Last Updated : 09 Jun, 2020 06:46 PM

 

Published : 09 Jun 2020 06:46 PM
Last Updated : 09 Jun 2020 06:46 PM

உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.9 லட்சம் வழங்கிய காவலர்கள்: மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

மதுரை

தமிழக காவல்துறையில் தங்களுடன் பணியில் சேர்ந்து திடீரென உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.9 லட்சம் வசூல் செய்து வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது.

மதுரை மாநகர் துப்பறியும் நாய் படை பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்த விஜயகுமார் கடந்த 23.04.2020-ல் இறந்தார். இவர் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2002-ல் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

தமிழக காவல்துறையில் 2002 பிரிவில் மொத்தம் 3050 பேர் இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டு பணிக்கு சேர்ந்தனர்.

இவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு பிரிவுகளில் தலைமை காவலர்களாகவும், சார்பு ஆய்வாளர் மற்றும் இன்ஸ்பெக்டர்களாக உள்ளனர்.
விஜயகுமார் திடீர் இறப்பு 2002 பிரிவு காவலர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இதையடுத்து விஜயகுமார் குடும்பத்துக்கு உதவ முடிவு செய்து தமிழகம் முழுவதும் 2002-ம் ஆண்டு காவலர்கள் ஒன்றிணைந்து ரூ. 9 லட்சம் நிதி திரட்டினர்.

இந்த நிதியை மதுரை சிலைமானில் வசிக்கும் விஜயகுமார் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைத்தனர். உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு சக காவலர்கள் ஒன்றிணைந்து நிதி வசூல் செய்து வழங்கியதை மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x