Last Updated : 10 May, 2020 12:15 PM

 

Published : 10 May 2020 12:15 PM
Last Updated : 10 May 2020 12:15 PM

கரோனா காலத்திலும் உதவி; கல்விப் பணிக்கும் உதவி!- கார்ப்பரேட் துறையில் மனித வள அதிகாரியாகப் பணியாற்றும் திருநங்கை சுஜாதா

சென்னை வேளச்சேரியில் வசித்துவருபவர் திருநங்கை சுஜாதா. இம்ப்ளிமென்டர்ஸ் ரீடெயில் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மனித வள அதிகாரியாகப் பணியிலிருக்கிறார். திருநங்கையாக கார்ப்பரேட் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் இவர் இதற்காக பல அமைப்புகளிடமிருந்து சிறப்பு விருதுகள் பெற்றிருக்கிறார்.

சமூக ஆர்வலர், ஆலோசகர் மற்றும் தன்னார்வலர் என இவருக்கு பல பரிமாணங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் திருநங்கைகளுக்கு உடல் சார்ந்த மனம் சார்ந்த சமூகப் பணிகள் செய்துவருகிறார். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும் நேரங்களில் சட்ட ரீதியான உதவிகளை தோழி அமைப்பு மூலமாக வழங்கி வருகிறார். அண்மையில் அல்லாட் வாய்ஸ் மற்றும் அப்போலா மருத்துவமனை இணைந்து விபத்து நடக்கும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி அளிக்கும் பயிற்சிப் பட்டறையை நடத்தியது. அதில் பயிற்சி முடித்த சான்றிதழும் பெற்றிருக்கிறார் சுஜாதா.

சமூகத்தின் ஓர் அங்கமான திருநங்கைகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் இந்நாளில் அவர்களுக்காக செயல்படும் தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகளையும் மீறி, அவர்களுக்கான அடிப்படை வாழ்வாதாரங்களான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் போன்றவை கிடைப்பதற்கு தன்னுடைய பணியில் இருக்கும் நல்ல உள்ளங்களையும் ஒன்றிணைத்து செயல்பட்டுவருகிறார் சுஜாதா. கரோனா பாதிப்புக்கு முன் அவர் செய்துகொண்டிருந்த பணிகள் குறித்தும் தற்போது ஊரடங்கின்போது அவர் செய்துகொண்டிருக்கும் பணிகல் குறித்தும் அவர் நம்மிடம் பேசியதிலிருந்து…

“கரோனா பாதிப்பு பொதுச் சமூகத்தில் ஏற்படாத காலங்களில் கல்வி வேலைவாய்ப்பு, தனித்திறன் பயிற்சிகள் ஆகியவற்றை திருநங்கைகளுக்கு வழங்கிவந்தோம். அரசின் நலத் திட்ட உதவிகளை திருநங்கைகளுக்கு பெற்றுத் தருவது, திருநங்கைகளின் உடல், மனம் சார்ந்த சமூகம் சார்ந்த விசயங்களை ஊடகங்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை,கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தோம்.

தற்போது கரோனாவால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவால் தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு எனது முகநூல் நண்பர்கள் தன்னார்வ அமைப்புகள் நண்பர்கள் ஆகியோர் மூலம் பொருட்களை வாங்கி சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வசிக்கும் திருநங்கைகளுக்கு நிவாரண உதவி செய்துவருகிறேன். கடந்த ஒரு மாதமாக சுமார் 250க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கியுள்ளேன்.

திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகள் இருப்பதாக என்னை வாட்ஸ்அப்பில் நண்பர்கள் தகவல் தெரிவிப்பார்கள். அதை திருநங்கைகளின் வாட்ஸ்அப் குழுக்களுக்கு பகிர்வேன். என்னிடம் வேலை வாய்ப்பு குறித்து பேசுபவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ற வேலைகளில் சேர்வதற்கு உதவுவேன். ஒருவர் காவல் துறையில் தேர்வாவதற்கான வசதிகளை செய்து கொடுத்தேன்.
திருநங்கைகளில் பலரும் ஆண் அடையாளத்துடன் பணியில் சேர்ந்திருப்பார்கள். பின்னாளில் அவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின், திருநங்கையாக பணியைத் தொடர்வதில் நிறைய பிரச்சினைகள் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கான மருத்துவ சான்றிதழ்களை முறையாக வாங்கி அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் நிர்வாகத்துக்கு அனுப்பி, அவர்களின் நிலைமையை புரியவைக்கிறேன். தமிழகத்திலுள்ள 500க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு பெயர் மாற்றம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களுக்கு பாலின அறுவை சிகிச்சை செய்ததற்கான மருத்துவ சான்றிதழ் வாங்கி அளித்துள்ளேன்.

திருநங்கைகளுக்கான கல்வித் தகுதியின் அடிப்படையில் தனித் திறன் பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் என்னிடம் அணுகுவார்கள். அவர்கள் தரும் தகவல்களை எங்கள் திருநங்கைகளுக்கு எடுத்துரைப்பேன். திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு திருநங்கைகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலையை பற்றி எடுத்துரைத்து, அவர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் பரிந்துரை செய்வேன் என்றார் திருநங்கைகளின் திறமையை விட்டுக்கொடுக்காத சுஜாதா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x