Last Updated : 12 May, 2020 06:40 PM

 

Published : 12 May 2020 06:40 PM
Last Updated : 12 May 2020 06:40 PM

’’ஏவிஎம் சரவணன் எடுத்த நல்ல கத்தரிக்காய்; நான் தேர்வு செஞ்ச சொத்தை கத்தரிக்காய்!’’ - பிரத்யேகப் பேட்டியில் விசு சொன்ன விவரங்கள்

''பின்னாடி நான் ‘அரட்டை அரங்கம்’, ‘மக்கள் அரங்கம்’ நடத்தினதுக்கெல்லாம் அந்த அம்மையப்ப முதலியார் கேரக்டர்தான் மிக முக்கிய காரணம். ஒரு குடும்பத்தலைவனா ஏத்துக்கிட்டவங்க, நான் சொன்னதையும் இதுல ஏத்துக்குவாங்கன்னு நம்பி, இறங்கினேன். இது அத்தனைக்கும் பேஸ்... ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று விவரித்தார் விசு.


’சம்சாரம் அது மின்சாரம்’ படம் வெளியான நாளையொட்டி (ஜுலை 18, 1986) கடந்த வருடம் விசு ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பிரத்யேக வீடியோ பேட்டி இது.


அந்தப் பேட்டியின் எழுத்தாக்கம் இது :


''வ.உ.சி., பாரதியார், சுப்ரமணிய சிவா, சரோஜினி நாயுடு இவங்களை நினைவுபடுத்துற மாதிரி கேரக்டர்களுக்கு பெயர் வைச்சேன். கேரக்டருக்கு பேர் வைக்கிறதுக்கு ரொம்பவே யோசிப்பேன். மனோரமா கேரக்டருக்கு ‘கண்ணம்மா’னு பேர் வைச்சேன். பாரதியை நினைவுல வைச்சுத்தான் இந்தப் பேர் வைச்சேன்.


அப்படித்தான்... கமலா காமேஷ் கேரக்டருக்கு ‘கோதாவரி’ன்னு பேர் வைச்சேன். ரொம்ப பிரபலமான நதி. புகழ்வாய்ந்த நதி.ஆனா தமிழ் சினிமால இந்தப் பேர் வைச்சதே இல்ல. நீங்க சொன்னது போல, இந்தப் படம் வெளியாகி 33 வருஷத்துக்கு மேல ஆச்சு. மீம்ஸ்ல ‘கோதாவரி கோட்டைக்கிழி’ங்கற வசனமும் பேரும் இன்னிக்கி வரைக்கும் சொல்லிக்கிட்டிருக்காங்க.


அப்போ, தெலுங்குப் படங்கள்ல நான் இன்வால்வ் ஆகி ஒர்க் பண்ணிக் கொடுத்துக்கிட்டிருந்தேன். அங்கே கோதாவரிங்கற பேர் சர்வசாதாரணம். அதைக் கொண்டு வந்து இங்கே வைச்சேன். ‘டெளரி கல்யாணம்’ பாத்தீங்கன்னா, அதுல ‘ராஜகலவை’ன்னெல்லாம் பேர் வைச்சிருப்பேன்.


’சம்சாரம் அது மின்சாரம்’ படத்துல பாடல்களும் ஹிட்டாச்சு. இதுல ஒண்ணு சொன்னா, அது நல்லா இருக்குமா இல்லையானு தெரியல. இந்த மியூஸிக் டைரக்டர்ஸெல்லாமே ஒரு படம் பண்ணும்போது, இதுல எந்த ஹீரோ இருக்காங்கன்னு பாக்கறாங்க. எடுக்கிற தயாரிப்பாளர் யாருன்னு பாக்கறாங்க. இதுக்குத் தகுந்தா மாதிரிதான் சப்ளை பண்றாங்க. இதைக் குற்றச்சாட்டா நான் சொல்லல.


எப்படி அத்தனை ரஜினி பாடல்களும் அமையுது? எப்படி அத்தனை கமல் பாடல்களும் அமையறது? அந்த அளவுக்கு மத்த ஹீரோஸ் பாடல்கள் அமையுதா? ’ஏவிஎம் எடுக்கிறாங்க, ஏவிஎம் எடுக்கிறாங்கன்னு மியூஸிக் போடுறாங்க. இதே சங்கர் கணேஷை வைச்சு எத்தனைப் படம் பண்ணிருக்கேன் நான்?


சரி... இன்னொரு விஷயமும் இருக்கு.


வீட்டு வாசல்ல கறிகாய் வருது. கத்தரிக்காய் எடுக்கிறேன்னு சொத்தை கத்தரிக்காயா எடுத்தா...? ஏவிஎம் சரவணன் நல்ல கத்தரிக்காயா எடுத்தார். நான் பல படங்கள்ல சொத்தை கத்தரிக்காயா எடுத்தேன். அதான் உண்மை.


‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்துல எந்த சீன் எழுதினேனோ அதை அப்படியே எடுத்தேன். எந்த மாற்றமும் செய்யலை. ஒரேயொரு சீன் மட்டும்தான் மாத்தினேன். அது கோயிலுக்கு வந்து குழந்தையைப் போடுற சீன். எழுதும்போது மனோரமா ஆச்சிதான், அங்கே வந்து குழந்தையைப் போடுறாங்கன்னு எழுதலை.


லட்சுமிதான் கோயிலுக்கு வந்து, ‘உங்க வீட்லேருந்து உங்களோட எந்தப் பொருளும் எடுத்துக்கலை. இது யாருக்கு சொந்தம்? என் வயித்துல வந்ததால குழந்தை எனக்குச் சொந்தமா? உங்க குடும்பத்துல பிறந்ததால, உங்களுக்குச் சொந்தமா மாமா?’ன்னு கேக்கற மாதிரிதான் எழுதிருந்தேன்.


மறுநாள் காலைல கோவூர்ல ஷூட்டிங். முதல்நாள் ஷூட்டிங் முடிச்சிட்டு நானும் என் தம்பியும் கார்ல வரோம். ‘என்னடா ஒண்ணுமே பேசாம வர்றியே?’ன்னு தம்பி கேட்டான். ‘ஏதாவது யோசனையா?’ன்னு கேட்டான். ஆமாம்னேன். ’லட்சுமியே கோயிலுக்கு வந்து வாதாடிட்டு, அப்புறம் லட்சுமியே பிரிஞ்சே இருப்போம்னு சொன்னா நல்லாருக்குமா?ன்னு கேட்டேன்.


உடனே வண்டியை ஓரமா நிறுத்தினோம். அப்போ செல்போனெல்லாம் கிடையாது. முதல்வேலையா லட்சுமிக்கு போன் பண்ணினேன். ‘ஒரு முக்கியமான விஷயம்... வீட்டுக்கு வரணும். வரலாமா’னு கேட்டேன். ‘பரவாயில்ல, போன்லயே சொல்லுங்க’ன்னு சொன்னாங்க. ‘இல்ல, நேர்ல சொன்னாத்தான் சரியா இருக்கும்’னு சொன்னேன். ‘எப்பேர்ப்பட்ட விஷயமா இருந்தாலும் சரி, சொல்லுங்க’ன்னு சொன்னாங்க.


‘நாளைக்கி கோயில்ல வந்து குழந்தையைக் கொடுக்கிற சீன். நீயே அங்கே வந்து கொடுத்துட்டு, அப்புறம் நீயே பிரிஞ்சிருவோம்’னு சொன்னா நல்லாருக்குமா?’ன்னு கேட்டேன். ஒருநிமிஷம் கூட யோசிக்கலை லட்சுமி. உடனே... ‘அடிச்சாய்யா லக்கி ப்ரைஸ் மனோரமா’ன்னு சொன்னாங்க. கதைல அவ்ளோ இன்வால்வ்மெண்டாகி இருந்தாங்க. அத்தனை டெடிகேஷனோட அந்தப் படத்துல ஒர்க் பண்ணிருந்தாங்க. அதனாலதான் ஷார்ப்பா சொன்னாங்க.


‘நாளைக்கி நான் வேற படத்துக்கு கால்ஷீட் கொடுத்துக்கறேன். முதல்ல மனோரமாவைப் பிடிங்க’ன்னு சொன்னாங்க லட்சுமி. இப்பலாம், நல்ல நல்ல சீனெல்லாம் தனக்கு வரணும் தனக்கு வரணும்னு ஆசைப்படுறாங்க. எல்லாருக்கும் வரணும்னு நினைக்கிறதே இல்ல. அந்தந்த சீன், அந்தந்த கேரக்டருக்குத்தான் போகணும். அப்படி இல்லேன்னா உருப்படாது.


மனோரமா மறுநாள் 9 மணிக்கு வேற ஒரு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தாங்க. காலைல ஏழுலேருந்து ஒன்பது வரைக்கும் வந்தாப் போதும்னு சொன்னேன். மனோரமாவுக்கு அந்த சீன் என்னன்னே தெரியாது. அவங்களுக்கு அந்த சீன் சொல்லணும்னு, தெரிஞ்சுக்கணும்னு அவசியமே இல்லையே! காலைல 7.20 மணிக்கு ஆரம்பிச்சேன். எட்டரைக்கெல்லாம் மனோரமா போர்ஷனை முடிச்சு அனுப்பிச்சிட்டேன். படத்துல அந்த சீன் எப்படி வந்திருக்குன்னு எல்லாருக்குமே தெரியும்.
பேனாதானே. எழுத்துதானே. இதுமாதிரி இப்ப எழுதமாட்டேங்கிறாங்களே!’’ என்று வேதனையுடன் தெரிவித்தார் விசு.

- நினைவுகள் தொடரும்


விசுவின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x