Published : 05 Jun 2020 11:30 AM
Last Updated : 05 Jun 2020 11:30 AM

கரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர் பாராட்டிய முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு

நேத்ரா (நடுவில்), சி.மோகன் (வலது ஓரம்)

மதுரை

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட முடித்திருத்தும் தொழிலாளி மோகன் மகள் நேத்ரா, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐநா அவையின் (United Nations Association for Development and Peace) ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக (GOODWILL AMBASSADOR FOR THE POOR) அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை அண்ணாநகர் மேலமடையில் வசிப்பவர் முடி திருத்தும் தொழிலாளி சி.மோகன். இவர் அப்பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார். அடிப்படையல் மோகன் ராமநாதபுரம் மாவட்ட பரமகுடியை சேர்ந்தவர். பிழைப்பிற்காக மதுரைக்கு கடந்த 20 ஆண்டிற்கு முன் வந்தார்.

இவரது அன்டை வீடுகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் கரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் வீட்டிற்குள் முடங்கியதால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். சாப்பிட கூட வழியில்லாமல் அவர்கள் படுகின்ற துன்பத்தைக் கண்ட மோகனின் மகள் நேத்ரா, ‘தனது படிப்பிற்காக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எடுத்து அவர்களுக்கு உதவுங்கள் அப்பா, எனது படிப்பிற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.

அதற்காக பெற்றோரிடம் அடம்பிடித்து ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்துள்ளார். ஆரம்பத்தில் தங்கிய மோகன், மகளின் மனிதநேயத்தை கண்டு நெகிழ்ந்து அவரது எதிர்கால படிப்பிற்காக வங்கியில் சேமித்து வைத்த ரூ.5 லட்சத்தை எடுத்து அந்த மக்களுக்கு அரிசி, காய்கறி, பருப்பு மற்றும் மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்தார்.

முடி திருத்தும் தொழிலாளியின் இந்த மனிதநேயத்தை பிரதமர் மோடி கடந்த மே 31-ஆம் தேதி அனைத்திந்திய வானொலியில் மங்கி கி பாத்(மனதின் குரல்) நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசியிருந்தார்.

பிரதமரின் இந்த பாராட்டால் மோகனும், அவரது மகள் நேத்ராவும் தேசிய அளவில் கவனம் ஈர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் மோகனுக்கும், அவரது மகளுக்கும் மற்றொரு ஆச்சரியமாக வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐநா அவை, முடி திருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நேத்ராவை ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவித்து டிக்ஸான் ஸ்காலர்ஷிப்-ஆக (DIXON SCHOLARSHIP) ரூ.1 லட்சத்தை பரிசுத்தொகையாகவும் வழங்கி கவுரவித்துள்ளது.

அதுமட்டுமில்லாது, நேத்திராவுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மாநாடு நடைபெறவுள்ள நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் குடிமை சார்ந்த அவைகளில் பேச வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த வாய்ப்பின் மூலமாக உலக அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் உலகத் தலைவர்களோடு ஏழை மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதற்கு மதுரையின் இந்த சிறுமி நேத்ராவுக்கு அரிய வாய்ப்பை கிடைத்துள்ளது.

கஷ்டப்பட்ட தனது அன்டை வீட்டு எளிய மக்களுக்காக உதவிய நேத்ரா, தனக்கு கிடைத்த இந்த கவுரவம் மூலம் இனி தமிழக மற்றும் இந்திய அடித்தட்டு மக்களின் குரலாய் சர்வதேச அளவில் எதிரொலிப்பதற்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

நேத்ரா தந்தை மோகன் கூறுகையில், ‘‘நாங்க இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தே செய்யவில்லை. மகளின் வற்புறுத்தலால் உதவினோம். அது கோடி நன்மையையும், மிகப்பெரிய கவுரவத்தையும் தேடி தந்துள்ளது. பிரதமரிடம் பாராட்டு பெற்ற அதிர்ச்சியில் இருந்தே நாங்கள் இன்னும் மீளவில்லை. தினமும் பாராட்டுகள், வாழ்த்துக்களால் திக்குமுக்காடிப்போய் உள்ளோம். அதற்குள் மற்றொரு கவுரவம் கிடைத்துள்ளது. நம்மிடம் இருக்கிறதோ, இல்லையோ மற்றவர்களுக்கு உதவும் குணம் இருந்தாலே எல்லா வாய்ப்புகளும் நம்மை தேடி வரும் என்பதற்கு இதுவே சாட்சி, ’’ என்றார்.

நேத்ரா கூறுகையில், ‘‘ஐஏஎஸ் படித்து ஏழை மக்களுக்கு உதவனும் என்பதே என் லட்சியம். ஆனால், அதற்கு முன்பே ஏழை மக்களுக்கு உதவ, அவர்கள் குரலாய் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவெல்லாம் நிஜமா? கனவா? என்று நினைக்கிற அளவிற்கு எதிர்பாராமல் எல்லாம் நடக்கிறது, ’’ என்றார்.

சிறுமியின் மனிதநேயத்தை வெளிப்படுத்திய ‘இந்து தமிழ்’

முடி திருத்தம் தொழிலாளி மோகன், தனது மகளின் படிப்பிற்காக சேமித்து வைத்த பணத்தில் இருந்து கஷ்டப்படும் மக்களுக்கு சத்தமில்லாமல் ‘கரோனா’ நிவாரணம் உதவி வழங்குதை அறிந்து அவரிடம் பேசி ‘இந்து தமிழ்’ திசை ஆன்லைனில் முதன் முதலாக விரிவான செய்தி வெளியிட்டு, மறுநாள் நாளிதழிலும் வெளியானது.

அதன் மூலம் மோகன், அவரது மகளின் இந்த மனிதநேயம் வெளிச்சத்திற்கு வந்தது. நடிகர் பார்த்திபன் அவர்களின் சேவையை பாராட்டி நேத்ராவின் படிப்பு செலவை ஏற்றார்.

இந்த நிகழ்வுகள் பிரதமர் மோடியின் பார்வைக்கு சென்று அவரால் மோகன் பாராட்டப்பட்டார். தற்போது ஐ.நா.அவையின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x