Published : 12 Sep 2015 10:11 AM
Last Updated : 12 Sep 2015 10:11 AM

சி.வை.தாமோதரம் பிள்ளை 10

பண்டைய சங்கத் தமிழ் இலக்கியங்களின் பாதுகாவலரும், பதிப்புத் துறை முன்னோடியுமான சி.வை.தாமோதரம் பிள்ளை (C.W.Thamotharam Pillai) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள சிறுப்பிட்டியில் (1832) பிறந்தவர். தந்தை வைரவநாதப் பிள்ளையிடமே தமிழ் பயிலத் தொடங்கியவர், உயர்நிலை இலக்கண, இலக்கியங்களை கவிராயர் முத்துக்குமாரரிடம் கற்றார்.

l அமெரிக்க மிஷன் பாடசாலை யில் ஆங்கிலம் பயின்றார். யாழ்பாணம் வட்டுக்கோட்டை பல்கலைக்கல்லூரியில் கணிதம், மெய்யியல், வானவியல், அறிவியல் கற்றார். கோப்பாய் சக்தி வித்யாசாலையில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

l ‘நீதிநெறி விளக்கம்’ நூலை 1853-ல் பதிப்பித்து வெளியிட்டார். இதன்மூலம், தமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடி என்ற பெருமை பெற்றார். புத்தகங்கள் வெளியிடுவதில் இளம் பருவத்திலேயே இவர் கொண்டிருந்த ஆர்வம்தான் தமிழ் மக்களுக்கு பல அரிய நூல்களைப் பெற்றுத் தந்தது.

l யாழ்ப்பாணம் மத்திய கல்லூரித் தலைவர் பீட்டர் பெர்ஸிவல், தமிழகத்தில் நடத்திய ‘தினவர்த்தமானி’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று, சென்னை வந்தார். சென்னை ராஜதானிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் பணிபுரிந்தார். பல ஆங்கிலேயர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். 1858-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பி.ஏ. பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.

l அரசு வரவு செலவுக் கணக்குச் சாலையில் கணக்கு ஆய்வாளராகச் சேர்ந்தார். விரைவில் துறைத் தலைமை அதிகாரியானார். 1871-ல் சட்டப் படிப்பை முடித்து, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1884-ல் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1895-ல் ‘ராவ் பகதூர்’ பட்டம் பெற்றார்.

l அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவரை, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தளவாய் பொறுப்பை ஏற்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. தமிழ் நூல்களை அச்சிடுவதில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்து, கும்பகோணம் கருப்பூரில் குடியேறினார்.

l l வழக்காடுவதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தமிழ் நூல்கள் பலவற்றை முழு மூச்சாக பதிப்பித்தார். பண்டைய தமிழ் ஏடுகளைத் தேடி, தமிழகம் முழுவதும் சுற்றினார். சேதமடைந்த ஏடுகளை மிக கவனமாகப் பிரித்து, பிரதி எடுத்துப் பதிப்பித்தார்.

l மிகவும் சிரமப்பட்டு தொல்காப்பியப் பொருளதிகாரச் சுவடிகளை தேடிக் கண்டுபிடித்தார். அதை சரிபார்த்து, அச்சிட்டு தமிழகம் முழுவதும் கிடைக்கச் செய்தார். இந்த அரிய பணியை தமிழ் அறிஞர்கள் வியந்து பாராட்டினர்.

l வீரசோழியம், திருத்தணிகைப் புராணம், கலித்தொகை, சூளாமணி, இலக்கண விளக்கம் உட்பட பல நூல்களைப் பதிப்பித்தார். கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம், வசன சூளாமணி, நட்சத்திர மாலை உட்பட பல நூல்களைப் படைத்தார்.

l தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலையான இடத்தையும், நீடித்த புகழையும் பெற்றவர். தமிழ்ச் செவ்வியல் நூற்பதிப்பு வரலாற்றில் புதிய தடத்தை உருவாக்கியவர். ‘செந்தமிழ்ச் செம்மல்’, ‘தமிழ் நூற்பதிப்புப் பணியின் தலைமகன்’ என்று பாராட்டப்பட்ட சி.வை.தாமோதரம் பிள்ளை 69-வது வயதில் (1901) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x