Published : 23 Sep 2015 10:42 AM
Last Updated : 23 Sep 2015 10:42 AM
நவீன இந்திக் கவிதை இலக்கியத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராகப் போற்றப்பட்ட ‘தேசியக் கவி’ ராம்தாரி சிங் தினகர் (Ramdhari Singh Dinkar) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# பிஹார் மாநிலம் பேகுசராய் மாவட்டத்தில் உள்ள சிம்ரியா கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் (1908) பிறந்தார். 2 வயதாகும்போது, தந்தை இறந்தார். குடும்பம் வறுமையில் வாடியதால் சரிவர படிக்க முடியவில்லை.
# பின்னாளில் இவரது கவிதைகளில் இந்த வறுமை அனுபவங்கள் வெளிப்பட்டன. வரலாறு, அரசியல், தத்துவம் ஆகியவை இவரது விருப்பப் பாடங்கள். இக்பால், தாகூர், கீட்ஸ், மில்டன் ஆகியோர் இவரது ஆதர்ச கவிஞர்கள்.
# சமஸ்கிருதம், மைதிலி, பெங்காலி, உருது, ஆங்கில மொழி இலக்கியங்களைப் பயின்றார். தாகூரின் வங்கமொழிக் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். ‘சாத்ர சஹோதர்’ என்ற பத்திரிகையில் இவரது முதல் கவிதை 1925-ல் வெளியானது.
# விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஆர்வம் கொண்டார். சர்தார் படேல் தலைமையில் பார்டோலியில் 1928-ல் நடந்த விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்ட வெற்றி குறித்து ‘விஜய் சந்தேஷ்’ (வெற்றிச் செய்தி) என்ற தலைப்பில் 10 கவிதைகளை எழுதினார்.
# தேஷ், பிரதிபா ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. முதல் கவிதைத் தொகுப்பான ‘ரேணுகா’ 1935-ல் வெளிவந்த பிறகு, மேலும் பிரபலமானார். தனது படைப்புகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கினார். மிட்டி கீ ஓர், அர்த்தநாரீஸ்வர், ரஷ்மிரதி, ஊர்வசி, ப்ரேம்கீத் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரது பெரும்பாலான படைப்புகள் வீர ரசத்தை வெளிப்படுத்துபவை.
# ஆரம்பத்தில் புரட்சி இயக்கத்தை ஆதரித்த இவர் பின்னர் காந்தியக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டு, மிதவாதியாக மாறினார். ‘‘என் படைப்புகள், பேச்சுகள் இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டுவதால், நான் ஒரு மோசமான காந்தியவாதி’’ என்பார்.
# போர் அழிவை உண்டாக்கக்கூடியது என்று தனது படைப்பான ‘குருஷேத்திரா’வில் கூறிய இவர், சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள போர் அவசியம் என்றும் கூறுகிறார்.
# பிஹாரில் 9 ஆண்டுகள் துணைப் பதிவாளராகப் பணிபுரிந்தார். பிஹார் பல்கலைக்கழகத்தில் இந்திப் பேராசிரியராகவும், பகல்பூர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றினார். மாநிலங்களவை உறுப்பினராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசின் இந்தி மொழி ஆலோசகராகவும் பணியாற்றினார்.
# இவரது ‘சம்ஸ்க்ருதி கே சார் அத்யாய்’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும், ‘ஊர்வசி’ காவியத்துக்காக பாரதிய ஞானபீட விருதும் கிடைத்தன. பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.
# கவிதை, உரைநடை, மொழிகள், இந்தி வளர்ச்சி என 4 துறைகளில் இவர் ஆற்றிய சேவைக்காக 4 ஞானபீட விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரபல கவிஞர் ஹரிவன்ஸ்ராய் பச்சன் புகழ்ந்துள்ளார். புரட்சிக் கவிஞர், தேசியக் கவிஞர் என்று போற்றப்பட்ட ராம்தாரி சிங் தினகர் 66-வது வயதில் (1974) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT