Last Updated : 14 May, 2020 04:32 PM

 

Published : 14 May 2020 04:32 PM
Last Updated : 14 May 2020 04:32 PM

’’இளையராஜா சார் ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்கு சம்பளமே வாங்கலை!’’ இயக்குநர் பி.வாசு மனம் திறந்த பேட்டி 

‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தை பாரதி வாசு என்ற பெயரில் சந்தான பாரதியும் பி.வாசுவும் இணைந்து இயக்கினார்கள். 81-ம் ஆண்டு வெளியானது ‘பன்னீர் புஷ்பங்கள்’.


இந்தப் படம் குறித்து இயக்குநர் பி.வாசு தெரிவித்ததாவது :


’’நானும் பாரதியும் (சந்தானபாரதி) டைரக்டர் ஸ்ரீதர்கிட்டதான் அஸிஸ்டென்டா இருந்தோம். அப்பவே, நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து படம் பண்ணலாம்னு ஐடியால இருந்தோம். பாரதி கொஞ்சம் முன்னாடியே ஸ்ரீதர் சார்கிட்ட சேர்ந்துட்டாரு. நான் அப்புறமாத்தான் சேர்ந்தேன்.


’மீனவ நண்பன்’ படத்துலதான் சேர்ந்தேன். முழுசா கத்துக்கிட்டதுன்னா, அது ‘இளமை ஊஞ்சலடுகிறது’ படத்துலதான். அதுக்கு முன்னாடி என் பேரைச் சொல்லி கூப்பிடவே மாட்டாரு. பாரதி மிகப்பெரிய தயாரிப்பாளரோட மகன். ‘பாசமலர்’லாம் தயாரிச்ச சந்தானம், அவங்க அப்பா.என் அப்பா பீதாம்பரம். எம்ஜிஆர், என்.டி.ஆர்.க்கெல்லாம் மேக்கப் மேன்.


’இளமை ஊஞ்சலாடுகிறது’ல ஒர்க் பண்ணும்போது 23 வயசு. 19 வயசுலயே சினிமாவுக்கு வந்துட்டேன். ‘என்னய்யா, ஒரு மூணு படம் பண்ணினதுமே படம் டைரக்ட் பண்றேன்னு சொல்றீங்களேன்னு கேட்டார் ஸ்ரீதர் சார்.


எங்க ரெண்டுபேரையும் இணைச்சு, எங்களுக்கு ‘பாரதி வாசு’ன்னு பேர் வைச்சு, ‘பன்னீர் புஷ்பங்கள்’ வர்றதுக்கு மிக முக்கியமான காரணம் கங்கை அமரன். பாரதியும் அமரும் (கங்கை அமரன்) செம க்ளோஸ். நல்ல நண்பர்கள். எனக்கு அமரை அவ்வளவா தெரியாது. ஓரளவு பழக்கம்.


ஸ்ரீதர் சார் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ன்னு படம் எடுக்க ஆரம்பிக்கும் போது, அமர் பாரதிகிட்ட, ‘டேய், எப்படியாவது ஸ்ரீதர் சார்கிட்ட அண்ணனை (இளையராஜா) சொல்லுடா, இந்தப் படத்துக்கு அண்ணன் இசையமைச்சா நல்லாருக்கும்’னு சொன்னார். ’எனக்குலாம் அந்த தைரியம் இல்ல’ன்னு பாரதி சொன்னார்.


இதை எங்கிட்ட சொல்லும்போது, ‘சரி வா, ரெண்டுபேரும் சேர்ந்தே போய்க் கேப்போம்’னு சொன்னேன். அப்போ படத்துக்கு வேற ஹீரோ ரெண்டுபேர் போட்ருந்தார் ஸ்ரீதர் சார். நாங்க போய், ‘ஹீரோ ரோலுக்கு கமலும் ரஜினியும் பண்ணினா நல்லாருக்கும். இளையராஜா மியூஸிக் போட்டா சூப்பரா இருக்கும்’னு சொன்னோம். திட்டிட்டார் ஸ்ரீதர் சார்.


’இல்ல சார், ‘16 வயதினிலே’ படம் வந்து நல்லாப் போயிருக்குல்ல சார்’னு விவரமா சொன்னோம். ஒருவழியா, கமல் - ரஜினிக்கு ஓகே சொன்னாரு. பாரதி போய் கமல் சார்கிட்ட பேசினார். நான் போய் ரஜினி சாரைக் கூட்டிட்டு வரேன். ‘ஸ்ரீதர் சாரா, ஸ்ரீதர் சாரா’ன்னு ரஜினி வந்தார். ரெண்டுபேரையும் ஓகேன்னு சொல்லிட்டார் ஸ்ரீதர் சார்.
அடுத்து... இசை. இளையராஜா சார். ஆல்ரெடி... ஒரு இசையமைப்பாளரைப் போட்டுட்டார் ஸ்ரீதர் சார். நாமெல்லாம் மலைச்சுப் போற அளவுக்கு இருந்த எம்.எஸ்.வி. சார் ஸ்ரீதருக்கு எப்பவும் இருக்காரே! இருந்தாலும் இளையராஜா சாரைச் சொன்னோம். ’உங்களுக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும் சார்’னு சொன்னோம். திட்டினாரு.
மறுநாள் போனோம். அங்கே இளையராஜா சார், ரெண்டு பாட்டு போட்டுக்கொடுத்துட்டாரு. பாஸ்கர் தபேலா வாசிக்கிறாரு. கங்கை அமரன் கிடார் வாசிக்கிறாரு. வாலி சார் உக்கார்ந்து பாட்டு எழுதிட்டிருக்கார். உள்ளே நாங்க நுழைஞ்சதுமே... ‘ராஜா, இந்தப் படத்துல நீ இருக்கறதுக்குக் காரணமே இவங்க ரெண்டுபேரும்தான்’னு எங்களைக் காட்டிச் சொன்னார்.


அப்போ ராஜா சார் எங்களைப் பார்த்தார். எங்களுக்காக முதல் பாட்டையும் ரெண்டாவது பாட்டையும் வாசிச்சுக் காண்பிச்சார். ’ஒரேநாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ன்னு வாசிக்கிறார். எங்களுக்கு எங்கேயோ பறக்கிற மாதிரி இருக்கு.


அப்புறமா, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ முடிஞ்சதும் ஸ்ரீதர் சார்கிட்ட படம் பண்ணப் போறோம்னு சொன்னப்ப, ஒரு பயத்தோடதான் அனுப்பிவைச்சார். ‘நல்லாப் பண்ணுங்க’ன்னு வாழ்த்தினார்.


கங்கை அமரன், ஒரு புரொட்யூசர்கிட்ட கூட்டிட்டுப் போனார். கதையெல்லாம் கேட்டார். பிடிச்சிருந்துச்சு. பண்ணலாம்னார். ஆனா ஒருமாசம் கழிச்சு, இப்போ படம் பண்ணலைன்னு சொல்லிட்டார். இப்படி நிறைய புரொட்யூசர்கிட்ட கங்கை அமரன் கூட்டிட்டுப் போனார். இது ஒருவருஷமா நடந்துட்டிருக்கு.
இதுல பாரதி ரொம்பவே அப்செட். அப்புறம் கங்கை அமரன் மூலமாவே ஒரு தயாரிப்பாளர் கிடைச்சார். ஓகே. அடுத்து இசை இளையராஜா சார். இசையமைக்க அவரைக் கேக்கணும். ரெண்டுபேரும் ராஜா சார்கிட்ட போனோம். ‘அண்ணே, ரெண்டுபேரும் சேர்ந்து படம் பண்றோம்ணே. நீங்கதாண்ணே மியூஸிக் போட்டுத் தரணும்’னு கேட்டோம்.


‘அப்படியா, சரி’ன்னு சொன்னார். ‘எவ்ளோ கொடுப்பீங்க?’ன்னு கேட்டார். ‘நீங்கதாண்ணே சொல்லணும்’னு சொன்னோம். கதை சொல்லுங்கன்னாரு. சொன்னோம். ‘சரி படத்தை ஆரம்பிங்க, பாக்கலாம்’னு சொல்லிட்டாரு.


பூஜை விமரிசையா நடந்துச்சு. பாட்டு போட்டுக் கொடுத்தாரு. அமர்க்களமா இருந்துச்சு. ஒருநாள், பிரசிய்டென்சி ஹோட்டலுக்குள்ளே நுழையறோம்... எதிர்ல ரஜினி சார். ‘டிஸ்கஷனுக்கு ரூம் போடப் போறோம் சார்’னு சொன்னோம். ‘எதுக்கு ரூம்? என் ரூம் எடுத்துக்கோங்க. இந்தாங்க சாவி’ன்னார். சாவியைக் கொடுத்தார். இது ஒருபக்கம்.
அடுத்து, காலைலேருந்தே வேலை கமல் சார் வீட்ல ஆரம்பிச்சிரும். அதனால சாப்பாடு எல்லாமே கமல் சார் வீட்லதான். மதியம் சாப்பாடு கமல் சார் வீட்லேருந்து வந்துரும். நாங்க போய் சாப்பிடுவோம்.


கமல் சாருக்கு இந்தக் கதை மேல பெரிய இஷ்டம். படத்துல வர்ற டீச்சர் கேரக்டர், கமல் பண்ணினாலும் பண்ணுவார்னு இருந்துச்சு. ஏன்னா, பாரதியும் கமல் சாரும் ஒண்ணா டுடோடரியல்ல படிச்சவங்க. ரெண்டுபேரும் வாடாபோடா நண்பர்கள். அப்புறம் கமல் சார் எங்ககிட்ட, ‘இந்தப் படம் ஹீரோவை வைச்சு நிக்கிற படமில்ல. நீங்க நில்லுங்க. ஒரு டைரக்டரா ஜெயிக்கணும் நீங்க. அதனால நான் பண்ணலை’ன்னு சொன்னார். என்னடா இது, கமல் சார் நடிச்சுக் கொடுக்கலையேனு நினைச்சோம்.
அப்புறம், தயாரிப்பாளருக்கு பணமில்லைன்னு நகர்ந்துட்டார். என் அப்பாகிட்ட கேட்டேன். ஒருலட்ச ரூபா கொடுத்தார். ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்கு மொத்த பட்ஜெட் அஞ்சு லட்ச ரூபா. அப்பா, பைனாஸுக்கு சொல்லிவைச்சிருந்தார். அவர்கிட்ட போய் கதையை, சீன் பை சீன் சொன்னோம். ஸ்கூல் எங்கேன்னு கேட்டார். விவரம் சொன்னோம். ஊட்டில கேட்டி ஸ்கூல்னு சொன்னோம். ‘நான் படிச்ச ஸ்கூல்ங்க அது’ன்னு உற்சாகமாயிட்டார். அவர் பேரு அமர்நாத். மீதப் பணத்தை அவர்தான் கொடுத்தார்.


ஆனா எல்லாமே கங்கை அமரன் தான். எனக்கும் பாரதிக்கும் அந்தப் படம் பண்ணின மாதிரியே தெரியாது. ஏன்னா, எல்லாவேலையையும் இழுத்துப் போட்டுச் செஞ்சார் கங்கை அமரன். எனக்கும் பாரதிக்கும் நல்ல ‘பாண்டிங்’ இருந்துச்சு வேற. ஒர்க் ஸ்மூத்தாப் போச்சு.


படத்துக்கு ரீரிக்கார்டிங். ராஜா சார் எவ்ளோ சம்பளம் கேப்பாரோனு பயம் எங்களுக்கு. இன்னும் சொல்லாமலே இருக்கார். ரீரிக்கார்டிங் கேட்டுட்டு மிரண்டுபோயிட்டோம். இங்கிலீஷ் படம் மாதிரி மியூஸிக் போட்டார்.


அப்புறம் கங்கை அமரனைக் கூப்பிட்டு, ‘என்ன அமரு, அண்ணன் ஒண்ணும் சொல்லல. எவ்ளோ சம்பளம்னு கேட்டுச் சொல்லு’ன்னு சொன்னோம். அமர் ராஜா சார்கிட்ட கேட்டார். ‘என்னய்யா சம்பளம் சொல்லணும்?’னு எங்களைப் பார்த்து ராஜா சார் கேட்டார். ’இல்லண்ணே, பைனான்ஸ் வாங்கி படம் எடுக்கறோம். டைட்டுதாண்ணே. நீங்க சொல்லுங்கண்ணே’ன்னு சொன்னோம். உடனே ராஜா சார் ‘ஃப்ரீய்யா’ன்னு சொன்னாரு.


’அண்ணே, என்னண்ணே’ன்னு திரும்பவும் கேட்டோம். ’ஃப்ரீய்யா... பணம் வேணாம். நீங்கதானேய்யா ஸ்ரீதர் சார்கிட்ட நான் வேணும்னு சொல்லி சண்டை போட்டீங்க?’ன்னு சொன்னார். அப்படியே ஷாக்காயிட்டோம். ’முதல் படம்தானே... பண்ணுங்க. ஜெயிச்சிருங்க... அடுத்தாப்ல பாக்கலாம்’னு ராஜா சார் சொன்னாரு. ’பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்கு இசையமைக்க இளையராஜா சார் சம்பளமே வாங்கலை.


அப்போ ராஜா சாருக்கு லட்சத்துக்கும் மேல சம்பளம். நாங்க ரொம்ப வற்புறுத்தி, பதினஞ்சாயிரம் ரூபா கொடுத்தோம்.
எல்லாப் பாட்டுகளும் சூப்பர் ஹிட்டு. படம் பாத்துட்டு ‘ரொம்ப நல்லாருக்குய்யா’ன்னு ராஜா சார் பாராட்டினார்’’ என்று இயக்குநர் பி.வாசு தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் பி.வாசுவின் வீடியோ பேட்டியைக் காண :

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x