Published : 11 Jun 2020 07:39 PM
Last Updated : 11 Jun 2020 07:39 PM

அறிகுறி இல்லாமல் கரோனா வைரஸ் 80 சதவீதம் பேருக்குப் பரவல்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கரோனா வைரஸ் தொற்று அறிகுறி இல்லாமல் 80 சதவீதம் பேருக்கு ஏற்படுகிறது. இவர்களால் மற்றவர்களுக்கும் அது பரவுகிறது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவையில் முதல் கரோனா தொற்று கடந்த மார்ச் 19-ம் தேதி அன்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து இங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கோவிட்- 19 கரோனா சிகிச்சைக்கான பிரத்யேக மருத்துவமனையாக மாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசு.

அதன்படி, இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகளும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150படுக்கை வசதிகளும் இதற்காக பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 8 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 109 படுக்கைவசதிகள், பொள்ளாச்சி தலைமை மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகள், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 29 படுக்கை வசதிகள், அன்னூர் அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதிகள், தனியார் மருத்துவமனைகளில் 1246 படுக்கை வசதிகள் என மொத்தம் 2094 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

387 செயற்கை சுவாசக் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளிலும், கரோனா வைரஸ் தடுப்புக்காக பிரத்யேகமாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இஎஸ்ஐ மருத்துவமனையில், 149 மருத்துவர்கள், 112 செவிலியர்கள் மற்றும் 621 இதர பணியாளர்கள் என மொத்தம் 882 நபர்கள் மூன்று குழுக்களுக்காக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் இருந்து வருகை தந்தவர்களுக்கு விமான நிலையம், சோதனைச்சாவடிகளில் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுடன் தொடர்புடையவர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான சிசிக்சைகள் வழங்கப்பட்டு முழுவதும் குணமடைந்ததுடன், புதிய தொற்றுகள் ஏதும் உருவாகாத வகையில் கண்காணிப்புப் பணிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக கோவை மாற்றம் பெற்றது. இந்நிலையில் கடந்த 1-ம் தேதி அன்று வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து திரும்பியவர்களில் சிலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது மண்டலங்களுக்குள் பொதுப் போக்குவரத்திற்கு குறிப்பிட்ட விதிகளுடன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதோடு மாவட்டத்திற்குள் அனுமதி பெற்று வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தருகின்றவர்களைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 23,486 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று நகராட்சி நிர்வாகம் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் வந்த, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.

இங்கு நடக்கும் சிகிச்சை முறைகள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

‘‘இந்த இஎஸ்ஐ மருத்துவமனைில் கோவை மட்டுமல்லாது நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் காரணமாக 280 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் பிறந்து 3 நாட்கள் ஆன குழந்தை முதல் 87 வயதான முதியவர் உள்ளிட்ட கரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்து குணமடைந்துள்ளனார். வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து விமானங்கள் மூலமாகவும், வருபவர்களுக்கு விமான நிலையங்களிலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ரயில் மற்றும் வாகனங்கள மூலமாக வருபவர்கள் சோதனைச்சாவடிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கரோனா அறிகுறியுள்ளவர்கள் 14 நாட்கள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தனிமைப்படுத்தபடுகிறார்கள். அறிகுறி இல்லாமல் 80 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இவர்களால் கரோனா வைரஸ் தொற்றை மற்றவர்களுக்கு பரவுகிறது. 20 சதவீதம் பேருக்குதான் காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்; அதிகமாக இறக்கின்றனர். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களில் இறப்பு 70 சதவீதமாகவும், பெண்களில் இறப்பு விகிதம் 30 சதவீதமாகவும் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தனிமனிதனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது, கரோனா வைரஸ் தொற்றை மேலும் பரவவிடமால் தடுத்தல், நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இதுவரை சுகாதாரத்துறையில், மருத்துவர்கள் செவிலியர்கள் என மொத்தம் 9,646 பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட 2,814 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் 2 நாட்களுக்குள் பணியில் சேர்ந்து பணியாற்ற உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 145 தனியார் மருத்துவமனைகள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை மேற்கொள்ளலாம். இ.எஸ்.ஐ மருத்துவமனையில், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 43 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக சளி காய்ச்சல், தொண்டை வலி இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கரோனா தொற்றாக இருந்தால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து, தனிமைப்படுத்திப்படுகிறார்கள்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா, கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் காளிதாசு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அமைச்சருடன் ஆய்வில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x