Published : 22 Jun 2020 07:10 PM
Last Updated : 22 Jun 2020 07:10 PM

ஏப்ரல் 25-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கர் விழா; பின்னணி என்ன?

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா, 2021 பிப்ரவரி 28-ல் நடக்கவிருந்த நிலையில், கரோனா காரணமாக அது ஏப்ரல் 25-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

கரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் ஹாலிவுட் படங்கள் வெளியாவது தடைப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ், எச்.பி.ஓ போன்ற ஓடிடி நிறுவனங்கள் மட்டும் இணையத் தொடர்களையும் சில படங்களையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில்தான், விருது நிகழ்ச்சியை இரண்டு மாதங்களுக்குத் தள்ளிப்போட்டிருக்கிறது ஆஸ்கர் அமைப்பு. வழக்கமாக ஆஸ்கர் விருதுக்கான படங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் மாதத்தின் இறுதி நாள்தான் காலக்கெடு. தற்போது அதையும் மாற்றி பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளாக அறிவித்திருக்கிறார்கள் ஆஸ்கர் கமிட்டியினர்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. 2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா 2020 பிப்ரவரி 9-ம் தேதி நடந்தது. ஆஸ்கர் வரலாற்றில் ஒரு வருடம் ஆரம்பித்த உடன் இவ்வளவு குறுகிய காலத்தில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டதில்லை. வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் / ஏப்ரல் மாதங்களில்தான் விழா நடக்கும். கடந்த ஆண்டு விரைவாக விழா நடத்தப்பட்டதால் போதிய அவகாசம் இன்றி படங்களைச் சரியாகப் பார்த்து முடிக்க இயலவில்லை. விருதுக்குத் தகுதியான படங்களைத் தேர்வுசெய்ய வாக்களிப்பவர்கள் இந்தக் குறையைச் சுட்டிக் காட்டியிருந்தனர். தற்போது விழாவைத் தள்ளி வைப்பதன் மூலம் இந்தக் குறையும் நீங்கிவிடும் என்று நம்புகிறது ஆஸ்கர் அமைப்பு.

இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது விழாவில் மேலும் ஒரு மாற்றமாக, திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ளலாம் என்ற விதியை மாற்றி நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்கள் மற்றும் அமெரிக்காவில் பிரபலமாகியிருக்கும் ‘வீடியோ ஆன் டிமாண்ட் (Video on Demand - VOD)’ வகைப் படங்களும் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாகத் திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த விதித் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் அமைப்பின் அருங்காட்சியகம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன் திறப்பு விழாவும் ஏப்ரல் 30-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

“மனித வரலாற்றின் துயரமான காலங்களில் சினிமா ஆறுதலாக இருந்துள்ளது, நம்பிக்கையூட்டியுள்ளது, கவலை மறந்து சிரிக்கச் செய்துள்ளது. அது என்றும் தொடரும்” என்று ஆஸ்கர் அமைப்பின் தலைவர் டேவிட் ருபின் கூறியுள்ளார். கரோனாவால் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களைக் கடக்கும் வழிமுறையை ஹாலிவுட் திரைப்படத் துறை, உலகின் மற்ற திரைப்படத் துறைகளுக்குச் சொல்ல ஆரம்பித்துவிட்டது!

-க.விக்னேஷ்வரன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x