Published : 24 May 2020 07:13 PM
Last Updated : 24 May 2020 07:13 PM

1,400 செடிகளை வளர்க்கும் 20 வயது இளைஞர்

இங்கிலாந்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞர் ஜோ பாக்லி தன்னுடைய வீட்டில் மொத்தம் 1,400 செடிகளை வளர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தோட்டக்கலை மையத்தில் பணிபுரியும் ஜோ பாக்லி தான் வாசிக்கும் வீட்டின் நுழைவாயில் தொடங்கி ஹால், சமையலறை, மேல்மாடம், படுக்கை அறை, மாடிப்படி, கழிவறை, குளியல் அறை என காணுமிடமெல்லாம் பல்வேறு வகையான தாவரச் செடிகளுடன் வசித்து வருகிறார். இதன்காரணமாக இங்கிலாந்து வாசிகள் இவரை ‘Jungle Boy’என வேடிக்கையாக அழைக்கிறார்கள்.

பாட்டி தந்த பரிசு

ஜோவின் 13-வது பிறந்த நாளுக்கு அவருடைய பாட்டி ஆப்பிரிக்க செடி ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். அப்போதிலிருந்து ஜோ செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக வெப்பமண்டலத் தாவரங்கள், பூச்செடிகள், கற்றாழை, கொடி வகைள் எனப் பலவிதமான செடிகளை வளர்த்துவருகிறார் ஜோ. தன்னுடைய இருபது வயதில் பெற்றோருடன் அல்லாமல் தனியாக வசிக்கத் தொடங்கிய ஜோ புதிய வீட்டில் கட்டில், பீரோ, உணவு மேசைகளுடன் குடியேறுவதற்குப் பதிலாக நூற்றுக்கணக்கான செடிகளுடன் குடியேறியுள்ளார். செடிகளை வளர்ப்பதற்கு மொத்தம் 477 சுடுமணல் தொட்டிகளை வைத்துள்ளார். அதேபோல் கண்ணாடித் தொட்டி, கான்கிரீட் தொட்டி, மக்கும் பைகளில் செய்யப்பட்ட தொட்டி, பிரம்புத் தொட்டி, சணல் தொட்டி என பலவிதமான தொட்டிகளையும் பயன்படுத்திவருகிறார். ஜோவின் வீட்டில் காலடி வைக்கும் இடமெல்லாம் ஒவ்வொரு வகையான செடிகள் உள்ளன. அதேபோல் புதிய முதல்தரமான செடிகளை வாங்காமல் பராமரிப்பின்றி உள்ள இரண்டாம் தர செடிகளைத்தான் ஜோ வாங்குகிறார். இதனால் குறைந்த விலைக்குச் செடிகள் கிடைப்பதுடன் பராமரிப்பின்றி உள்ள செடிகளுக்கு புத்துயிர் அளிக்க முடிகிறது என்கிறார் அவர்.

தனிமையைப் போக்கும் செடிகள்

இங்கிலாந்தில் மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதுவும் கரோனா ஊரடங்கு நேரத்தில் தனியாக வசிப்பவர்கள் பலர் ஜோவிடம் செடிகள் பராமரிப்பு, வளர்ப்பு குறித்து ஆலோசனைப் பெற்றுவருகிறார்கள். ஜோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் 38,924 நபர்கள் பின் தொடர்கிறார்கள். சமூக வலைதளம் வாயிலாகவும் பிபிசி வானொலியிலும் தாவரங்கள் வளர்ப்பு குறித்து ஆலோசனை அளித்துவருகிறார் ஜோ. இதற்காக அவர் எந்தக் கட்டணத்தையும் பெறுவதில்லை.

கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள இங்கிலாந்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய வீடுகளில் நேரத்தைச் செலவழிக்கும் அந்நாட்டு மக்கள் செடிகள் வளர்ப்பு முறை குறித்து ஜோவிடம் ஆலோசனை பெற்றுவருகிறார்கள். நாளொன்றுக்கு ஐம்பது புதிய நபர்கள் ஜோவிடம் செடி வளர்ப்பு குறித்து குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். “ஊரடங்கில் தனிமையில் உள்ளவர்களுக்கு இந்தச் செடி வளர்ப்பு முறை மனதை ஆசுவாசப்படுத்த உதவுகிறது. தனிமையில் இருப்பதைவிட நாம் வசிக்கும் சிறு இடத்தில் உயிருள்ள செடிகளை வளர்ப்பது மனதிற்கு இயல்பான மகிழ்ச்சியை உருவாக்கும்” என்கிறார் ஜோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x