Last Updated : 15 Jun, 2020 06:37 PM

9  

Published : 15 Jun 2020 06:37 PM
Last Updated : 15 Jun 2020 06:37 PM

பெண்ணின் திருமண வயதில் மாற்றம்: ஏன்? எதற்கு?

பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் பிரசவகால இறப்பு விகிதத்தைக் குறைக்கும் நோக்கில் பெண்ணின் சட்டப்படியான மண வயதை பதினெட்டிலிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் இதற்கான பரிந்துரைகள் முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பெண்களுக்கான மண வயது உயர்த்தப்படுமானால் அது உண்மையிலேயே பாராட்டத்தகுந்த ஒரு முக்கிய நகர்வாகும்.

போராட்டங்களால் உருவான சட்டம்

இந்தியாவைப் பொறுத்தவரை இதுபோன்ற சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகள் எல்லாம் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகே சாத்தியமானது. குழந்தைத் திருமணங்களை நமது பழமையான சமூக அமைப்பு பாதுகாத்து வந்தது. அகமணமுறை என்கிற வகையில் சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்தும் ஒரு பகுதியாகவே குழந்தைத் திருமணங்கள் நடத்தப்பட்டன என்று அம்பேத்கர் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. எனவேதான் குழந்தைத் திருமண முறையைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்முயற்சிகள் தொடக்கத்தில் கடும் எதிர்ப்புகளைச் சந்திக்கவேண்டியிருந்து. இந்தியா பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த போது 1929 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “குழந்தைத் திருமண தடுப்புச்சட்டம்’‘ பெண்ணின் திருமண வயது 14 என்றும் ஆணின் மண வயது 18 என்றும் வரைமுறைப்படுத்தியது. இதன்பொருள் அப்போது 14 வயதிற்கும் கீழான குழந்தைகளுக்குத் திருமணம் நடந்து வந்ததை சுட்டிக்காட்டுகின்றன. எனவேதான் இதற்கு மதப்பழமைவாதிகள் அப்போது எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினார்கள். குழந்தைத் திருமணத்திற்கு சில விதிவிலக்குளையும் பெற்றனர்.

விடுதலைக்குப் பிறகு நாம் நமக்கான இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொண்டோம். அதன் அப்படையில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் வகையில் உருவான சட்டங்களும் குழந்தைகளின் மணவயதைத் தீர்மானிப்பதில் பல்வேறு சிக்கல்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. இறுதியில் 1978 ஆம் ஆண்டு பெண்ணின் மண வயது 18 என்றும் ஆணின் மண வயது 21 என்றும் சட்டரீதியாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்தும் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால், பிற்காலத்தில் எவ்வித விதிவிலக்குமின்றி அனைத்து தரப்பட்ட பெண்களுக்கான திருமண வயது பதினெட்டுதான் என்பது நீதிமன்றம் உறுதி செய்தது.

நடைமுறையில் உள்ள பிரச்சினைகள்

இந்தியாவில் திருமணமான இருபது முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களிடம் யூனிசெப் அமைப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் கணக்கெடுப்பின்படி 27 சதவீதமான பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் நடந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் ஏழு சதவீதப் பெண்களுக்கு 15 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடந்துள்ளது என்கிறது அந்த ஆய்வறிக்கை. சட்டப்படியான திருமண வயது 18 என்று இருக்கும் காலத்திலேயே இந்தியாவின் எதார்த்த நிலை இதுதான்.

குழந்தைத் திருமண ஒழிப்பிற்கான பல்வேறு சர்வதேச மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் 2030 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணத்தை முற்றாக ஒழிக்கும் திட்டத்தில் இந்தியாவும் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளது. இது ஒரே நாளில் நடந்து முடியும் விஷயமல்ல. இதைச் சாத்தியப்படுத்துவதென்பது தொடர் முயற்சிகளால் மட்டுமே முடியும். ஆனால் இந்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இந்திய அரசு பகிர்ந்து கொள்ளாமல் உள்ளது என்கின்றனர் இத்துறை சார்ந்து செயலாற்றுபவர்கள்.

சட்டங்களை நடைமுறையில் சாத்தியப்படுத்தவேண்டும்

வளர்ந்த நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் இதைச் சட்ட ரீதியாக மட்டும் அனுகிவிடமுடியாது. இங்கு நெடுங்காலமாக நிலவிவரும் பழமைவாதம் நிறைந்த சமூக விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பதின்பருவ குழந்தைகளுக்குக் கல்வியறிவைக் கூடுதலாக்குவதற்கான திட்டமிடல்கள் அவசியமாகிறது. சிறுவயதில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளையும், அவர்கள் திருமண வாழ்வில் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன ரீதியான தாக்குதல்கள் சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. பெரியவர்கள் மத்தியில் நிலவும் திருமணம் குறித்த பழைய மனப்பாங்கை மாற்றுவது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.

பெண் குழந்தைகளை பாரமாகவும், வயிற்றில் கட்டிய நெருப்பு போலவும் சிந்திக்க வைக்கும் நமது சமூக நோயையும் சரி செய்யவேண்டியுள்ளது. இப்படியான ஒரு பரந்துபட்ட பார்வையைக் கொண்ட திட்டமிடல்களோடு திருமண வயது குறித்த சட்டங்களை அமலாக்கினால் மட்டுமே அது பயனளிக்கும். பெண்ணின் மண வயதை சட்டரீதியாக 21 என்று உயர்த்துவது பாராட்டுதலுக்குரிய விஷயம் என்ற போதும் அதைச் சட்ட ரீதியாக மட்டும் அதன் அமலாக்கத்தை வைத்துக்கொள்ளாமல் ஒரு விரிந்த கண்ணோட்டத்தோடு அதை செயல்படுத்தினால் மட்டுமே அது நடைமுறைச் சாத்தியமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x