Last Updated : 29 May, 2020 04:34 PM

 

Published : 29 May 2020 04:34 PM
Last Updated : 29 May 2020 04:34 PM

’’இன்று வரை எனக்கு சோறு போடுறது ‘முதல் மரியாதை பொன்னாத்தாதான்!’’ - வடிவுக்கரசி நெகிழ்ச்சி பேட்டி 

’’அந்த சந்துல சிவாஜி சார் கொப்புளிச்சுதான் தண்ணியைத் துப்பிருப்பாரு. அந்த சந்துல ராதா கேரக்டர் வரும். அப்ப நான் வெளியே போய், ‘எவடி அவ, உரசிக்கிறதுக்கு பொன்னாத்தா வீட்டு சுவருதான் வசதியா இருக்குன்னா, வாங்கடி...வாங்க’ன்னு கத்திட்டு ஓடணும். அப்போ விளக்குமாத்தை எடுத்துக்கிட்டு ஓடிப்போய் பிடிச்சிருவேன். அப்போ ஓடுனதுக்கு, நான் தண் தண் தண்னு நடப்பேனே... அதுதான் கைகொடுத்துச்சு. டைரக்டர் சார், ஜீன்ஸ் பேண்ட்டைப் பிடிச்சிக்கிட்டு நடந்துகாமிப்பாரு. ‘இப்படி நடக்கணும்’னு சொன்னாரு. ஒவ்வொரு ஃப்ரேமும் நடிச்சுக் காமிச்சாரு பாரதிராஜா சார்.


இன்னிக்கி, நேட்டிவிட்டியோட யாராவது கதை சொன்னாங்கன்னா, டக்குன்னு அந்தக் கேரக்டரைப் பிக்கப் பண்ணிடுறேன்னா... அதுக்குக் காரணம்... ’முதல் மரியாதை’தான். பாரதிராஜா சார்தான்’’ என்று நெகிழ்ந்து சொல்கிறார் வடிவுக்கரசி.


’இந்து தமிழ் திசை’யின் ‘RewindWithRamji’ நிகழ்ச்சிக்காக, வடிவுக்கரசி அளித்த நீண்டதான வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :


’’பாரதிராஜா சாரை நான் மறக்கவே முடியாது. காஸ்ட்யூம் முதற்கொண்டு அத்தனை கவனமா பண்ணினார். பிளவுஸை இப்படித்தான் கட்டிக்கணும், குங்குமத்தை எங்க கிராமத்துப் பொம்பளைங்க, அப்படி எடுத்து பட்டுன்னு வைச்சுக்குவாங்கன்னெல்லாம் சொல்லிக் கொடுத்தாரு. இதெல்லாம் இப்போ சொல்றேன்.


ஆனா, படத்துல நான் நடிச்ச எந்தக் காட்சிலயும் ‘அட பிரமாதமான கேரக்டராச்சே’னு நான் நினைச்சதே இல்ல. ‘தங்கப்பதக்கம்’ கே.ஆர்.விஜயாம்மா மாதிரி இதுல நடிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னு நினைச்சோம்; இப்படி ஆகிருச்சே’ங்கற நெனப்புதான் படம் முடியறவரைக்கும் ஓடிக்கிட்டே இருந்துச்சு.


படம் பாக்கும்போதுதான் உணர்ந்தேன். ‘அட... நல்லாதானே இருக்கு இந்தக் கேரக்டரு. கொஞ்சம் கவனம் எடுத்து நடிச்சிருக்கலாமே’னு தோணுச்சு. பொட்டுலாம் பெருசா வைச்சிட்டு, ஸ்பாட்டுக்கு வந்ததும், சிவாஜி அப்பா என்னைப் பாத்துட்டு, ‘எங்க ஆத்தாவைப் பாக்கற மாதிரியே இருக்கு. இப்படித்தான் எங்க ஆத்தா பொட்டு வைச்சுக்கும்’ன்னு சொன்னாரு.


அதேபோல படத்துல அவர் என்னை எட்டி உதைக்கிற மாதிரி சீன். எல்லாரும் சொல்லுவாங்க... சிவாஜி சார் அடிக்கற சீன்ல, நிஜமாவே அடிச்சிருவாருன்னு சொன்னாங்க. ஆனா அப்படிலாம் எதுவுமில்ல. அப்படிலாம் கிடையவே கிடையாது. சிவாஜி சார் மிகப்பெரிய நடிகரில்லையா. ’நான் வருவேன், நீ விழணும்’னாரு. ’நான் காலை தூக்கிட்டு ஒரு எத்து எத்துறதுக்கு வருவேன். நீ விழுந்துரு’ன்னு சொன்னாரு. ’நீ நடிக்கணும் ஒழுங்கா’ன்னு சொன்னாரு.


அவர் எத்தாம, நாம எப்படி விழுறதுன்னு ஒரே யோசனை எனக்கு. அப்புறம் அவர் சொன்னபடியே செஞ்சேன். ‘ஆத்தே’னு விழுந்தேன். அதேமாதிரி, கோழிலாம் மூடி வைச்சிருக்கிற சீன் மறக்கவே முடியாது. ’ஏம்மா, கோழிலாம் இப்போ பறக்கும், பிடிச்சு வைக்கணும். அதான் சீன்’ அப்படின்னு சொன்னாங்க. ‘என்னது, பறக்கும், பிடிக்கணுமா?’ன்னு கேட்டேன். ’எப்படி பிடிக்கமுடியும்?’னு கேட்டேன். அதைச் சொல்லிக்கிட்டே பிடின்னு சொன்னாரு.


ஆக்‌ஷன்னு சொன்னதுமே திறந்து விட்ருவாங்க. ‘சார், பறக்குது சார், பிடிக்க முடியல சார். புடிக்க முடியல சார்’னு இப்படித்தான் சொல்லிக்கிட்டே, அந்த சீன் முழுக்க நடிச்சேன். அப்படித்தான் ஷூட்டிங்ல பேசினேன். அப்புறம் டப்பிங்ல வந்து, ’அடியாத்தீ... இந்த மனுசனுக்குக் கிறுக்குகிறுக்கு புடிச்சிருச்சா? பஞ்சாரத்துல இருந்த அம்புட்டு கோழியையும் தொறந்து விட்டுட்டாரே’னு இங்கே வந்து டப்பிங்ல பேசினேன். இங்கே வந்துதான் டப்பிங் பேசும்போதுதான் என்னை அப்படியே மாத்தினாரு பாரதிராஜா சார்.


என் திரையுலக வாழ்க்கைல, ‘முதல் மரியாதை’க்கு முக்கியமான இடம் உண்டு. நிறைய பேர் சொல்லுவாங்க. தம்பி ராமையா சார் கூட சொல்லுவாரு... கதை டிஸ்கஷன்ல பேசிட்டிருக்கும்போது, ‘முதல் மரியாதை வடிவுக்கரசி’ மாதிரி ஒரு கேரக்டர்’னுதான் சொல்லுவாங்களாம். இப்ப கூட டைரக்டரோட பிறந்தநாளன்னிக்கி பேசும்போது கூட, ’இன்னிக்கி வரைக்கும் உன்னோட ‘முதல் மரியாதை’ இடத்தையும் ‘என்னுயிர்த்தோழன்’ இடத்தையும் யாருமே நிரப்பலை வடிவு. நிரப்பவும் முடியாது’ன்னு சொன்னாரு.


‘நானும் அதுக்குப் பிறகு யார் யாரையோ வைச்சுப் பண்ணிட்டேன். உன் அளவுக்கு வரலை’ன்னு சொன்னாரு. ‘அதெல்லாம் உங்க மேல எனக்கு இருந்த கோபத்தால வந்த ஃபோர்ஸ் சார். அதனாலதான் சார், அந்தக் கேரக்டர்ல நான் நடிக்காம, வாழ்ந்திருந்தேன்’ன்னு சொன்னேன்.


இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு சாப்பாடு போடுறது ‘முதல் மரியாதை’தான். பாத்தீங்கன்னா... ‘முதல் மரியாதை’ல கிராமத்து ஸ்லாங். ‘என்னுயிர்த்தோழன்’ல அப்படியே வேற ஸ்லாங். எம்மேல நம்பிக்கை வைச்சுக் கொடுத்தாரு பாரதிராஜா சார்.


இதுக்குப் பிறகு, சிவாஜி சார் கூட நடிச்சிட்டேங்கறதால, ‘படிக்காதவன்’ படத்துல திரும்பவும் சிவாஜி சாருக்கு ஜோடி. அதேபோல ரஃப் கேரக்டர். ஆனா சிட்டில இருக்கிற லேடி. இந்த இடத்துலதான் ‘ரஃப்’பான கேரக்டர்னு முத்திரை குத்தினாங்க. ‘மெட்டி’ பாத்தப்போ, கிளிசரின் கேரக்டராக் கொடுத்தாங்க. சுகுமாரி அம்மா வில்லியா இருப்பாங்க. நான் அழுதுக்கிட்டே இருக்கிற மருமகளா இருப்பேன். இப்படித்தான் கொடுத்தாங்க. டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட். ‘ஆயிரம் வாசல் இதயம்’ல மூணு ஹீரோயின். ராதிகா, ரோஜாரமணி, நான்.


விஜயசாந்தியும் நானும் டபுள் ஹீரோயினா பண்ணினோம். அப்புறம், விஜயசாந்திக்கு அம்மாவா, அத்தையா பண்ணினேன். இப்படிலாம் ஒரு ரூட் ஒண்ணு ஒருகட்டம் வரை இருந்துச்சு’’ என்று சிரித்துக்கொண்டே விவரித்தார் வடிவுக்கரசி.


- நினைவுகள் தொடரும்


-வடிவுக்கரசியின் முழுமையான பேட்டியைக் காண :

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x