Published : 19 May 2020 12:36 PM
Last Updated : 19 May 2020 12:36 PM

கரோனா ஊரடங்கில் இணையப் பயன்பாடு அதிகரிப்பு 

இந்தியாவில் மொத்தம் அறுபது கோடி போர் இணையச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலகத்தில் இணைய வழியாகத் திரைப்படங்களைப் பார்ப்பது, அலுவலகக் கூட்டங்களை நடத்துவது, வீடியோ கேம்ஸ், மாணவர்களுக்கான வகுப்புகள், மளிகைப் பொருட்களை வாங்குவது, சமூக வலைதளங்களின் பயன்பாடு ஆகியவை அதிகரித்துள்ளதால் நாட்டில் இணையச் சேவையின் பயன்பாடு ராக்கெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நான்காம் கட்டமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் ஐம்பது நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்தக் கரோனா கால விடுமுறையில் வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லமுடியாத நிலையில் இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுகுறித்த தரவுகளைச் சேகரிக்கும் ‘Kalagato’ நிறுவனம் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்கள் அதிகரிப்பு

இந்த ஊரடங்கு காலத்தில் ‘அமேசான் ப்ரைம்’, ‘நெட்ஃபிளிக்ஸ்’, ‘ஹாட் ஸ்டார்’, ‘ஜீ ப்ளஸ்’ உள்ளிட்ட வலைதளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்க்கும் தினசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 122 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் ‘ஸ்கைப்’, ‘ஹாங்கவூட்’ மற்றும் ‘ஜூம்’ போன்ற செயலிகளைப் பயன்படுத்தி வீடியோ கால் மூலம் பேசுபவர்களின் எண்ணிக்கையும் இந்த ஊரடங்கில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ‘ஜூம்’ செயலியை பயன்படுத்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுபவர்களின் எண்ணிக்கை 185 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் கூகுள் வலைதளத்தில் அலுவலகக் கூட்டங்களுக்கான செயலிகள் குறித்த தேடலின் எண்ணிக்கை மட்டும் 220 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் பெரும்பான்மையான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யக் கூறியுள்ளது. இதனால் மற்ற மீம்ஸ்களைவிட Work from Home (WFH) குறித்த மீம்ஸ்கள் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியின் பயன்பாடு முன்பை விட நாற்பது சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்குக்குப் பணம் செலுத்தும் முறை முன்பைவிட நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

இணையவழிக் கற்றல் அதிகரிப்பு

இந்த ஊரடங்கு காரணமாக நீண்ட விடுமுறையில் உள்ள மாணவர்கள் பலர் இணைய வழி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் இணைய வழி கணித வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இணைய வழிக் கற்றல் முறையில் சிறந்து விளங்கும் ‘BYJU’ செயலியை இந்த ஊரடங்கு காலத்தில் தரவிறக்கம் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 43 சதவீதமாகும்.

சரிவில் இ-வர்த்தக நிறுவனங்கள்

இந்த ஊரடங்கு காலகத்தில் ‘பிளிப்கார்ட்’, ‘அமேசான்’, ‘ஸ்னாப்டீல்’ போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. கடல் மற்றும் வான்வழிப் போக்குவரத்து முடக்கம் காரணமாக குடோன்களின் பொருட்களின் தேக்கம் மற்றும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டுசேர்க்கும் பணியாளர்கள் எண்ணிக்கை குறைப்பு போன்ற காரணங்களால் இந்நிறுவனங்களில் கடந்த பிப்ரவரி, ஏப்ரல் மாதம்வரை இணைய வர்த்தகத்தின் பயன்பாடு 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் இணைய வழியாகச் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் ‘பிக் பாஸ்கெட்’, ‘டி மார்ட்’ போன்ற நிறுவனங்கள் மாளிகை மற்றும் காய்கறிகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதன் மூலம் ஊரடங்கில் இந்நிறுவனங்களின் வர்த்தகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் உணவு விநியோகத்தில் ஈடுபட்டுவந்த ‘ஸ்விக்கி’, ‘ஜோமாட்டோ’ ஆகியவை தங்களுடைய மாதாந்திர வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் 52 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

குறைந்த இணைய வேகம்

நாட்டில் மொத்தம் அறுபது கோடி பேர் இணையச் சேவையைப் பயன்படுத்திவருகிறார்கள். அவர்களில் 29 கோடி பேர் கிராமப்புறங்களில் உள்ளனர். இந்த ஊரடங்கு காலத்தில் கிராமப்புற பகுதிகளிலும் இணையச் சேவையின் பயன்பாடு நூறு சதவீதம் அதிகரித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பயன்படுத்தப்படும் பிராட்பேண்ட் பயன்பாடு 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் மொபைல் பிராட்பேண்ட் பயன்பாடு நகரங்களில் அதிகரித்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் இணையச் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இணையச் சேவை விரைவாகக் (Speed) கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையப் பயன்பாடு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ‘Ooklaa’ நிறுவனம் இந்தியாவில் ஊரடங்கிற்கு முன்பு ஒரு நொடிக்கு 39.65Mbps இருந்த இணைய வேகம் ஊரடங்கிற்குப் பிறகு நெடிக்கு 35.98Mbps என இணையத்தின் வேகம் குறைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x