Last Updated : 16 May, 2020 07:05 PM

 

Published : 16 May 2020 07:05 PM
Last Updated : 16 May 2020 07:05 PM

ஆரம்பம் அதிரடி.. அடுத்தது நெகிழ்ச்சி!

சரவெடி சரண் எழுதி ஹிப் ஹாப் தமிழா ஆதி பாடியிருக்கும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கௌஷிக் கிருஷ். பொதுவாக பாடல்கள் எல்லாமே கதையின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல்தான் இடம்பெறும். ஆனால் இந்தப் பாடலின் மையத்தை, “இந்த சாங் எதுக்கு போட்டோன்னு எங்களுக்கே தெரியாது” என்னும் வரிகள் வெளிப்படுத்தி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

கௌஷிக் இசையமைப்பாளராக இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானாலும், ஒரு பாடகராக ஏற்கெனவே இளைஞர்களின் காதுகளுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். கண்ணாலே கண்ணாலே (தனி ஒருவன்), காதலிக்காதே (இமைக்கா நொடிகள்), என்னதாந்தாலும் (மீசைய முறுக்கு), ஹாய் சொன்னா போதும் (கோமாளி) படங்களில் இவர் பாடிய சில பாடல்களும் இளைஞர்களைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை என்று எண்ணவைப்பவை.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த பல படங்களுக்கும் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் ஒலிப்பொறியாளராக இருந்த அனுபவம் இசையமைப்பாளராக என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது என்கிறார் கௌஷிக்.

'எருமசாணி' புகழ் ரமேஷ் வெங்கட் தன்னுடைய முதல் படமான 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் மூலமாக கௌஷிக் கிருஷ்சை இசையமைப்பாளராக்கியிருக்கிறார்.

கரோனா ஊரடங்கின் காரணமாக பெரிய அளவில் படத்தின் டைட்டில் டிராக்கை வெளியிட நினைத்து முடியாமல் போனதில் வருத்தமாக இருந்த படக்குழுவினர், பாடலுக்கு யூடியூபில் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பார்த்து உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதே உற்சாகத்தில் படத்தின் அடுத்த பாடலில் கவனம் செலுத்திவருகிறார் கௌஷிக். “இதுவும் அதிரடிப் பாடலா?” என்றால், “இல்லை.. இது தாயின் பெருமை பேசும் நெகிழ்ச்சியான ஒரு பாடல்.. சக்திஸ்ரீ கோபாலன் இந்தப் பாடலைப் பாடவிருக்கிறார் என்றார் கௌஷிக் புன்னகை புல்லாங்குழலைக் காற்றில் தவழவிட்டபடி!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x