Last Updated : 26 May, 2020 11:32 AM

 

Published : 26 May 2020 11:32 AM
Last Updated : 26 May 2020 11:32 AM

ஒரு பக்கம் காத்திருப்பு; இன்னொரு பக்கம் சேவை!

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய இட ஒதுக்கீட்டை அரசு ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டில் காவலர் பணிக்கான தேர்வைப் போராடி எழுதிய மூன்று திருநங்கைகளுக்கு, “உடல் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்” என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், அவர்கள் உடல் தகுதித் தேர்வில் பங்கெடுப்பதற்கான தமிழக அரசின் உத்தரவுக்காகக் காத்திருக்கும் நிலையே தொடர்கிறது. அந்த மூன்று திருநங்கைகளில் ஒருவர் தீபிகா.

பெரும் போராட்டத்துக்குப் பின் காவலர் பணிக்கான தேர்வை எழுதிவிட்டு, உடல் தகுதித் தேர்வுக்காக ஒரு பக்கம் காத்திருந்தாலும், கரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டிருக்கும் திருநங்கைகளுக்கு சகோதரன் தன்னார்வ அமைப்புடன் இணைந்து தன்னார்வத்துடன் 50 நாட்களாக தமிழகம் முழுவதும் நலப் பணிகளைச் செய்துவருகிறார் திருநங்கை தீபிகா.

திருநெல்வேலியை பூர்விகமாகக் கொண்டவர் திருநங்கை தீபிகா. இவருக்குச் சிறுவயதிலிருந்தே காவலராக வேண்டும் என்பது குறிக்கோள். அதற்காக 2017லிருந்தே தன்னுடைய முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய 23-வது வயதில் திருநங்கையாக வெளிப்பட்ட தீபிகா, 2018-ல் எழுதிய காவலர் தேர்விலும் இவர் 40 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். ஆனால் கட் ஆஃப் 41 மதிப்பெண்கள் என அறிவிக்கப்பட்டதால் தேர்வாக முடியவில்லை.

இதுகுறித்து தீபிகா நம்மிடம் பேசியதிலிருந்து...

“காவல் துறை சீருடைப் பணியாளர் தேர்வில் பங்கெடுக்க வயது தளர்வு பெண்களுக்கு 26 வயது. ஆண்களுக்கு 26 வயது. ஆண்களில் எக்ஸ் சர்வீஸ்மேன்களுக்கு 46 வயது வரை தேர்வு எழுத அனுமதி கொடுக்கிறார்கள். திருநங்கைகளுக்கு மட்டும் 26 வயதுக்கு மேல் தேர்வு எழுதமுடியாது என்று விதியைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் கொடுத்து வயது தளர்வில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். நீதிமன்றமும் எனக்கு அனுமதி அளித்தது.

திருநங்கைகள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை எம்.பி.சி. பிரிவில் சேர்த்து விடுகின்றனர். இந்தப் பிரிவுக்கு அதிகபட்ச கட் ஆஃப் 38 மதிப்பெண்கள். 2019-ல் எழுதிய தேர்வில் நான் 35 மார்க் எடுத்திருந்தேன். 3 மார்க் குறைவு.

வயதில் தளர்வு இருப்பதைப் போலவே மதிப்பெண்ணிலும் விதவைப் பெண்களுக்கு 29, எக்ஸ் சர்வீஸ்மென் குழந்தைகளுக்கு 26 மதிப்பெண்கள் என கட் ஆஃப் நிர்ணயித்திருக்கின்றனர். எங்களுக்கு வயதில் தளர்வு செய்து தேர்வுக்கு அனுமதி அளித்தது போல் மதிப்பெண்ணிலும் தளர்வு செய்து தேர்வு எழுதிய மூன்று திருநங்கைகளுக்கு உடல் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினோம். உடல் தகுதித் தேர்வுக்கு 3 திருநங்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று நவம்பர் 14-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி மாதம் 20 வரை இத்தகைய உடல் தகுதித் தேர்வு நடந்தும் எனக்கு உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பு வரவில்லை. இந்தக் காலகட்டத்தில் உடல் தகுதித் தேர்வு முடித்த ஏறக்குறைய 8 ஆயிரம் பேருக்கு பணி உத்தரவே கிடைத்திருக்கும் பட்சத்தில், திருநங்கைகளாகிய நாங்கள் காவலர் ஆகும் லட்சியத்தோடு தவித்து வருகிறோம்.

கரோனா ஊரடங்குக்குப் பிறகாவது, எங்களுக்கு உடல் தகுதித் தேர்வை நடத்தி எங்களுக்கு காவலர் பணி கிடைக்க தமிழக அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

“என்னுடைய குறிக்கோள் காவலர் பணியில் சேர வேண்டும் என்பதுதான். இப்போது கூட டிஜிபி, ஏடிஜிபி, தமிழக முதல்வர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் எல்லாருக்கும் மனு கொடுத்திருக்கிறேன்” என்கிறார் நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூட்டைகளை தோளில் அநாயசமாக சுமந்தபடி தீபிகா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x