதிவிட்டேன். எனது தொடர்பு எண்ணையும் தெரிவித்தேன்.

இதனால் பழநி மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த மக்கள் என்னை தொடர்புகொண்டு பழங்களின் தேவையை தெரிவித்தனர். அவர்களுக்கு நேரடியாக சென்று

மொத்தமாக வழங்கிவருகிறேன். கொய்யா ஒரு கிலோ ரூ.20, மாதுளை ரூ.60, எலுமிச்சை ரூ.90 முதல் ரூ.110 வரை விற்கப்படுகிறது. தற்போது நேரடியாக வியாபாரம் செய்வதால் இழப்பின்றி வருமானம் கிடைத்துவருகிறது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x