Last Updated : 31 May, 2020 11:07 AM

 

Published : 31 May 2020 11:07 AM
Last Updated : 31 May 2020 11:07 AM

’வெயிட்’டைக் குறைக்க ஈஸியான எலுமிச்சை நீர்! 

நம் வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் நம்முடன் இருந்து நம்மை அரணெனக் காக்கும் வல்லமை எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சையில் உள்ள நன்மைகள் ஏராளம்.
எலுமிச்சையை நாம் ஊறுகாய் போலத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது எலுமிச்சையில் ஊறுகாய் போட்டு, ஜாடியில் அடைத்து வைத்துப் பயன்படுத்திவந்தோம். அதேபோல், கோடை காலம் வந்துவிட்டால், எலுமிச்சை சாறில், உப்பு அல்லது சர்க்கரை கலந்து ஜூஸ் குடித்து வந்தோம்.


கடந்த பத்துவருடங்களுக்கு முன்பு வரை, டீக்கடைகளுக்குச் செல்பவர்கள், டீ குடிப்பார்கள். காபி குடிப்பார்கள். ராகிமால்ட், ஹார்லிக்ஸ் மாதிரியான திரவம் இருக்கும். ஆனால், அதையடுத்த வருடங்களில் இருந்து, இவற்றுடன் இன்னொன்றையும் அருந்துவோர் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அது... லெமன் டீ.
‘வெயிட் போட்டுக்கிட்டே வருது. அதான், பாலெல்லாம் அவாய்ட் பண்ணிட்டேன். லெமன் டீக்கு மாறிட்டேன்’ என்று சொல்வதை சகஜமாகக் கேட்கலாம்.
உடல் பருமனைக் குறைக்க, இந்த எலுமிச்சையை இன்னொரு விதமாகவும் பயன்படுத்தலாம் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.


எலுமிச்சை வேக வைத்த நீரை காலையில் எழுந்ததும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!


அதிகாலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கலந்த எலுமிச்சை ஜூஸ், உடலின் கொழுப்புச்சதைகளைக் கரைத்துவிடும் என்கிறார்கள்.

எலுமிச்சையின் சாறு மட்டுமே சிறப்புக்கு உரியதில்லை. எலுமிச்சையின் தோலும் கூட பல நன்மைகளை உள்ளடக்கியிருக்கின்றன. எலுமிச்சைத் தோலிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. இதைத் தெரிந்துகொண்டால், இனிமேல் எலுமிச்சைத் தோலை, தூக்கிவீசமாட்டோம்.

எலுமிச்சை நீரை தயாரிக்கும்போது, அதன் சாற்றினை எடுத்து மட்டுமே ஜூஸ் தயாரிக்காமல், முழு எலுமிச்சையையும் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அந்த நீரை அதிகாலையில் டீ, காபிக்கு பதிலாகப் பருகுங்கள்.
எலுமிச்சை தண்ணீரின் செய்முறை என்ன? இதன் பலன்கள் என்னென்ன?


தேவையான பொருட்கள்:

எலுமிச்சை – 6
தண்ணீர் – 1/2 லிட்டர்
தேன் – தேவையான அளவு

என்ன செய்யவேண்டும்?

முதலில் எலுமிச்சைகளை பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரை லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, அந்த நீரை அடுப்பில் மூன்று நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிடுங்கள். பின்னர், அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு, பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை குளிரவையுங்கள்.

இதன் பிறகு, அந்த நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு சிறிய டம்ளரில் அந்த நீரை ஊற்றி, அதில் சிறிது தேன் கலந்து பருகுங்கள். மீதமுள்ள எலுமிச்சை நீரை, ஒரு பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்து மற்ற வேளைகளில் அருந்துங்கள்.

இந்த எலுமிச்சை நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகி வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலமானது வலிமையடையும். நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். எந்த நோய்த்தோற்றும் அண்டாது.

மேலும், மிகுந்த சோர்வுக்கு உள்ளாவோர், தினமும் காலையில் எழுந்ததும் இந்த எலுமிச்சை நீரை வெறும் வயிற்றில் பருகுங்கள். இதனால் நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் திகழ்வீர்கள்.

செரிமானப் பிரச்சினைகளையும் கோளாறுகளையும் சரிசெய்யும் சக்தியும் இந்த எலுமிச்சை நீருக்கு உண்டு.

உடலைச் சுத்தமாக்க குளியல் எப்படியோ அப்படித்தான் இந்த எலுமிச்சை நீரும். குளியல் புற உடலை சுத்தம் பண்ணும். எலுமிச்சை நீரானது, அக உடலை சுத்தம் பண்ணும் வல்லமை கொண்டது. தினமும் காலையில் எலுமிச்சை நீரைக் குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாக இருக்கும்.


மிக முக்கியமாக, உடல் பருமன் என்பது இன்றைக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. நடப்பதில்லை; ஓடுவதில்லை; குனிந்து நிமிர்வதில்லை. படிகள் ஏறுவது குறைந்துவிட்டது. இரவில் கண்விழித்து வேலை செய்வது அதிகரித்துவிட்டது. துரித உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம். எளிதில் செரிக்காத உணவுகள், கொழுப்புச் சத்து கொண்ட உணவுகள், வண்ணம் பூசிய உணவுகள் முதலானவற்றால், உடல் பருமன் அதிகரித்தபடி இருக்கிறது.


போதாக்குறைக்கு, அதிகம் சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் எனும் தப்பான அபிப்ராயமும் பலரிடம் இருக்கிறது. இதனால் அதிகம் சாப்பிடாததாலும் நல்ல சத்தான உணவை எடுத்துக் கொள்ளாததாலும் உடல் சோர்வுக்கு ஆளாகிறார்கள் பலரும்!


உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, இது அற்புதமான பானம். காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதற்கு பதிலாக, இந்த எலுமிச்சை நீரைப் பருகி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். உடலின் தேவையற்ற கொழுப்புச்சதைகளைக் கரைக்கும் வல்லமை எலுமிச்சை நீருக்கு உண்டு.

அடுத்து, மன இறுக்கம். இன்றைக்கு டிப்ரஷன், டென்ஷன் என்ற வார்த்தைகளை அதிகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் மன இறுக்கம், மனத் தளர்ச்சி, டென்ஷன், எரிச்சல், அயர்ச்சி என்றிருப்பவகள், இந்த எலுமிச்சை நீரை தினமும் பருகி வர... நம்முடைய மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் நம்மை உணர வைக்கும்.


இந்த எலுமிச்சை நீரை மீண்டும் சூடேற்றிப் பருகலாமா என்ற சந்தேகம் எழும். நீங்கள் சூடுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் மிகவும் குளிர்ச்சியான நிலையில் பருகாதீர்கள். ஒருவேளை வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்து, பிறகு பருகுங்கள் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x