Last Updated : 21 May, 2020 05:40 PM

 

Published : 21 May 2020 05:40 PM
Last Updated : 21 May 2020 05:40 PM

’’சூர்யாவும் கார்த்தியும் சிவகுமாருக்கு கடவுள் கொடுத்த பரிசு !’’ - நடிகர் சிவசந்திரன் நெகிழ்ச்சிப் பேட்டி

’’எல்லாத்தையும் தாண்டின வயது. எனக்குப் பிடிச்சிருந்துச்சு. லட்சுமிக்கும் பிடிச்சிருந்துச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இதுல எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை. நான் எதிர்பார்த்து கல்யாணம் பண்ணிருந்தா, எங்க வாழ்க்கை ஒருவருஷத்துக்குள்ளே முடிஞ்சிருக்கும். அதுவரைக்குக் கூட ஓடியிருக்காது.லட்சுமியும் எங்கிட்ட எதையும் எதிர்பார்க்கலை’’ என்று யதார்த்தப் பேச்சால் நம்மைக் கவர்ந்தார் நடிகர் சிவசந்திரன்.


‘இன்னொரு விஷயம். இதுதான் நான் தருகிற முதல் வீடியோ பேட்டி’ என்றும் தெரிவித்தார்.


‘இந்து தமிழ் திசை’யின் ‘RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, நடிகர் சிவசந்திரன் நீண்டதான பேட்டியளித்தார்.


சிவசந்திரன் வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :


’’எங்களுக்குள்ளே இருக்கிற சந்தோஷமே... தொழிலையும் வாழ்க்கையையும் சேர்க்கறதே இல்ல. அதனாலதான் நாங்க அமைதியாவும் ஆனந்தமாவும் இருக்கோம். தேவையில்லாம, பார்ட்டிக்குப் போறதில்ல. அங்கே எதுக்குப் போகணும்? அங்கே போனா, யாராவது, ஏதாவது தேவையே இல்லாமப் பேசுவாங்க. அந்த விஷயங்கள்ல கலந்துக்கறது இல்லை.மிஞ்சிப்போனா எக்ஸர்சைஸ் பண்றதுக்குப் போவோம்; வருவோம். அவ்ளோதான்.


புத்தகங்கள் படிப்போம். நல்ல படங்கள் வந்திருந்தாப் போவோம். எங்களுடையை வாழ்க்கை மெத்தட் இப்படித்தான். இதை நாங்க அமைச்சிக்கிட்டோம். 32 வருஷமா இப்படித்தான் ரொம்ப ரிலாக்ஸா வாழ்ந்துட்டிருக்கோம். ஆனந்தமா இருக்கோம்.


எங்கிட்ட பத்து, இருபது, முப்பது கோடின்னு இருந்தாக்க, ‘சரி, எப்படிச் செலவு பண்றதுன்னு தெரியாம இருக்கோம். ஒரு படமெடுத்துப் பாப்போம். ஓடுனா ஓடுது, இல்லாட்டிப் பரவாயில்ல’ன்னு நினைக்கிறதுக்கோ செயல்படுறதுக்கோ நம்மகிட்ட பணம் இல்ல. ஏதோ... நமக்குன்னு ஒரு வருமானம் வருது. நம்ம நிம்மதியா, நிறைவா, ஜாக்கிரதையா வாழலாம்.

அதேசமயம், இன்றைய சூழல் கொஞ்சம் மாறியிருக்கு. வாசல்கள் விசாலமாகியிருக்கு. அவுட்லெட்ஸ் நிறையவே இருக்கு. வெப்மூவி அப்படி இப்படின்னு நிறையவே வழிகள் இருக்கறதால, பண்ணுவோமேன்னு நினைச்சிக்கிட்டிருக்கேன். மைண்ட் அதே ஃப்ரஷ்ஷாத்தான் இருக்கு. டல்லாயிடலை. சிந்தனைகளும் செயல்பாடுகளும் வேகமா, ஆக்டீவாத்தான் இருக்கு. முக்கியமா, இன்னிக்கி வர்ற படங்களைப் பாக்கும்போது, நிறையவே நம்பிக்கையும் கான்ஃபிடண்டும் வருது.


ஸ்பெஷல் எபெக்ட்ஸை நம்பியே நிறைய படங்கள் வந்துக்கிட்டிருக்கு. இதெல்லாம் அப்படியே டக்குன்னு போயிரும்ங்கறதுதான் என்னோட கணிப்பா இருக்கு. அழகான, மெல்லிய அமைப்போட கதைகள் வரத்தான் போகுது. அந்த மாதிரி படங்களுக்குத்தான் இனி எதிர்காலம்.


ஏன்னா... பாக்கறதுக்கு அவனவனுக்கு டைம் இல்லை.இந்தக் கூத்து, பாட்டு, குடிகார டான்ஸெல்லாம் நிக்கணும் முதல்ல! ’கைதி’ மாதிரி படம், வித்தியாசமா எடுத்திருக்காங்க இல்லையா... அந்த மாதிரி படங்கள்தான் ஓடப்போகுது.

சரி... மனைவி லட்சுமிக்கே திரும்பவும் வரேன்.


என்னுடைய மனைவி லட்சுமி, மகத்தான நடிகைங்கறதால முதல் மரியாதை. ஒரு மனைவியா, மிக அருமையா தன்னுடைய கடமையைச் செஞ்சிட்டிருக்காங்க. அதுக்கு இன்னொரு சல்யூட். ரெண்டுபேரும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கோம்.


எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கு. பேரு சம்யுக்தா. காலேஜ் ஃபைனல் இயர் முடிக்கப்போறாங்க.அடுத்தாப்ல, இங்கே படிக்கப்போறாங்களா, வெளிநாட்ல படிக்கப் போறாங்களான்னு முடிவு பண்ணனும். ரொம்ப நல்லவிதமாவே அவளை வளர்த்துக் கொண்டுவந்திருக்கோம். எங்களை இன்னும் இன்னுமா பிணைச்சிருக்கறதும் இன்னும் இன்னுமா அன்பை ததும்பத் ததும்பக் கொடுக்கறதும் சம்யுக்தாங்கற உறவுதான்! மூணுபேரும் நிம்மதியா அற்புதமா வாழ்ந்துட்டிருக்கோம். எங்களுக்கு எந்த கன்ஃபியூஷனும் கிடையாது.


‘அய்யய்யோ... அவன்கிட்ட பணம் வாங்கிருக்கோமே’, ‘அந்தப் படம் பண்றதுக்காக பத்துக்கோடி வாங்கிருக்கோமே... எப்படி அடைக்கிறது?’ன்னு எதுவுமே இல்லை. எங்களுக்கு எந்தக் கொடுக்கல்வாங்கலும் இல்லை. யார்கிட்டயும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.


இவ்ளோ பேரைச் சொல்லிருக்கேன். ரஜினி உட்பட பலபேரைச் சொல்லிருக்கேன். இவங்ககிட்டலாம் கால்ஷீட் கொடுங்கன்னு உதவி கேட்டாத்தானே எனக்கு பயம் வரும். ஒரு தயக்கம் இருக்கும். இங்கே, கொடுத்தா நல்லவன். கொடுக்கலையா கெட்டவன். அப்படித்தான் இந்த உலகம் நினைக்குது. அவர் கொடுக்கவும் வேணாம்; நான் தப்பாச் சொல்லவும் வேணாம். உள்ளதை உள்ளபடி சொல்றதுதான் அழகு, கம்பீரம்.


படம் எடுக்கணும்னு ஆதங்கம் இருக்கு. ஆர்வம் இருக்கு. இப்பவரைக்கும் லட்சுமி, பிஸியாத்தான் இருக்காங்க. தெலுங்குல மூணு படம் நடிச்சாங்க. மூணுமே நல்ல ஹிட்டு. கன்னடத்துல பண்ணிட்டிருக்காங்க. டாக் ஷோ பண்ணிட்டிருக்காங்க.


நான் கூட லட்சுமிகிட்ட சொன்னேன்... ‘லட்சுமி, போதுமே... குறைச்சுக்குவோம்’னு சொன்னேன். அவங்களும் சரின்னாங்க. சம்பாதிக்கணுங்கறதுக்காக நடிக்கலை. நடிச்சிக்கிட்டே இருக்கணும். அவ்ளோதான். தமிழில், திறமையான நடிகர், நடிகைகளுக்கு கதாபாத்திரம் எழுதுறதையே ஸ்கிரிப்ட் ரைட்டர்ஸ் மறந்துட்டாங்க. எல்லாமே ஹீரோதானே பண்ணிட்டிருக்காங்க இப்போ!


’பாவ மன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’லாம் பாருங்க... அவ்வளவு ஏன்... இந்தில இன்னும் அந்த பேட்டர்னைத்தான் ஃபாலோ பண்ணிட்டிருக்காங்க. படத்துல ஏழெட்டு கதாபாத்திரங்கள் இருக்குன்னா... அத்தனை கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்குறாங்க; மரியாதை கொடுக்குறாங்க. இங்கே, நம்மளைத் தெரிஞ்சிருந்தாக் கூட மரியாதை கொடுக்க மாட்டேங்கிறாங்க.


கள்ளபார்ட் நடராஜன்னு ஒரு நடிகர். அவரை என் ஸ்கூல வயசுல, ஊர்ல டிராமால பாத்திருக்கேன். நடிக்க வருவாரு. அப்புறமா, நான் நடிகனான பிறகு, ஒருநாள் ஏவிஎம்ல அவரைப் பாத்தேன். பாத்ததுமே அவரைக் கட்டிப்புடிச்சிக்கிட்டேன். ‘உங்களை என் ஸ்கூல்ல டேஸ்ல பாத்திருக்கேன் சார்’னு சொன்னேன். அவ்ளோ சந்தோஷமாயிட்டார். ஒரு பெரிய கலைஞனைப் பாராட்டுறது இருக்கட்டும்; ஒரு சின்ன நடிகரை பாராட்டும் போது, அதுதான் அவங்களுக்குக் கிடைச்ச பெரிய சொத்து.


அந்தக் காலத்துல பெருந்தன்மை இருந்துச்சு. நாகேஷ் சார், வி.கே.ஆர். சார், சுருளிராஜன் சார், வெண்ணிற ஆடை மூர்த்தி சார். இவர் வக்கீலுக்குப் படிச்சவர். அவ்ளோ தன்மையா, பண்பா, அன்பாப் பேசக்கூடியவங்க. அப்படியான நல்ல மனிதர்களை சந்திக்கிற வாய்ப்பு இப்போ எனக்குக் கிடைக்கலைன்னுதான் சொல்லணும்.
சிவாஜி சார் குடும்பத்துல பிறந்த அந்த நல்ல நினைவுகளோடயே இருக்கறேன். சிவகுமார் அண்ணன் என்னை தம்பி தம்பின்னுதான் கூப்பிடுவாரு.சிம்பிள் மேன். தவம் மாதிரி வாழ்ந்த மனுஷன். அதனால்தான் கடவுள் சூர்யா, கார்த்தின்னு ரெண்டு நல்ல பையன்களைக் கொடுத்திருக்காரு.


திரும்பவும் லட்சுமி பத்தி சொல்லணும்...


லட்சுமியை எனக்குக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. என் அம்மாவுக்கு நான் எந்த அளவுக்கு மரியாதையைக் கொடுக்கிறேனோ அதே மரியாதையை லட்சுமிக்குக் கொடுக்கறேன். என் அம்மா, என்னை எப்படிப் பாத்துக்கிட்டாங்களோ, அப்படித்தான் என்னைப் பாத்துக்கறாங்க லட்சுமி. என் மனசை நோகடிக்கமாட்டாங்க. நான், லட்சுமி, சம்யுக்தா மூணு பேருமே புத்தகங்களுக்குத்தான் செலவு செய்வோம். ரொம்ப அழகா, டிஸிப்ளனோட வாழ்ந்துட்டிருக்கோம்.


கடவுளுக்கும் லட்சுமிக்கும் நன்றி. வேறென்ன சொல்றது? அவங்களுக்கு நான் எதுவும் பண்ணினது இல்ல. அவங்கதான் எனக்கு நிறையப் பண்ணிருக்காங்க. எதுபத்தியும் எடுத்துக்கிட்டு கவலைப்படுறவங்க கிடையாது. தோல்வியைக் கூட ரொம்ப அழகா எடுத்துக்குவாங்க. ரொம்ப வித்தியாசமானவங்க லட்சுமி.
சில நேரங்கள்ல நானே துவண்டுபோனாக் கூட, ‘ஏன் என்னாச்சு? எதுக்கு கவலைப்படுறீங்க? நோ ப்ராப்ளம்’னு சொல்லித் தேத்துவாங்க.


சில சமயங்கள்ல, ‘ஏன் இவங்களாம் இப்படி இருக்காங்க?ன்னு சிலரைப் பாக்கும்போது தோணும். ஒருகாலத்துல இவங்களாம் என் ஃப்ரண்ட்ஸ்தானே? நேர்ல பாக்கும்போது கூட, ‘நல்லாருக்கியா’னு கேக்கமாட்டேங்கிறாங்களே. பேச நின்னா... ‘சிவா கார் வந்துருச்சு சிவா’ன்னு நழுவிடுவாங்க. கட்டிப்புடிச்சுக்குவாங்க. ஆனா டக்குன்னு நழுவுவாங்க. அந்தக் காரை ஒருநிமிஷம் நிக்கவைச்சுட்டு, எப்படி இருக்கேனு கேக்கறதுக்கு டைம் இல்லியா? அதனாலதான் ஒதுங்கிட்டேன்.
இப்ப உள்ள இளைஞர்கள்கிட்ட நெருங்கி, மரியாதைக் குறைவா ஆயிருமோனு ஜாக்கிரதையாவே அணுகவேண்டியிருக்கு.


பெரிய நடிகர்கள் வேணாம். சின்ன நடிகர்கள் போதும். ஏகப்பட்ட கோடிகள் வேணாம். சின்னதா ஆனா நல்லதா ஒரு படம் பண்ணனும். சின்னதா லாபம் வந்தாப் போதும். நிம்மதியாவும் கெளரவமாவும் வாழணும். அதானே சார் வாழ்க்கை?’’ என்று விகல்பமில்லாமல் சிரிக்கிறார் சிவசந்திரன்.


நடிகர் சிவசந்திரனின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x